தத்துபூஜை
திருநங்கையர் சமூக விழாக்களுள் ஒன்று. தத்துபூஜை வயதில் அனுபவத்தில் முதன்மையாக விளங்கும் ஒரு அரவாணி மற்றொரு அரவாணியை அல்லது பிறரை உறவாகத் தத்தெடுத்து பிரகடனப்படுத்தும் சடங்கு. தத்தெடுத்தலை ‘ரீத் போடுதல்’ என்றும் தத்தெடுத்துப் பதிவு செய்வதை ‘முண்டாய்த்து வைத்தல்’, ‘முண்டாச்சி வைத்தல்’ என்றும் அழைப்பர்.
பார்க்க: திருநங்கையர் சமூக விழாக்கள்
தத்தெடுக்கும் முறை
தத்தெடுக்கும் முறை ஆறு வகைகளாக நிகழும்.
சேலா பண்ணுதல்
குரு + சேலார். குரு சேலாவைத் தத்தெடுத்தல் எனப் பொருள். குழுவில் வயதில் அல்லது அனுபவத்தில் மூத்தவரை குரு என்றழைப்பர். குருவாகக் கருதப்படும் திருநங்கையர் மற்றொரு திருநங்கையை சேலாவாகத் தேர்ந்தெடுத்து தத்தெடுத்து பதிவு செய்யும் முறை ‘சேலா பண்ணுதல்’ என்றழைப்படுகிறது.
இம்முறையில் குருவும், சேலாவும் கணவன் மனைவி உறவாக கருதப்படுவர். ‘நாயக்’ என்றழைக்கப்படுகின்ற பஞ்சாயத்து தலைவர் மாதா முன்னிலையில் ’இன்னார்க்கு இன்னார் குரு’ என குருவின் பெயரையும், ‘இன்னார்க்கு இன்னார் சேலா’ என சேலாவின் பெயரையும் அறிவிப்பார். பின் மாதாவின் முன் இருவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வர். ”கடைசி வரை பிரியாமல் இருவரும் ஒன்றிணைந்து வாழ்வோம்” என்ற உறுதிமொழியும் கூறுவர். ‘ரீத் போடுதல்’ குருவிற்கு கட்டுப்பட்டவள் செலா என்பதைக் குறிக்கிறது.
பெண்மடி கட்டுதல்
இதனைப் பேட்டியா பண்ணுதல் என்றழைப்பர். தாய் அல்லது குரு மகளைத் தத்தெடுக்கும் சடங்கு. மூத்த திருநங்கையர் இளம் அரவாணியை மகளாகத் தேர்வு செய்து பதியும் முறை பெண்மடி கட்டுதல். இதில் மூத்த அரவாணி தாய் உறவாகவும் இளைய அரவாணி மகள் உறவாகவும் கருதப்படுவார். சேலா பண்ணுதல் முறை போல் இவர்களும் தலைவர் முன்னிலையில் மாதாவைச் சாட்சியாகக் கொண்டு சத்தியம் செய்வர்.
தாய் அரவாணியின் பெருவிரலில் கத்திக் கொண்டு அறுத்து மாதாவுக்குப் பூஜை செய்த பாலில் இரத்தத் துளிகள் விழும்படி செய்வர். பின்னர் அந்த பாலை மகள் உண்பது வழக்கம். இது தாய் மகளுக்கு பால் கொடுக்கும் சடங்காக நிகழ்கிறது. சு. சமுத்திரம் இதனை ‘முறைப்படியான ’தத்து பூஜை’ என்கிறார்.
இதனை கள ஆய்வு செய்த கரசூர் பத்மபாரதி, “கிண்ணத்து பாலை மார்பில் ஊற்றி நடந்தேறும் சடங்காக மட்டும் இதைப் பார்க்காமல் தாய் மகள் பாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் சடங்காக கருத வேண்டும். தாய் அரவாணி மகளாக ஒருவரை ஏற்றுக் கொண்டால் ஊரறிய, உலகறிய அனைவரையும் அழைத்து மார்பு பாலைக் குடிக்க வைப்பது ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் என்பதாகக் கருதுகின்றனர்” என்கிறார்.
மடிகட்டுத்தல்
இச்சடங்கு தாய் மகனைத் தத்தெடுக்கும் முறை. ஒரு அரவாணி அரவாணி அல்லாத ஆணை மகனாகத் தேர்ந்தெடுக்கும் சடங்கு மடி கட்டுதல். இதனை நேரில் கள ஆய்வு செய்த கரசூர் பத்மபாரதி “விழுப்புரத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவி ராதா அம்மா தினமலர் ரிப்போர்ட்டரான ராமமூர்த்தியை தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்” எனத் தன் திருநங்கையர் சமூக வரைவியல் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
மருமகள் மடிகட்டுதல்
வயதான அரவாணி தன் மகளின் மகளைப் பேத்தியாகத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சடங்கு முறை. இதில் பாட்டி பிரதான உறவாகக் கருதப்படுகிறார். அவருக்கு பேத்தி கட்டுப்பட்டவளாக இருப்பாள்.
பேன் பேன்
அக்கா தங்கையைத் தத்தெடுக்கும் முறை. அக்காவைப் ‘படா பேன்’ என்றும் தங்கையைச் ‘சோட்டா பேன்’ என்றும் அழைப்பர். பெஹன் என்ற இந்தி சொல் பேன் என உச்சரிக்கப்படுகிறது. படா, சோடா என்ற சொற்களும் இந்தி சொற்கள் அளிக்கும் பெரிய, சிறிய என்ற பொருளிலேயே கூறப்படுகிறது.
மெட்ராஸ் மடி கட்டுதல்
மாமியார் அரவாணி தன் மருமகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் முறை மெட்ராஸ் மடி கட்டுதல். மேலே குறிப்பிட்ட ஐந்து முறைகளும் பழைய சடங்கு முறை. மெட்ராஸ் மடி கட்டுதல் சென்னை அரவாணிகள் தோற்றுவித்து தமிழகம் முழுவதும் வழக்கில் இருக்கும் புதிய முறை.
முறை வழக்கம்
மேலே சொன்ன ஆறு முறைகளிலும் (குரு சேலா, தாய் மகள், தாய் மகன், பாட்டி பேத்தி, அக்கா தங்கை, மாமியார் மருமகள்) கட்டுப்பட்டு வாழும் முறை உள்ளது. சேலா, மகள், மகன், பேத்தி, தங்கை, மருமகள் சம்பாதித்துத தரவேண்டும். அவர்கள் மேல் அனைத்து உரிமையும் பெரியவர்கள் பெறுகின்றனர். இவர்களை சிறியவர் எதிர்த்து பேசுவதோ அடிப்பதோ இல்லை. மரியாதையுடன் நடத்துகின்றனர். ஒரு குரு எத்தனை சேலா வேண்டுமானாலும் தத்தெடுத்துக் கொள்ளலாம். எந்த உறவிற்கு எண்ணிக்கை கிடையாது.
உசாத்துணை
- திருநங்கையர் - சமூக வரைவியல், கரசூர் பத்மபாரதி, தமிழினி, 2013.
நன்றி கரசூர் பத்மபாரதி