under review

திருவள்ளுவர் ஆத்திசூடி

From Tamil Wiki
Revision as of 18:34, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
திருவள்ளுவர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)
திருவள்ளுவர் ஆத்திசூடி

திருவள்ளுவர் ஆத்திசூடி (முதல் பதிப்பு: 1990), நீதி நூல்களுள் ஒன்று. திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் நீதிக் கருத்துகளைத் தொகுத்து ஆத்திசூடி நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் சேயோன்.

வெளியீடு

திருவள்ளுவர் ஆத்திசூடியின் முதல் பதிப்பு 1990-ல் வெளியானது. 2007 வரை நான்கு பதிப்புகள் வெளிவந்தன. ஐந்தாம் பதிப்பு, முரளி பதிப்பகம்மூலம் மார்ச், 2011-ல் வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர், டாக்டர் சேயோன். என்.வி. சுப்பராமன் மொழிபெயர்ப்பில் இந்நூல் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. மயிலை திருவள்ளுவர் சங்கம் மார்ச், 2001-ல், ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டது.

நூல் அமைப்பு

திருவள்ளுவர் ஆத்திசூடி நூல் திருக்குறளில் உள்ள அறக்கருத்துக்களிலிருந்து 133 நீதி மொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டது. ஒவ்வொரு நீதி மொழியின் பின்னாலும் அது இடம்பெற்ற குறட்பாவின் எண் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டது.

உள்ளடக்கம்

திருவள்ளுவர் ஆத்திசூடி, 'அகர முதல் எழுத்து எல்லாம், அகம் தூய்மை வாய்மையால் காணப்படும், அகம்நக நட்பது நட்பு, அச்சம் உடையார்க்கு அரண் இல்லை, அச்சமே கீழ்களது ஆசாரம்' என அகர வரிசையில் தொடங்கி, 'யாகாவார் ஆயினும் நா காக்க, வசையொழிய வாழ்வாரே வாழ்வார், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, வேண்டற்க வெஃகியான் ஆக்கம்' என வகர வரிசையில் நிறைவுறுகிறது.

பாடல் நடை

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடை தெரிந்து நன்குணர்ந்து சொல்லுக (712)

இலன் என்று தீயவை செய்யற்க (205)

இன்பம் விழையான் வினைவிழைவான் (615)

இன்மையுள் இன்மை விருந்தோரால் (153)

ஈதல் இசைபட வாழ்தல் (231)

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் (596)

உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு (339)

எண்ணித் துணிக கருமம் (467)

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (125)

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்

மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர் (997)

மருவுக மாசற்றார் கேண்மை (800)

மறந்தும் பிறன்கேடு சூழற்க (204)

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (457)

மதிப்பீடு

திருவள்ளுவர் ஆத்திசூடி, திருக்குறளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திசூடி நூலாக அறியப்படுகிறது. சிறார்களுக்கு மட்டுமல்லாமல் பெரியோர்க்கும் பயன் தரும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:10:16 IST