first review completed

தொ.மு.சி. ரகுநாதன்

From Tamil Wiki
Revision as of 22:36, 24 March 2022 by Jeyamohan (talk | contribs)
தொ. மு. சிதம்பர ரகுநாதன்

தொ.மு.சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) ‘தொ.மு.சி’ என்று பரவலாக அறியப்பட்டார். சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், விமர்சகர்.

இவரின் ‘பஞ்சும் பசியும்’ (1951) நாவல் தமிழ் நாவல்களில் முதன் முதலில் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகக் கருதப்படுகிறது. தொ.மு.சி. ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். இவர், ‘சாந்தி’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். புதுமைப்பித்தன் இவரைத் ‘தன் வாரிசு’ என்று குறிப்பிட்டார். இவரின் படைப்புகளில் இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகள் கலைநோக்குடன் அல்லாமல் பிரச்சாரத் தன்மையில் வெளிப்பட்டிருக்கும். இவரது ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 1984இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு, கல்வி

தொண்டைமான் முத்தையாவுக்கும் அவரின் இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக அக்டோபர் 20, 1923-ல் திருநெல்வேலியில் பிறந்தார். தொ.மு.சி.ரகுநாதனின் மூத்தவர் தொ.மு பாஸ்கரத் தொண்டைமான் மரபிலக்கிய ஆய்வாளர், பயண இலக்கிய எழுத்தாளர், மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றியவர். அவர் தவிர மூன்று தமக்கையர், ஒரு தங்கை. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வரை படித்தார். தொ.மு.சி.ரகுநாதனின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொ.மு.சி.ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா ஓவியர்; புகைப்படக் கவிஞர்.

அரசியல் வாழ்க்கை

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

தொ.மு.சி.ரகுநாதன் தன் தோழர் ராஜரத்தினத்துடன் இணைந்து, ‘மார்க்சிஸ்ட் மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் மார்க்சியக் கருத்துக்களை ‘சைக்ளோஸ்’ செய்து, ‘ஜவகர் வாலிபர் சங்கம்’ மூலம் பரப்பினார்.

1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் இயக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. நெல்லையில் கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் மீது போலீஸ் கடுமையான தடியடி நடத்தியது. தொ.மு.சி உட்பட பலரும் காயமடைந்தனர். சில நாள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அவரைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையிலடைத்தனர். இதனால், அவர் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது.

இதே காலத்தில் நெல்லை மாவட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராக வந்த வி.பி.சிந்தன் தொ.மு.சி.ரகுநாதனுடன் தொடர்பு கொண்டார். கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராக ஆன தொ.மு.சி.ரகுநாதன் கட்சி ஆணைப்படி தமிழ்நாடு ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவர். அதில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் அதில் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டு, உருவான விவாதங்களின்போது 1967இல் கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். சோவியத் லான்ட் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக இருந்த ரகுநாதன் தாமரை உள்ளிட்ட கட்சி இதழ்களில் எழுதினார்.

இதழியல்

தொ.மு.சி.ரகுநாதன் தினமணி, முல்லை, சக்தி, சோவியத் நாடு போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவிலும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகைத் துறையில் இருந்து விலகி, சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் 'சாந்தி' என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். சாந்தி இதழில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்கள் எழுதினார்கள். 1967 -1988 வரை சோவியத் நாடு பத்திரிகையில் செய்தித்துறை மூத்த ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

ரகுநாதனின் முதல் சிறுகதை 1941-ல் பிரசண்டவிகடன் இதழில் வெளிந்தது. முதல் நாடகம் சிலைபேசிற்று 1942 இல் வெளிவந்தது. முதல் நாவல் ‘புயல்’ 1945-ல் வெளியானது.

1948இல் இவர் ‘சக்தி’ இதழில் பணிக்குச் சேர்ந்தார். கு. அழகிரிசாமியும் இவருடன் இணைந்து பணியாற்றினாா். இவர்கள் இருவரையும் ‘இரட்டையர்கள்’ என்று கூறும் அளவுக்கு இவர்களுக்கு இடையே நட்பும் படைப்பு ஒற்றுமையும் காணப்பட்டன.

இவர் 1949 இல் எழுதிய ‘முதலிரவு’ என்ற நாவல் ‘பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதாகவும் ஓரினச் சேர்க்கை குறித்தும் முறை தவறிய உறவுகள் பற்றியும் எழுதப்பட்டதாகவும் கருதப்பட்டு, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடையாணையை எதிர்த்து இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோல்வியடைந்தார். இறுதியில், கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தைச் செலுத்தியதால் விடுவிக்கப்பட்டார்.

தமிழகக் கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வையும் அவர்களின் தொழிற்சங்கப்போராட்டத்தையும் விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ (1951) இவரது முக்கியமான நாவல். இதனை கமில் சுவலபில் ‘செக்’ மொழியில் மொழிபெயர்த்தார். ‘தமிழில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல்’ என்று கூறப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் ‘சோஷலிச யதார்த்தவாத’ நாவல் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது.

