தந்திர பூமி

From Tamil Wiki
Revision as of 00:22, 29 November 2022 by Jeyamohan (talk | contribs)
தந்திரபூமி

தந்திரபூமி (1969) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். இந்நாவல் டெல்லியையும் அதன் அதிகார வர்க்கத்தையும் கதைக்களமாகக் கொண்டது. டெல்லியின் அரசியல்சூழ்ச்சிகளையும் ஒழுக்கச்சிதைவுகளையும் விமர்சிக்கும் பகடித்தன்மை கொண்ட படைப்பு

எழுத்து, வெளியீடு

இந்திரா பார்த்தசாரதி 1969ல் இந்நாவலை எழுதினார். தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. இந்நாவலுக்கு சுஜாதா முன்னுரை எழுதியிருந்தார்.

பின்புலம்

இந்நாவல் 1964 ல் ஜவகர்லால் நேருவின் மறைவுக்குப்பின் டெல்லியில் உருவான புதியவகை அரசியல்சூழலை களமாகக் கொண்டது. காங்கிரஸின் பிளவும், அதையொட்டிய அரசியல்சூழ்ச்சிகளும், இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும், அந்த அரசியலில் வெவ்வேறு தொழிலதிபர்கள் பங்குவகித்ததும் டெல்லி அரசியலில் இருந்த இலட்சியவாத அம்சத்தை இல்லாமலாக்கின. 1965க்குப் பின் இந்திய அரசியலொழுக்கம் பெரும் சரிவைச் சந்தித்தது. அந்தச் சரிவையே இந்நாவலில் இந்திரா பார்த்தசாரதி பேசுபொருளாகக் கொண்டிருக்கிறார்.

கதைச்சுருக்கம்

நியூடெல்லியில் பாட்டர்சன் கம்பெனியில் மக்கள்தொடர்பு அதிகாரியாக கஸ்தூரி பொறுப்பேற்று அதிகாரத்தின் நுட்பங்களை கற்று பதவியில் மேலேறுகிறான். மீராவுடன் அவனுக்கு பாலுறவு உருவாகிறது. அனைவரிடமும் அவன் எச்சரிக்கையான தொலைவை கடைப்பிடிக்கிறான். அதிகார வர்க்கத்தின் ஊழல்களை திறம்பட பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் வெற்றியின் போதையில் திளைக்கும் கஸ்தூரியை விட்டு மீரா விலக அவன் வேலையை உதறுகிறான்.ஹிப்பிகளின் வாழ்க்கையில் ஊடுருவி ஓர் அதீத நிலையை அடைந்து தன்னைப்பற்றிய ஒரு பிரக்ஞையை அடைகிறான். மீராவுடன் இணைகிறான்

இலக்கிய இடம்

இந்திரா பார்த்தசாரதியின் சிறந்த படைப்பு என இது விமர்சகர்களால் கருதப்படுகிறது. அறுபதுகளில் தொடங்கிய அரசியல் அறவீழ்ச்சி தனிமனித ஒழுக்கச் சீரழிவாக ஆகி இருத்தலியல் சிக்கலாக உருமாறி ஓர் உச்சநிலையை அடைவதை இந்நாவல் கூரிய பகடி வழியாகச் சித்தரிக்கிறது. தமிழில் பெருநகர் வாழ்க்கையையும், உயர்மட்ட வாழ்க்கையையும் சித்தரித்த முன்னோடி படைப்பு இது. பின்னர் ஆதவன் ,சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் தொடர்ந்து எழுதினர்.

உசாத்துணை

தந்திரபூமி - ஆம்னிபஸ் விமர்சனம்

'