under review

த.நா.குமாரசாமி

From Tamil Wiki
த.நா.குமாரசாமி

த.நா. குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) (த.நா.குமாரசுவாமி) (த.நா.குமாரஸ்வாமி) (டிசம்பர் 24, 1907 - செப்டம்பர் 17, 1982) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர், பல நவீன இலக்கியப் படைப்புக்களை செம்மைசெய்து உதவியவர்.

பிறப்பு, கல்வி

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 24, 1907-ல் மகனாகப் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை நாராயண சாஸ்திரியும் ஓர் எழுத்தாளர். போஜ சாத்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருடைய மூத்த சகோதரர்.

சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளை துணைப்பாடமாக கொண்டிருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவம், உளஇயல் முதலிய பாடங்களைப் படித்து 1928 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

த.நா.குமாரசாமி

த.நா.குமாரசாமி 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த.நா. குமாரசுவாமியின் மகன் த.கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய சிந்தனை செயல் சாதனை எனும் நூல் 1987-ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இதழியல்

த.நா.குமாரசாமி 1947 – 1948-ஆம் ஆண்டுகளில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி சில மாதங்கள் நடத்தினார்.

அரசியல்

த.நா.குமாரசாமி காந்திய அரசியலில் ஈடுபாடு கொண்டவர். சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை காந்தி ஐயர் என்று அழைத்தனர் என்று சா.கந்தசாமி குறிப்பிடுகிறார். த.நா.குமாரசாமி ‘சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

ஆன்மிகம்

த.நா.குமாரசாமி இறுதிக்காலத்தில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். த.நா.குமாரசாமியின் தந்தை எழுதிய The Age Of Sankara என்னும் நூலை த.நா.குமாரசாமி விரிவாக்கி எழுதினார் என்று சக்தி சீனிவாசன் குறிப்பிடுகிறார்.

இலக்கியவாழ்க்கை

த.நா.குமாரசாமி 1930-ல் வங்கம் சென்று, சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். தான் மொழியாக்கம் செய்த கவிதைகளை காட்டி வாழ்த்து பெற்றார். இலக்கிய ஆர்வம் தாகூரில் இருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டிருக்கிறார்

த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார். தொடர்ந்து கலைமகள், கல்கி, சுதேசமித்திரன் இதழ்களில் சிறுகதைகளும் குறுங்கட்டுரைகளும் எழுதினார். 1934 முதல் 39 வரை எழுதிய கதைகளை தொகுத்து ‘கன்யாகுமரி முதலிய கதைகள்’ என்னும் முதல் சிறுகதை தொகுதியை அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

மொழியாக்கப்பணி

காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் பணியாற்றினார் . அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்திச் சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்."கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்’ என்று அதை அவர் குறிப்பிட்டார்.

த.நா.குமாரசாமி

த.நா.குமாரசாமி 1962-ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . முதன்மையாக மொழியாக்கத்தில் ஈடுபட்டார்.

த.நா.குமாரசாமியின் வங்க நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை ‘ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்’ என அவர் எழுதினார்.

சாகித்திய அக்காதமி சார்பில், 1960-61 – களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு, ரவீந்திரர் கதைத்திரட்டு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. த.நா.குமாரசாமி அவற்றின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தொகுப்பாளாராகப் பணியாற்றினார்.

திரைப்படம்

1040ல் ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எழுதிய ஆவணப்படத்துக்கு த.நா.குமாரசாமி பின்னணி உரை எழுதினார்.

விருதுகள்

வங்க அரசு, தமிழ் – வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளிதது. தமிழக விருதுகள் எவையும் கிடைக்கவில்லை.

த.நா.குமாரசாமியின் படைப்புகளைத் தமிழக அரசு 2006 - 2007-ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியது

மறைவு

த.நா.கு. தமது 75-வது வயதில் செப்டம்பர் 17, 1982 அன்று காலமானார்.

