அனந்தகிருஷ்ணையங்கார்
தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் (அநந்தகிருஷ்ணையங்கார்) ( ) தமிழ் மரபுக்கவிஞர். கவிராயர் மரபில் வந்தவர்.
பிறப்பு, கல்வி
தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் தூத்துக்குடி மாவட்டத்தில், தென்திருப்பேரை என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர், சீனிவாசையங்கார், தாய் குழைக்காத நாச்சியார். அனந்தகிருஷ்ணையங்கார் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை.
தென்திருப்பேரை தாமிரவர்ணி ஆற்றங்கரையிலுள்ள தொன்மையான ஒன்பது திருமால் ஆலயங்களில் ஒன்று. அனந்தகிருஷ்ணையங்காரின் குடும்பம் பாரம்பரியமாகவே தமிழ், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் கவிராதர்கள். அவரது பாட்டனார் சின்னத்தம்பு குழைக்காத ஐயங்கார் திருவிதாங்கூர் அரசர் சுவாதித்திருநாளின் அவைப்புலவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஜைமினி சூத்திர தலவகார சாமவேதியர் குலத்தில், நூற்றெண்மர் மரபில், பிள்ளைமங்கலத்தார் குடியில் அனந்தகிருஷ்ணையங்கார் பிறந்தா என ஆய்வாளர் குறிப்பிடுகிறார்
அனந்தகிருஷ்ணையங்கார் தந்தையிடமே இலக்கியங்களையும் இலக்கணநூல்களையும் கற்றார்.
இலக்கியப்பணி
அனந்தகிருஷ்ணையங்கார் 1894ல் தன் முதல்நூலான பத்மநாபசுவாமி மாலையை வெளியிட்டார். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்புலவராகப் பணியாற்றிய யாழ்ப்பாணம் கணபதிப் பிள்ளை இந்நூலுக்கு சிறப்புப் பாயிரம் அளித்தார். 1903 ஆம் ஆண்டு கண்ணன் கிளிக்கண்ணி என்னும் நூலை வெளியிட்டார். மெய்யியல் நூலான ஞானசித்தர் வேள்வி விளக்கம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மகுட விழாவை போற்றி மகுடதாரண வைபவ வெண்பா என்னும் நூலை இயற்றினார். இந்நூலுக்கு உ.வே.சாமிநாதையர் சிறப்புப்பாயிரம் வழங்கினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளிவிழாவில் கமலபந்த வெண்பா என்ற நூலை இயற்றினார். 1836 ல் தனிப்பா மஞ்சரி என்னும் நூலை வெளியிட்டார்
அனந்தகிருஷ்ணையங்கார் திருவரங்கச் சிலேடை மாலை என்னும் நூறு பாடல்கொண்ட நூலை 1900த்தில் இயற்றினார். 1936ல் அது நூலாக வெளிவந்தது. தென்திருப்பேரையின் புகழைப்பாடும் திருப்பேரைக் கலம்பகம் என்னும் நூலையும், வைணவ திவ்யதேசங்களின் பெருமையைச் சொல்லும் திவ்யதேசப்பாமாலை என்னும் நூலையும் எழுதினார். இந்நூலில் ஆழ்வார்கள் பாடாதுவிட்ட தலங்களையும் பாடியிருக்கிறார். வைணவ ஆசாரியரான மணவாள மாமுனிகள்