தேவல முனிவர்

From Tamil Wiki
Revision as of 23:07, 12 December 2022 by Jeyamohan (talk | contribs)
தேவலர், தேவாங்க புராணம்

தேவல முனிவர் : இந்து புராணங்களில் கூறப்படும் முனிவர். தேவலர் பற்றி புராணங்கள் சொல்லும் குறிப்புகளில் இருந்து மூன்று தேவலர்கள் இருந்தனர் என்று தெரியவருகிறது.

தேவலர் 1

மகாபாரதத்தின் கஜேந்திர மோட்சம் கதையில் சொல்லப்படுபவர். இவர் எட்டு வசுக்களில் ஒருவரான பிரத்யூஷனின் மகன். (மகாபாரதம் ஆதி பர்வம். 66 ஆம் அத்யாயம்)

தேவலர் 2

இவர் தௌம்ய முனிவரின் மூத்த சகோதரர். ஜனமேஜயன் நாகங்களை ஒழிக்கும்பொருட்டு நடத்திய சர்ப்பசத்ர வேள்வியில் இவரும் பங்கெடுத்தார். (மகாபாரதம் ஆதிபர்வம் 53 ஆம் அத்யாயம்) கிருஷ்ணன் துவாரகையில் இருந்து அஸ்தினபுரி செல்லும் வழியில் தேவலரை சந்தித்ததாகவும், மகாபாரத போர் முடிந்தபின் தேவலர் யுதிஷ்டிரரைச் சந்தித்தகாகவும் மகாபாரதம் சொல்கிறது (மகாபாரதம் சாந்தி பர்வம். 229 ஆம் அத்தியாயம்) தேவலருக்கு சர்வசலை என்னும் மகள் இருந்தாள். அவள் சுயம்வரத்தில் முனிவர் மகனாகிய ஸ்வேதகேதுவை கணவனாக ஏற்றுக்கொண்டாள். மகாபாரதம் சாந்திபர்வம், தாக்ஷிணாத்ய பாடம் 22 ஆம் அத்தியாயம்)

தேவலர் 3

இவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் ஒரு மாணவர். இவர் அஸிதர் என்னும் முனிவருக்கும் சிவன் அளித்த வரத்தால் பிறந்தவர். அவருடைய அழகில் மயங்கிய ரம்பை அவரை கவர முயல அவர் அவளை நிராகரித்தார். அவள் அளித்த தீச்சொல்லால் தேவலர் அழகற்ற தோற்றம் கொண்டார். உடலில் எட்டு கோணல்கள் இருந்தமையால் அவர் அஷ்டவக்ரர் என அறியப்பட்டார். ஹிமவான் (இமையமலை) மகளான எகபர்ணையை தேவலர் மணந்தார்

தேவலர் 4

தேவாங்க சாதியினர் இம்முனிவரிடமிருந்து உருவானார்கள் என்று தேவாங்க புராணம் குறிப்பிடுகிறது. முதல் மனிதனாகிய மனுவின் வம்சமாகிய மனிதர்களுக்கு ஆடைகளை உருவாக்கி அளிக்க எவருமில்லாமல் இருந்தமையால் அவர்கள் இலைதழைகளை அணிந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டமையால் சிவன் தேவலன் என்னும் இளைஞனை உருவாக்கினார். அவன் திருமாலிடம் சென்று அவர் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப்பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிக்கவேண்டும் என்றும், தேவர்களின் அங்கங்களை உன் ஆடைகள் அலங்கரிப்பதால் அவனுக்குத் தேவாங்கன் என்ற பெயர் வரும் என்றும் , அவன் ஆமோத நகரை ஆட்சி செய்யலாம் என்றும் ஆணையிட்டார். (தேவாங்க புராணம்)

உசாத்துணை

  • அபிதான சிந்தாமணி
  • புராணிக் என்ச்சைக்ளோபீடியா வெட்டம் மாணி