ரகுநாதன் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் கவிதைகளை எழுதினார். சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றில் மாக்ஸிம் கார்க்கியின் தாய் குறிப்பிடத்தக்கது. தொ.மு.சி.ரகுநாதன். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பின், அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். புதுமைப்பித்தனின் அணுக்கமான இளந்தோழராக இருந்த தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு புதுமைப்பித்தன் பற்றிய ஒரே வாழ்க்கை வரலாறு.

தன் வாழ்நாளில் சேமித்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை எட்டையபுரம் பாரதி நினைவகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். அங்கு செப்டம்பர் 24, 2000 இல் ரகுநாதன் நூலகமும் பாரதி ஆய்வு மையமும் தொடங்கப்பட்டன.

மறைவு

தொ.மு.சி.ரகுநாதன் பாளையங்கோட்டையில் டிசம்பர் 31, 2001 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

தொ.மு.சி.ரகுநாதன் தமிழில் மார்க்சிய சிந்தனையை ஒட்டி எழுதிய முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். ‘பஞ்சும் பசியும்’ நாவல் சோஷலிச யதார்த்தவாத அழகியலின் முதல்நாவல் என கருதப்படுகிறது. தன்னுடைய புனைவுகளிலும் புனைவல்லாத படைப்புகளிலும் வெகுஜன வாசிப்பு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து சமூகக் கவனத்தை ஈர்த்தவர். ‘இளங்கோ அடிகள் யார்’ என்ற ஆய்வு நூலில், ‘இளங்கோ அடிகள் மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்லர்; அவர் ஒரு தன வணிகச் செட்டியார்’ என்று பல்வேறு ஆதாரங்களுடன் வாதிட்டுள்ளார். தொ.மு.சி.ரகுநாதன் தமிழ் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் சீண்டும்நோக்கம் மட்டுமே கொண்ட எழுத்துக்களும் ஆய்வுகளும் அவரை முக்கியமான புனைவிலக்கியவாதியாகவோ ஆய்வாளராகவோ மதிப்பிடுவதற்கு தடையாக உள்ளன.

விருதுகள், பரிசுகள்

  1. சாகித்திய அகாதெமி விருது - 1983
  2. சோவியத் லேண்ட் நேரு விருது
  3. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு
  4. பாரதி விருது - 2001

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  1. நீயும் நானும் -
  2. க்ஷணப்பித்தம் - 1952
  3. சேற்றிலே மலர்ந்த செந்தாமரை - 1955
  4. ரகுநாதன் கதைகள் - 1951
  5. சுதர்மம் - (மீனாட்சி புத்தக நிலையும் ‘ரகுநாதன் கதைகள்’ என்ற புத்தகத்தை இரண்டாம் பதிப்பாக 1980இல் வெளியிட்டபோது அதில், ‘ஆசிரியரின் பிற படைப்புகள்’ என்ற பகுதியில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றித் தெரியவருகிறது.)
கவிதை தொகுப்புகள்
  1. ரகுநாதன் கவிதைகள் - 1957
  2. கவியரங்கக் கவிதைகள் - 1963
  3. காவியப் பரிசு - 1981
நெடுங்கவிதை
  1. ‘க. கட்டபொம்மன்’ (விடுதலை வீரர்கள் ஐவர் - 1968)
நாவல்கள்
  1. புயல் - 1945
  2. முதலிரவு - 1949
  3. பஞ்சும் பசியும் - 1951
  4. கன்னிகா -
நாடகங்கள்
  1. சிலை பேசிற்று - 1942
  2. மருது பாண்டியன் -
வாழ்க்கை வரலாறு
  1. புதுமைப்பித்தன் வரலாறு - 1951
ஆய்வு நூல்
  1. இளங்கோ அடிகள் யார்? -
விமர்சன நூல்கள்
  1. இலக்கிய விமர்சனம் - 1948
  2. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும் - 1977
  3. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்) - 1966
  4. சமுதாய இலக்கியம் - 1964
  5. பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும் - 1987
  6. பாரதி: சில பார்வைகள் - 1982
  7. பாரதியும் ஷெல்லியும் - 1964
  8. பாரதி - காலமும் கருத்தும் -
  9. புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் - 1999
மொழிபெயர்ப்பு நூல்கள்
  1. இதயத்தின் கட்டளை - (M. Sholokhov - At the Bidding of the Heart ) - 1981
  2. சந்திப்பு - (மாக்ஸிம் கார்க்கி) - 1951
  3. சோவியத் நாட்டுக் கவிதைகள் - (85 கவிதைகள்) - 1965
  4. தந்தையின் காதலி - (மாக்சிம் கார்க்கி) - 1950
  5. தாய் - (மாக்ஸிம் கார்க்கியின் ‘தி மதர்’) - 1975
  6. நான் இருவர் (ஆர். எல். ஸ்டீவென்ஸன்) - 1951
  7. லெனின் கவிதாஞ்சலி (Vladimir Mayakosky - Vladimir Ilyich Lenin ) - 1970
பதிப்பித்த நூல்
  1. அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய ‘திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி’ - 1990
இணைந்து எழுதிய நூல்
  1. இவர், ‘முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்’ (1994) என்ற புத்தகத்தைப் பொன்னீலனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். அதில் ‘வழிகாட்டி உரை’ என்ற தலைப்பில் முதல் 70 பக்கங்களை எழுதியுள்ளார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.