நினைவுநூல்கள்

  • த.நா.குமாரசாமி- த.கு.அஸ்வின் குமார்- இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
  • குடத்திலிட்ட விளக்கு -முகுந்தன்- வானதி பதிப்பகம்

நூற்றாண்டு விழா

த.நா.குமாரசாமியின் நூற்றாண்டு அவர் மகன் த.கு .அஸ்வினிகுமார் மற்றும் குடும்பத்தவரால் பிப்ரவரி 2008ல் சென்னையில் கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் சா.கந்தசாமி கலந்துகொண்டு த.நா.குமாரசாமி குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலக்கிய இடம்

நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே- என்று மு.வரதராசன் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். த.நா.குமாரசாமியின் கதைகளை வாழ்க்கைச் சித்திரங்கள் என்று வரையறை செய்யலாம். நவீனச் சிறுகதையின் இலக்கணம் அமையாத சிறிய கதைகள் அவை.

சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் த.நா.குமாரசாமியின் முதன்மைக் கொடை மொழியாக்கங்களே. அவர் மொழியாக்கம் செய்த தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம், கவி, அக்னி போன்ற நாவல்கள் முக்கியமானவை. பிபூதிபூஷன் பானர்ஜியின் வனவாசி, போன்றவை தமிழிலக்கியத்தில் அழுத்தமான செல்வாக்கை உருவாக்கிய படைப்புகள்.

நூல்கள்

சிறுகதை
  • கன்யாகுமாரி
  • குழந்தை மனம்
  • சக்தி வேல்
  • தேவகி
  • மோகினி
  • பிள்ளைவரம்
  • போகும் வழியில்
  • வஸந்தா
  • கதைக்கொடி
  • அன்னபூரணி
  • கதைக் கோவை-3
  • கதைக் கோவை-4
  • இக்கரையும் அக்கரையும்
  • நீலாம்பரி
  • சந்திரகிரகணம்
நாவல்
  • ராஜகுமாரி விபா
  • சந்திரிகா
  • இல்லொளி
  • மனைவி
  • உடைந்தவளையல்
  • ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
  • தீனதயாளு
  • மிருணாளினி
  • இந்திரா
  • தேவதாஸ்
  • ஸெளதாமினி
  • லலிதா
  • கானல் நீர்
  • அன்பின் எல்லை
  • ஒட்டுச்செடி
  • வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு
  • விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்
  • ஆனந்த மடம்- பங்கிம் சந்திரர்
  • கிருஷ்ணகாந்தன்- பங்கிம் சந்திரர்
  • உயில் -பங்கிம் சந்திரர்
  • கபாலகுண்டலா- பங்கிம்சந்திரர்
  • இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்
  • ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய
  • அக்னி - தாராசங்கர் பானர்ஜி (ஆகுன்)
  • கவி -தாராசங்கர் பானர்ஜி
  • பொம்மலாடம் - ”புதுல் நாச்சார் கி இதிகதா”, வங்காளி, மாணிக் பந்தோபாத்யாய
  • மானபங்கம் ரவீந்திரநாத் தாகூர்
  • தாகூர் சிறுகதைகள்
  • கோரா – ரவீந்திரநாத் தாகூர்
  • வினோதினி - இரவீந்திரநாத் தாகூர்
  • புயல் - ரவீந்திரநாத் தாகூர்
  • மூன்றுபேர்- ரவீந்திரநாத் தாகூர்
  • தாகூரின் கடிதங்கள்
  • மனைவியின் கடிதம்- ரவீந்திரநாத் தாகூர்
  • கோதமபுத்தர்- ஆனந்த குமாரசாமி& ஐ.பி.ஹானர்
  • மால்கோஷ் வங்காளச் சிறுகதைகள்
  • பாபுஜியின் நினைவுக்கோவை
  • யாத்ரீகன் - பிரபோத் குமார் சன்யால்

உசாத்துணை


✅Finalised Page