ஜீவகீதம்

From Tamil Wiki
Revision as of 07:17, 15 June 2022 by Jeyamohan (talk | contribs)

ஜீவகீதம் (1966) ஜெகசிற்பியன் எழுதிய சமூக நாவல். இந்திய தேசியகீதத்தின் மீது ஒரு எளிய குடிமகனுக்கு இருக்கும் பற்றை விவரிப்பது. மடுமல்லாமல் நாடற்றவனுக்கு நாடு எப்படி பொருள்படுகிறது என்பதை சித்தரிப்பது. தேசிய உணர்ச்சியை உருவாக்கும் படைப்பு என்பதனால் 13 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

பர்மாவுக்கு உழைப்புக்காகத் தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் பர்மாவிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டு மீண்டும் தாயகமான தமிழகத்துக்குத் திரும்புகின்றான். அவ்விதம் திரும்புகையில் அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு இவ்விதம் அகதியாக வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி என்னும் இந்தப் பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை யாரும் சந்தித்திராத வித்தியாசமான பாத்திரமென்று நான் நினைக்கின்றேன். சென்னைப் பேச்சுத்தமிழில் அசத்தும் இவனுக்கும், கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையிலான காதல், , அதற்காக அவள் முன் தான் ஒரு உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அவனெடுக்கும் பல்வேறு அவதாரங்கள் நாவலின் சுவையினைக் கூட்டுபவை. இவனது பிறப்பும் வித்தியாசமானது. இவனது தாயான கன்னியம்மாள் ஆங்கிலோ இந்தியக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாக வேலை பார்க்கின்றாள். உலக மகா யுத்தக் காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், கன்னியம்மாளுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவன்தான் நச்சி. அவனது தோற்றமும ஈர் இனக்கலப்பின் விளைவினை வெளிப்படுத்தும் தன்மையானது.

ஓர் அரசியல்வாதியின் சகோதரிக்கும் , பயில்வான் ஒருவனுக்கும் பிறந்த வேதா என்னும் பெண்ணும் நச்சுவின் தாயாரின் பொறுப்பில் வளர்கின்றாள். வீதியில் அநாதரவாகக் கை விடப்பட்ட குழந்தையான வேதாவை அப்பயில்வான் தம்பையாவே கன்னியம்மாளிடம் வளர்க்கக் கொடுக்கின்றான். நச்ச்சினார்க்கினியன் என்று நச்சுவுக்கும், வேதகுமாரி என்று வேதாவுக்கும் பெயர் வைப்பதும் அந்தப் பயில்வான் தம்பையாதான். தம்பையாவும் வித்தியாசமான பாத்திரம்தான். நாவலின் இறுதியில்தான் பயில்வான் தம்பையாவுக்கே வேதா அவன் மகள் என்னும் விபரம் தெரியும் வகையில் கதையினை நாவலாசிரியர் பின்னியிருக்கின்றார். அதே சமயம் அகதியாகச் சென்னையில் வீடற்றவனாக அலையும் சபேசனின் அன்றாட நகர வாழ்க்கையினை நன்கு விபரித்திருப்பார் ஜெகசிற்பியன்.

இவ்விதமாக நகரும் கதையினூடு ஆசிரியர் அக்காலகட்டத்தில் நிலவிய ஊழல் நிறைந்த அரசியலை, நாயகன் சபேசனின் தேச பக்தி மிக்க இலட்சிய நோக்கினை, உணர்வினை, நகரத்து வாழ்வின் அவலங்களை, கிராமத்து வாழ்வின் இனிமையினை, ஆரோக்கியமான இயல்பினை, அகதிகளின் வாழ்வின் அவலங்களையெல்லாம் (பர்மாவிலிருந்து மற்றும் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியா திரும்பியவர்களின் அவலங்களையெல்லாம்) விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார். சபேசன், நச்சி, கன்னியம்மாள், தம்பையா போன்ற பாத்திரங்களூடு நகர அடித்தட்டுமக்கள் இருப்புக்காக அன்றாடம் போராடுவதை விரிவாகவே நாவலில் விபரித்திருப்பார் ஜெகசிற்பியன். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும், அவ்விதம் பணம் கொடுப்பதன்மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மேலும் துணைபோகும் வாக்காளர்களின் செயற்பாடுகளையும் கடுமையாகவே விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார் நாவலாசிரியர். சிந்தனையைத் தூண்டும் ஆரோக்கியமான இலட்சிய நோக்கு மிக்க இவ்வகையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்குமென்பதால் இந்த நாவலும் அன்றும், இன்றும் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம்."