under review

காரியாசான்

From Tamil Wiki
Revision as of 10:42, 24 December 2024 by Logamadevi (talk | contribs)

காரியாசான்(பொ.யு. நான்காம் நூற்றாண்டு) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறுபஞ்சமூலத்தின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்பது கொல்லாமையை வலியுறுத்துவதால் அறியப்படுகிறது. ‘மழைக்கை மாக்காரி யாசான்’ என்ற தொடர் மூலம் அவர் கொடை வள்ளலாக இருக்கலாம் எனப்படுகிறது. இவரது காலம் பொ.யு. நான்காம் நூற்றாண்டு.

இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. காரியாசனும் கணிமேதாவியாரும் (ஏலாதி மற்றும் திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள் ஆவர்

இலக்கிய வாழ்க்கை

காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற அற நூலை எழுதினார். சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு
ஒத்த இவையலவோர் நாலிட்டு - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலம் சிறந்து

கொலை, பொய், புலால், களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் அமைந்துள்ளது. பஞ்சத்தைப் போக்கும் மழைபோல. இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும் என நூலின் முதல் பாடல் கூறுகிறது.

அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன. வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான். அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன.

பாடல் நடை

வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு
அந்த மகற்சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்
குன்றுபோல் கூடும் பயன்

உசாத்துணை

சிறுபஞ்சமூலம், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page