standardised

சி. சரவணபவன்

From Tamil Wiki
Revision as of 21:55, 11 November 2022 by Tamizhkalai (talk | contribs)
சி. சரவணபவன்

சி. சரவணபவன் (சிற்பி சி. சரவணபவன்) (பிப்ரவரி 2, 1933 - நவம்பர் 9, 2015) ஈழத்து தமிழ் கவிஞர், எழுத்தாளர். கலைச்செல்வி இதழின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சரவணபவன் இலங்கை யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியக் குருக்கள்-சௌந்தராம்பாள் இணையருக்கு மகனாக பிப்ரவரி 2, 1933-ல் பிறந்தார். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

சரஸ்வதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சுந்தரேசுவரன், சாயீசுவரன், சர்வேசுவரன் ஆகியோர் பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

சரவணபவன், 'சிற்பி' என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். 'கலைச்செல்வி'இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். சிற்பியின் முதற் சிறுகதை 'மலர்ந்த காதல்' 1952-ல் 'சுதந்திரன்' இதழில் பிரசுரமானது. 1955-ல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் சரவணபவனின் 'மறுமணம்' சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. ஈழத்துப் பத்திரிகைகளிலும் தமிழக இதழ்களான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் முதலியவற்றிலும் சிறுகதைகள் எழுதினார். 'நிலவும் நினைவும்', 'சத்திய தரிசன' (சிறுகதைத்தொகுதி), 'உனக்காகக் கண்ணே' (நாவல்), 'நினைவுகள் மடிவதில்லை' என்பவை இவரது நூல்கள். ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958-ல் 'ஈழத்துச் சிறுகதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

இதழியல்

1953 -ல் சென்னையில் கல்வி கற்கும் வேளையில் செலையூர் மன்றம் வெளியிட்ட 'இளந்தமிழன்' என்ற இதழின் ஆசிரியரானார். சி. சரவணபவன் ஜூலை 1958 முதல் வெளிவரத்தொடங்கிய கலைச்செல்வி இதழின் ஆசிரியர். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966-ல் வெளியானது.

விருதுகள்

  • நினைவுகள் மடிவதில்லை நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசு கிடைத்தது.
  • இலங்கை இலங்கைப் பேரவையின் 2008-2009 -ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான விருது பெற்றார்.
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதை 2011-ல் பெற்றார்.
  • திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார்.
  • சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

மறைவு

சி. சரவணபவன் நவம்பர் 9, 2015-ல் காலமானார்.

நூல் பட்டியல்

நாவல்

உனக்காகக் கண்ணே

சிறுகதைத்தொகுதி
  • நிலவும் நினைவும்
  • சத்திய தரிசனம்
பிற

நினைவுகள் மடிவதில்லை

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.