சந்திரசேகர கவிராச பண்டிதர்
சந்திரசேகர கவிராச பண்டிதர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
சந்திரசேகர கவிராச பண்டிதர் சோழ நாட்டின் தில்லையம்பூரில் பிறந்தார். தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் என்று அழைக்கப்பட்டார். திருத்தணிகை விசாக பெருமாள் ஐயரும், சரவண பெருமாள் ஐயரும் இவரின் ஆசிரியர்கள். 1888-ல் சி. தியாகராச செட்டியார் விடுமுறையில் இருந்த சில மாதங்களில் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். சித்தூர் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சந்திரசேகர கவிராச பண்டிதர் 'வருஷாதி நூல்' என்ற நூலை 1868-ல் இயற்றினர். 'துலுக்காணத்தம்மை பதிகம்' எனும் பாடலைப் பாடினார். இராமநாதபுர பொன்னுச்சாமித் தேவர் மேல் பல தனிப்பாக்கள் பாடினார். திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீசுப்ரமணியதேசிகர் மீது மும்மணிக்கோவை பாடினார்.
பதிப்பாளர்
'தண்டியலங்காரம்', 'தனிப்பாடற்றிரட்டு' போன்ற தமிழ் நூல்கள் பலவற்றை திருத்தி அச்சிட்டார். 'சினேந்திரமாலை', 'குமாரசுவாமீயம்', 'ஞானப் பிரகாச தீபிகை', 'காலப்பிரகாச தீபிகை', 'சாதக சிந்தாமணி', 'முகூர்த்த விதானம்', 'மரண கண்டிகை', 'சாதகாலங்காரம்', 'உள்ள முடையான்' முதலிய நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். 1862-ல் இராமநாதபுர பொன்னுச்சாமித் தேவர் வேண்டுகோளின்படி தொகுக்கப்பட்ட 'தனிப்பாடல் திரட்டு' நூலின் பதிப்பாசிரியர்களில் கவிராச பண்டிதரும் ஒருவர்.
பாடல் நடை
இய்யூர்த கரவெடுத்த திருமான் மருகன்
மையூர் குமரன் மலரடிக்கு - மெய்யூர்
மனத்தை யளித்தபொன்னுச் சாமிக்கு மானே
அனத்தை மறந்தாளென் றறை
நூல் பட்டியல்
- வருஷாதி நூல் (1868)
- மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நான்மணிமாலை
- துலுக்காணத்தம்மை பதிகம்
- ஸ்ரீசுப்ரமணியதேசிகர் மும்மணிக்கோவை
பதிப்பித்தவை =
- தண்டியலங்காரம்
- தனிப்பாடல் திரட்டு
- சினேந்திரமாலை
- குமாரசுவாமீயம்
- ஞானப் பிரகாச தீபிகை
- காலப்பிரகாச தீபிகை
- சாதக சிந்தாமணி
- முகூர்த்த விதானம்
- மரண கண்டிகை
- சாதகாலங்காரம்
- நன்னூல்காண்டிகையுரை
- ஐந்திலக்கணவினாவிடை
- பாலபோத இலக்கணம்
- நன்னூல் விருத்தியுரை
- செய்யுள்கோவை
- பழமொழி திரட்டு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Aug-2023, 20:23:12 IST