சிறுமணவூர் முனிசாமி முதலியார்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், (19-ம் நூற்றாண்டு) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஜோதிடர், மருத்துவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செழுமணவை என்றும் சின்னமண்டலி என்றும் அழைக்கப்படும் சிறுமணவூரில் 1800-களின் பிற்பகுதியில் பிறந்தார். செழுமணவை நல்லண்ணப் பரதேசியிடம் இலக்கண, இலக்கியங்களையும் மருத்துவத்தையும் கற்றார். ஜோதிடத்தில் புலமை பெற்றார். தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றார்
தனி வாழ்க்கை
சிறுமணவூர் முனிசாமி முதலியார் ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றினார். பாக்கியம் அம்மாளை மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சி.மு. கோவிந்தராஜ முதலியார். சி.மு. நடேச முதலியார் என இரு மகன்கள்
சிறுமணவூர் முனிசாமி முதலியார் தொழில் நிமித்தம் சென்னை புரசவாக்கத்திற்குக் குடி பெயர்ந்தார். பின்னர் பெரம்பூருக்குக் குடிபெயர்ந்தார். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ’சிறுமணவூர் முனிசாமி முதலியார் கம்பெனி’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் ஜெர்மன் வெள்ளி நகைகள் விநியோகம், வாசனைத் திரவிய விற்பனை, பொருட்களை வாங்கி விற்பது, புத்தக வெளியீடு விற்பனை எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.