ஆர்.எஸ். ஜேக்கப்

From Tamil Wiki

ஆர்.எஸ். ஜேக்கப் (1925 - டிசம்பர் 22, 2021) தமிழ் எழுத்தாளர், ஆசிரியர், அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

ஆர்.எஸ். ஜேக்கப் 18 வயதில் பி.யு.சி படிப்பை முடித்தார்.

ஆசிரியப்பணி

திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் கிறிஸ்தவ மிசினரி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக பணியாற்ற அழைக்கப்பட்டார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் துவங்கிட ஏற்பாடு செய்ய வேண்டுமென ஊர் ஜமீனை சந்தித்தார். ஜமீன் மறுத்ததால் ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவர்களாக்கினார். ஜமீன் அதைக் கண்டறிந்து அடித்ததால் பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வந்தார்.

அரசியல் வாழ்க்கை

ஆர்.எஸ். ஜேக்கப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் பாலதண்டாயுதம் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். தென் மாவட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து கலகம் நடந்து கொண்டிருந்தது. ரயிலைக் கவிழ்க்க கம்யூனிஸ்ட்காரர்கள் முடிவு செய்து அதைத் தகர்த்தனர். தோழர்கள் தலைமறைவாயினர். தலைமறைவான தோழர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தாகச் சொல்லி நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சிறையில் தோழர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார்.

இலக்கிய வாழ்க்கை

ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் எழுதியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். 130க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு

ஆர்.எஸ். ஜேக்கப் டிசம்பர் 22, 2021-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தமிழில் முதல் சிறுகதை எது?
  • பனையண்ணன்
  • வாத்தியார்

உசாத்துணை