under review

திருவரங்கன் உலா

From Tamil Wiki
Revision as of 21:36, 8 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Jeyamohan)

To read the article in English: Thiruvarangan Ulaa (novel). ‎

திருவரங்கன் உலா நாவல்

திருவரங்கன் உலா ஒரு தமிழ் வரலாற்று கேளிக்கை நாவல். தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் [உலூக் கான்] படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்றுச் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் எழுதியது. இந்நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. சுல்தானின் படையெடுப்பில் இருந்து ரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று திருவரங்கத்தை நாயக்கர்கள் மீட்டபின்னர் திரும்ப கொண்டுவந்த வரலாறு இந்நாவலில் பேசப்படுகிறது.

வரலாற்றுப்பின்புலம்

பொ.யு.1326-ல் தென்னகம் மீது படையெடுத்து வந்த முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை கொள்ளையிட்டார். கோயிலைக் காக்க வைணவ ஆசாரியர்களும் மக்களும் ஆலய ஊழியர்களும் போராடினார்கள். சுல்தான் படைகளிடமிருந்து செல்வங்களைக் காக்க நகைகள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். பின் கி.பி. 1371-ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலொழுகு இரண்டு பகுதிகள், மற்றும் வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரின் நம்பெருமாள் வனவாசம் ஆகியவற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

உருவாக்கம், பிரசுரம்

டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் எழுதிய South India and the Mohemmedan Invaders என்ற நூலை கன்னிமாரா நூலகத்தில் பார்த்ததாகவும் அதில் அவர் மேற்கோள் காட்டியிருந்த The Sack of Srirangam என்னும் பழைய நூல்குறிப்பால் ஆர்வமடைந்து மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடங்கி இந்நாவலை எழுதியதாகவும் ஸ்ரீவேணுகோபாலன் இந்நாவலின் 2002-ஆம் வருடப் பதிப்புக்கு எழுதிய கதை தோன்றிய கதை என்னும் முன்னுரைக்குறிப்பில் சொல்கிறார்.

இந்நாவல் தினமணி கதிர் வார இதழில் 1978-ல் தொடராக வெளிவந்தது. இரண்டாம் பகுதியும் சில ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியது. பின்னர் நூல் வடிவாகியது.

இலக்கிய இடம்

திருவரங்கன் உலா உண்மையான வரலாற்று நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட பொழுதுபோக்கு நாவல். சாகசம், மர்மம் ஆகிய இயல்புகள் கொண்டது. தமிழில் வரலாற்றுப் பொழுதுபோக்கு நாவல்களுக்கு ஒரு மரபு உண்டு. வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் மரபை அடியொற்றி கல்கி முதல் பலர் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். ஆனால் சாகசநாயகனை மையமாகக் கொள்ளாமல் ஒரு வரலாற்று நிகழ்வை மையமாகக்கொண்டு எழுதப்பட்டமையால் இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது. இந்நாவலில் வேதாந்த தேசிகர், பிள்ளைலோகாச்சாரியார் போன்ற வைணவ ஆசாரியார்களும் கதைமாந்தராக வருகிறார்கள்.

உசாத்துணை


✅Finalised Page