under review

சார்ல்ஸ் மால்ட்

From Tamil Wiki
Revision as of 06:40, 29 March 2025 by Madhusaml (talk | contribs) (Finalized)
மால்ட்

சார்ல்ஸ் மால்ட் (1791-1858) (Charles Mault ) கிறிஸ்தவ இறைப்பணியாளர். லண்டன் மிஷன் சொசைட்டி சார்பில் நாகர்கோயிலில் இறைப்பணி செய்தார். தமிழ்நாட்டின் கல்வியில் முன்னோடிப் பங்களிப்பாற்றியவர்.

பிறப்பு, கல்வி

சார்ல்ஸ் மால்ட் லண்டன் அருகே ஷ்ரோப்ஷையர் (Shropshire) என்னும் இடத்தில் 1791ல் பிறந்தார். கோஸ்போட் மிஷனரி அக்காடமி (Gosport Missionary Academy)யில் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

மால்ட் 1818 ல் செண்ட் நியோட்ஸில் மார்த்தா மால்ட் ஐ மணர்ந்தார்.மார்த்தா ஐந்து குழந்தைகளைப் பெற்றார். 1833ல் பிரசவத்தால் நோயுற்று இங்கிலாந்து திரும்பினார். தன் குழந்தைகளையும் உடன்கொண்டுவந்து தன் சகோதரனை பாதுகாவலராக நியமித்து லண்டன் மிஷன் கல்விநிலையங்களில் படிக்கச் செய்தார்.

மார்த்தாவின் மூன்று மகன்களில் இருவர் மருத்துவர்களாகவும் ஒருவர் ஓவியராகவும் ஆனார்கள். இரு மகள்களும் மதப்பணியாளர்களை மணந்தனர். சாரா மால்ட் ஜே.ஓ.வைட்ஹவுஸ் என்னும் மதப்பணியாளாரை 1849ல் மணந்தார். முதல் மகளான எலிசா மால்ட் புகழ்பெற்ற மதப்பணியாளரான கால்டுவெல் லை மணந்தார்.

1843ல் தென் திருவிதாங்கூரில் காலரா பரவியது.மால்ட் நோயுற்று நலிந்தார். 1854ல் சார்ல்ஸ் மால்ட் லண்டன் திரும்புவதற்கான அனுமதியைப் பெற்றார். மால்டும் மார்த்தாவும் லண்டன் திரும்பினர். அவர்கள் கோவென்டிரி (Coventry) அருகே ஸ்டோக் (Stoke) என்னும் இடத்தில் தங்கினர்.

மதப்பணி

மால்ட் 1818ல் கோஸ்போட் என்னுமிடத்தில் இருந்த மிஷனரி அக்காதமியில் லண்டன் மிஷனரி சொசைட்டியின் குருப்பட்டம் பெற்றார். 1818 ல் சார்ல்ஸ் மால்ட் மனைவியுடன் ஆறுமாதகாலம் கப்பலில் பயணம் செய்து மும்பைக்கு வந்தார். ஏழுமாதங்கள் அங்கே தங்கிவிட்டு டிசம்பர் 1819 ல் அன்றைய திருவிதாங்கூர் அரசின் நகரமான நாகர்கோயிலுக்கு வந்தார்.

மால்ட் 1821ல் நாகர்கோயிலில் முதல் அச்சகத்தை நிறுவினார். இதற்கான இயந்திரங்களும் தொழிலாளர்களும் கொச்சியில் இருந்து கொண்டுவரப்பட்டன. தாள் லண்டனில் இருந்து வந்தது. இறைச்செய்திக்காக ஒரு செய்தியிதழ் வெளியிடப்பட்டது. திருவிதாங்கூர் மிஷன் அச்சகம் என இது அழைக்கப்பட்டது.

நாகர்கோயிலில் சார்ல்ஸ் மீட் மற்றும் ரிச்சர்ட் நீல் அகியோருடன் இணைந்து மதப்பணி ஆற்றினார். வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே விட்டுச்சென்ற மதப்பணிகளை முன்னெடுத்தார். மகாராஜன் வேதமாணிக்கம் போன்ற உள்ளூர் மதப்பணியாளர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

கல்விப்பணி

மால்ட் நாகர்கோயிலில் ஓர் ஆங்கிலப்பள்ளியை நிறுவினார். திருவிதாங்கூர் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக 1927ல் நியமிக்கப்பட்டார். 1828 முதல் 1930 வரை நடைபெற்ற தோள்சீலைக் கலகம் மால்டின் பணிகளை பாதித்தது. மால்டின் மனைவி மார்த்தாவும் மகளும் பெண்கல்விக்காக பாடுபட்டார்கள்

மறைவு

மால்ட் 1858 ல் லண்டனில் மறைந்தார்

வரலாற்று இடம்

தென் தமிழகத்தின் தொடக்ககால மதப்பரப்புநர்களில் ஒருவர். தமிழகத்தில் கல்விப் பரவலாக்கத்துக்கு உழைத்த முன்னோடி

உசாத்துணை


✅Finalised Page