பாடாண் திணை
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலானவற்றில் சிறப்புற்ற ஆண்மகனது ஒழுகலாறுகளை உணர்த்துவது பாடாண் திணை. பாடாண் எனில் பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாறு என்று பொருள்படும். அரசனுடைய புகழ், கொடை, அளி முதலானவற்றைக் கூறும் புறத்திணை இது. வெட்சி முதல் வாகைத்திணை வரை பூக்களால் திணைப்பெயர் அமைந்தது. வெட்சி முதலான போர்களை மேற்கொள்ளும்போது அவ்வப் பூக்களைச் சூடுவர். வாகை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு எனினும் வாகை மாலை சூடுதல் மரபில் உண்டு. ஆனால் பாடாண் என்பது ஒருவனைப் பற்றிப் பாடிச் சிறப்பிப்பதாதலின் இதற்குப் பூமாலை சூடும் மரபு இல்லை. ஆகவே பூவால் அன்றிச் செய்தியால் இப்படலத்திற்குப் பெயர் ஏற்பட்டுள்ளது.
பாடப்பெறும் ஆண்மகனது ஆளுமைப் பண்புகளைக் கூறுதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று (கொளு.1)
என விளக்குகிறது. ‘அரசனுடைய புகழையும் வலிமையையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பிறர்க்கு ஈயும் வள்ளல் தன்மையையும் அருளுடைமையையும் ஆய்ந்து கூறுதல்’ என்பது இதன் பொருள்.
வெண்பா, மேற்கண்ட தன்மைகளைப் புகழும் முறையை எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் மடங்கல் மறையவர் சொல் மாலை
அன்ன நடையினார்க்(கு) ஆரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேல் தானைஎம் கோ
‘எங்கள் மன்னன் அரசர் பலருள் அரிமாப் போன்றவன்; அந்தணர்களுக்குப் புகழ்மாலை போன்றவன்; அன்ன நடைப் பெண்களுக்கு அமுதத்தை ஒத்தவன்; பரிசிலர்க்கு முகில் போன்றவன்’. இவ்வாறு வெண்பா பாடாண் படலத் தன்மையை விளக்குகிறது.
பாடாண் படலம் 47 துறைகளைக் கொண்டது. அவை
வாயில் நிலை
2. கடவுள் வாழ்த்து
3. பூவை நிலை
4. பரிசில் துறை
5. இயன்மொழி வாழ்த்து
6. கண்படை நிலை
7. துயிலெடை நிலை
8. மங்கல நிலை
9. விளக்குநிலை
10. கபிலை கண்ணிய புண்ணிய நிலை
11. வேள்வி நிலை
12. வெள்ளி நிலை
13. நாடு வாழ்த்து
14. கிணைநிலை
15. களவழி வாழ்த்து
16. வீற்றினிதிருந்த பெருமங்கலம்
17. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
18. மணமங்கலம்
19. பொலிவு மங்கலம்,
20. நாள் மங்கலம்
21. பரிசில் நிலை
22. பரிசில் விடை
23. ஆள்வினை வேள்வி,
24. பாணாற்றுப்படை
25. கூத்தராற்றுப்படை
26. பொருநராற்றுப் படை
27. விறலியாற்றுப்படை
28. வாயுறை வாழ்த்து
29. செவியறிவுறூஉ
30, குடைமங்கலம்
31. வாள் மங்கலம்
32. மண்ணு மங்கலம்
33. ஓம்படை
34. புறநிலை வாழ்த்து
35. கொடி நிலை
36. கந்தழி
37. வள்ளி
38. புலவராற்றுப்படை
39. புகழ்ந்தனர் பரவல்
40. பழிச்சினர் பணிதல்
41. கைக்கிளை
42. பெருந்திணை
43. புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
44. கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்
45. கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
46. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
47. ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.