under review

கெளரி (தெருக்கூத்து)

From Tamil Wiki
Revision as of 01:04, 23 February 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
கெளரி (தெருக்கூத்து)

கெளரி (தெருக்கூத்து) (பிறப்பு: ஜூன் 27, 1988) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். நவீன நாடக நடிகர். கர்நாடக இசைக் கலைஞர். தெருக்கூத்து ஆய்வாளர். புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்துப் பரம்பரையைச் சேர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

கெளரி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் புரிசையில் தெருக்கூத்துக் கலைஞர் பி.கே. சம்பந்தன், சரஸ்வதி இணையருக்கு மூன்றாவது மகளாக ஜூன் 27, 1988-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பாரதி, சவிதா, ரேவதி, பல்லவி. கெளரி சி.சி.ஆர்.டி ஊக்கத்தொகையுடன் பள்ளிக்கல்வி படித்தார். சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் இசையில் இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கெளரி மு. சிவாவை ஜூன் 15, 2015-ல் மணந்தார். சென்னையில் கர்நாடாக இசைப் பயிற்றுனராக உள்ளார்.

ஆய்வு வாழ்க்கை

கெளரி சென்னை டாக்டர் ஜெ.ஜெயலலிதா கலை-அறிவியல் கல்லூரியில் ”தெருக்கூத்தில் இரணிய மோட்சம் - திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மூன்று மாவட்டங்களில் ஒவ்வொரு குழுவை ஆய்விற்கு எடுத்தார். திருவண்ணாமலை - புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம், விழுப்புரம் - நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்திலுள்ள ’கீதாஞ்சலி கர்நாடக இசை நாடகக் குழு’, தஞ்சாவூர் - ஆர்சுத்திப்பட்டு இரண்ய நாடகக் குழு ஆகிய மூன்று குழுக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இக்குழுக்களின் இரண்ய சம்ஹார பனுவலை ஆராய்ந்து, அவற்றுள் இருக்கின்ற பாடல், விருத்தம், அடவுகள், கதை நிகழ்த்தும் விதம், ஒப்பனை, சடங்குகள் ஆகியவற்றைப் பதிவு செய்தார்.

கலை வாழ்க்கை

கெளரியின் வாத்தியார் பி.கே. சம்பந்தன். 2008 முதல் புரிசை தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். முதன்முதலில் இந்திரஜித் தெருக்கூத்தில் மண்டோதரியாக ஆடினார். கர்ணமோட்சத்தில் பொன்னுருவி, சிலம்புச்செல்வியில் கண்ணகி, அனுமன் தூதில் சீதை ஆகிய கதாப்பாத்திரங்களில் கூத்து ஆடியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு குரல்வளப் பயிற்சி அளிப்பார். பரதநாட்டிய மேடைகளில் பாடகராக உள்ளார்.

குமரன் வளவன் நடத்தும் 'இந்தியன் ஆம்ஸ்ட்ராங் நாடகக் குழு'வில் 'லட்சுமணன் கனவு', 'Land of Ashes' ஆகிய இரு நவீன நாடகங்களில் நடித்தார். தமிழ் நாட்டில் புரிசை, விழுப்புரம், செய்யார், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும், கேரளா,பாண்டிச்சேரி, டெல்லி, பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கும் சென்று கூத்து, நாடக அரங்காற்றுகை செய்துள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • கர்ண மோட்சம்
  • சிலம்புச் செல்வி
  • சூர்ப்பனகை சபதம்
  • திரெளபதி வஸ்திராபரனம்
  • நளாயினி
  • அனுமன் தூது
  • பெரிய இறகுடைய வயோதிக மனிதன் (ஜெர்மன் சிறுகதை)

பங்கேற்ற நவீன நாடகங்கள்

  • லட்சுமணன் கனவுகள் (Laxman Dreams)
  • Land of Ashes

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:49:14 IST