under review

சௌரிப்பெருமாள் அரங்கன்

From Tamil Wiki
Revision as of 03:43, 15 May 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ரங்கன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரங்கன் (பெயர் பட்டியல்)

சௌரிப்பெருமாள் அரங்கன்(திருக்கண்ணபுரம் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன்) தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழாசிரியர், குறுந்தொகையை முதன்முதலில் உரையுடன் பதிப்பித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சௌரிப்பெருமாள் அரங்கன் வேலூர் இந்து தேவஸ்தான உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் வாணியம்பாடி மதரஸா இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சௌரிப்பெருமாள் அரங்கன் முத்துரத்ன முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி குறுந்தொகையைப் படியெடுக்கச் சென்னை அரசு நூல்நிலையம் சென்றார். அந்நூலகச்சுவடியில் காணப்பெற்ற பிழைகளும் குறுந்தொகையின் 316-ஆம் பாடல் விடுபட்டுப்போயிருந்ததும் அவர் குறுந்தொகைக்கு உரையெழுதக் காரணங்கள் ஆயின. ஓப்பீட்டிற்கு உதவியாக முத்துரத்ன முதலியார் குறுந்தொகையின் மற்றொரு சுவடியை வரவழைத்துக்கொடுத்தார். அவ்விரு சுவடிகளோடு மதுரைத் தமிழ்ச்சங்க சுவடி ஆகிய மூன்றையும் ஒப்புநோக்கிக் குறுந்தொகைக்கு உரையெழுதினார். அந்நூலும் உரையும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புரிமையாக்கப்பட்டன.

1915-ல் அரங்கனார் உரையெழுதி குறுந்தொகையை வெளியிட்டார். நூலின் முன்னுரையில், "இத்தொகை நூல் மூலப்பகுதியை யேனும் நந்தமிழர்களில் எவரும் இதுகாறும் வெளிப்படுத்தாதிருந்தது அவர்கட்கு ஒரு குறையென்றே எண்ணலாம்" என்று குறிப்பிட்டிருப்பதால் இதுவே குறுந்தொகையின் முதல்பதிப்பு என்பதை உணரலாம். தம் ஆசிரியப் பணிகளுக்கிடையே எங்கு எங்கெலாம் சென்று எப்படி சுவடிகளைப் பெற்று ஆராய்ந்தார் என்பதனை அவர்தம் பதிப்பு முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரங்கனார் திணைக் குறிப்பின்றி இருந்த குறுந்தொகைப் பாடல்களுக்குத் திணைக் குறிப்புகளை ஆராய்ந்து குறித்துள்ளார். இந்நூலுக்குப் பழைய உரை கிட்டாத நிலையில் தாமே உரையும் எழுதிச் சேர்த்துள்ளார்.

"இதனைப் பலகால் முயன்று தமது கூரிய சீரிய நுட்பமதியுடன் எனது ஆருயிர் அன்பர்களாகிய ஸ்ரீமத் பண்டிதர் டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார் அவர்கள் தாம் இயற்றிய திணை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக் குறிப்பு முதலியவற்றைக் காட்டிச் சுருங்கச் சொல்லி வியங்க வைத்தலாகிய புத்துரையுடன் ஆராய்ச்சித் திறன் கொண்ட அரும்பெரும் குறிப்புகள் பலவற்றைச் சேர்த்து அழகிய புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள்."

எனக் குறுந்தொகை முதல் பதிப்பின் முகவுரையில் மணக்கால் அய்யம் பேட்டை எஸ். முத்து ரத்னமுதலியார் குறிப்பிட்டுள்ளார்.

குறுந்தொகை உரை
  • தலைப்புப்பக்கம்
  • பாடினோர் பெயர்
  • குறுந்தொகை மூலமும் உரையும்
  • அரும்பத அகராதி

என 368 பக்கங்களைக் கொண்டது.

பதிப்பியல்

சிலப்பதிகாரத்தை முதன்முதலில் பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கன்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2025, 20:27:16 IST