யாப்பருங்கலக்காரிகை
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் யாப்புப் பயில்வோரால் பெரிதும் போற்றப்படும் ஒரு நூல் யாப்பருங்கலக்காரிகை. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் இதுவே சிறப்புப் பெற்றது. காரிகை என்றே இந்நூல் குறிக்கப்படுகிறது.
இன்று நமக்குக் கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன. ஆயினும் பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களிற் சில அக்காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்
யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப் பெற்றுள்ளது. அமிதசாகரர் என்பது அளப்பரிய கடல் என்றும் அமிர்த்சாகரர் என்பது அமுதக்கடல் எனவும் பொருள்தரும். இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியினால் அறியலாம். இவர் வரலாறு பற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை வழிபட்டுள்ளதை என்பதை, பாயிர முதல் செய்யுள் கூறுவதால் இவர் சமணர் என்று அறிகிறோம்.
அமிதசாகரர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
நூல் அமைப்பு
யாப்பருங்கலக்காரிகை கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. காரிகை என்னும் சொல்லுக்கே கட்டளைக் கலித்துறை என்று ஒரு பொருள் உள்ளது. இந்நூல் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன.
இந்நூல் செய்யுள்கள் எல்லாம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.
எழுத்தெண்ணிப் பாடுகிறபொழுது ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.
யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள் உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகள்.
உறுப்பியல்
முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
செய்யுளியல்
இரண்டாம் இயலாகிய செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.
ஒழிபியல்
ஒழிபியலில் உறுப்பியலிலும், செய்யுளியலிலும் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச் செய்திகள் தரப் பெற்றுள்ளன.ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.