under review

வி. நடராஜ ஐயர்

From Tamil Wiki
Revision as of 03:44, 26 February 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி. நடராஜ ஐயர் (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) தொடக்க கால தமிழ் இதழியலாளர். லோகோபகாரி என்ற இதழை நடத்தியவர். லோகோபகாரி பெண் கல்வி, வேதாந்த கருத்துகள் பரவாலாக்கம் பெற காரணமாக இருந்த இதழ்.

பிறப்பு, கல்வி

வி. நடராஜ ஐயர் திருச்சி மாவட்டத்தில் மருதூரில் வேங்கடராம ஐயருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். திருச்சி பி.எஸ்.சி கல்லூரியில் கல்வி பயின்றார். இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு தேர்வில் முதல் நிலை மாணவராக தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

வி. நடராஜ ஐயர் தாமே சுயமாக இதழ்களை தொடங்கி நடத்தினார். லோகோபகாரி, ஞான சந்திரிகா, இந்தியன் நியூஸ் ஆகிய மூன்று இதழ்களை நடத்தினார். இதழியலையே தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

வி. நடராஜ ஐயர் ஜானகியம்மாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே வி. நடராஜ ஐயர் இரண்டாம் முறை மற்றொருவரை மணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவியின் பெயர் அறிய கிடைக்கவில்லை. இரண்டாம் மனைவி மூலமாகவும் குழந்தைப் பேறு இல்லை. வி. நடராஜ ஐயர் இரண்டாம் மணம் செய்து கொண்டதால் மனவேறுபாடு ஏற்பட்டு ஜானகியம்மாள் பிரிந்து சென்றார். வி. நடராஜ ஐயர் முதல் மனைவி தன்னோடு வாழ வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் பெரும் பொருளிழப்புக்கு உள்ளானார். அதன் காரணமாக நோயுற்று மனநலமும் உடல் நலமும் குன்றினார்.

இதழியல்

லோகோபகாரி

வி. நடராச ஐயர் 1895-ம் ஆண்டு லோகோபகாரி பத்திரிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் மாதம் மும்முறை வெளியானது. 1897-ம் ஆண்டு முதல் லோகோபகாரி வார இதழாக வெளிவர தொடங்கியது. 1899-ம் ஆண்டு லோகோபகாரி இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 'ஞான தரிஷிணி' என்ற நூல் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. 1900-ம் ஆண்டு சந்தா செலுத்தியவர்களுக்கு தத்துவ தரிஷிணி என்ற நூல் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ் இதழ்களில் ஒன்றாக லோகோபகாரி கருதப்படுகிறது.

லோகோபகாரி பத்திரிக்கை மூவாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. லோகோபகாரி பத்திரிக்கையில் உலக செய்திகளுடன் பெண் கல்வி, வேதாந்த கருத்துகள், பக்தி கருத்துகள் ஆகியவை அதிகளவில் வெளிவந்தன. தொடர்கதைகளையும் வெளியிட்டது. நற்போதனைகள் நிறைந்த இதழாக வெளிவந்தது. 1906-ம் ஆண்டு வரை வெளிவந்தது.

லோகோபகாரி இதழில் தமிழின் முதல் பெண் எழுத்தாளாரான விசாலாட்சி அம்மாள் தன் நாவல்களை எழுத தொடங்கினார். ஆரம்பத்தில் நடராஜ ஐயரின் பெயரில் விசாலாட்சி அம்மாளின் முதலிரண்டு நாவல்களான 'லலிதாங்கி', 'ஜலஜாக்ஷி' இரண்டும் வெளியாயின. பெண்கள் எழுத எதிர்ப்பு இருந்த காலத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு அமைத்து கொடுத்த முன்னோடி இதழாக லோகோபகாரி அறியப்படுகிறது. 1902-ம் ஆண்டு விசாலாட்சி அம்மாள் லோகோபகாரியின் உதவி ஆசிரியரானார். 1906-ம் ஆண்டு நடராஜ ஐயரின் இறப்பு வரை விசாலாட்சி அம்மாள் இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.

ஞான சந்திரிகா

வி. நடராஜ ஐயர் அக்டோபர் 1897 மாதம் முதல் ஞான சந்திரிகா என்னும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். இவ்விதழ் தொடக்கத்தில் நன்கு விற்பனையானது. பின்னர் தொடர்ந்து செயல்பட முடியாமல் விரைவிலேயே நின்று போனது.

இந்தியன் நியூஸ்

வி. நடராஜ ஐயர் 1901-ம் ஆண்டு 'இந்தியன் நியூஸ்' என்னும் ஆங்கில மாத இதழை தொடங்கினார். இவ்விதழும் சிறிது காலத்திற்கு பிறகு விற்பனை இல்லாத காரணத்தால் நின்று போனது.

இலக்கிய வாழ்க்கை

வி. நடராஜ ஐயர் பண்டித நடையில் எழுதுபவராக இருந்தார். இதழ் நடத்தியதுடன் தானும் எழுதுபவராக இருந்தார். விவேகானந்தரின் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்து 'ஞானத்திரட்டு' என்ற பெயரில் வெளியிட்டார். இதனோடு 'ஞான பூஷணி', 'தத்துவ தரிஷிணி' போன்ற நூல்களையும் எழுதினார்.

மறைவு

வி. நடராஜ ஐயர் ஜனவரி 12, 1908-ல் மறைந்தார்.

நூல் பட்டியல்

எழுதிய நூல்கள்

  • ஞான பூஷணி (1896)
  • ஞான தரிசிணி (1898)
  • தத்துவ தரிஷிணி (1899)
  • ஞான லோசனி (1900)

மொழிப்பெயர்ப்புகள்

  • ஞானத்திரட்டு (இரண்டு பாகங்கள்) - விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

உசாத்துணை

  • தமிழ்ப் புலவர் வரிசை இருபத்து மூன்றாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1960.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2026, 08:53:14 IST