under review

மலர்மஞ்சம்

From Tamil Wiki
Revision as of 16:12, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மலர் மஞ்சம், காலச்சுவடு பதிப்பகம், 2018

மலர்மஞ்சம் (1960) தி.ஜானகிராமன் எழுதிய தமிழ் நாவல். வாரத்தொடராக வந்து பின்னர் 1961-ல் நாவலாக பதிப்பு கண்டது. பேசாப்பொருளைப் பேசத் துணிந்ததற்காக கவனிக்கப்பட்டது. 'ஒரு ஆணுக்கு இரு பெண்கள் மேல் காதல் இருக்கலாம், இருவர் மேலும் இணையான காதல் இருக்கலாம் . ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள் மேல் காதல் வந்தால்? பிறந்தவுடன் தன் தாய் முடிவு செய்து நிச்சயித்தவனா அல்லது தனது மனம் விரும்பும் தோழனா?' என்ற கதாநாயகியின் தடுமாற்றமே நாவலின் மூலக்கரு.

உருவாக்கம் & பதிப்பு

தி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் 'மலர் மஞ்சம் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் 1960-ம் ஆண்டில் தொடராக வெளிவந்தது.1961-ல் முதல் பதிப்பை ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துள்ளன

கதைச்சுருக்கம்

ராஜாங்காடு என்னும் கிராமத்தில் தொடங்கிய கதை தஞ்சாவூருக்கும் சென்னைக்கும் நகர்ந்து காசியில் முடிவடைகிறது. முதல் மூன்று மனைவிகளை இழந்த ராமையா, நான்காவது மனைவியின் கடைசிச் சொல்படி பிறந்த குழந்தை பாலியை தங்கராஜனுக்கு நிச்சயம் செய்து வாக்குக் கொடுத்துவிடுகிறார். தீமையே உருவான வையன்னாவின் செய்கைகளால் வெறுப்புற்று, தஞ்சைக்கு இடம் பெயர்கிறார் ராமையா. அங்கே சாமிநாத நாயக்கர் மற்றும் வக்கீலின் நட்பு வாய்க்கிறது.

அவர்கள் தூண்டுதல்பேரில் பாலி கல்வியும், நடனமும் கற்கிறாள். வக்கீலின் பேரன் ராஜா விளையாட்டுத் தோழனாகிறான். ராஜாவின் மனதில் அப்போதே பாலி தேவதையாகக் குடிகொள்கிறாள். கல்லூரிப் படிப்பிற்காக சென்னை செல்லும் பாலி கண்ணுக்குப் புலப்படாத நிழலாக மனதில் இருக்கும் ராஜாவைக் கண்டுகொள்கிறாள். இப்போது நிச்சயிக்கப்பட்டவனும் தோழனும் மனதில் சமமாக நிற்கிறார்கள், நாட்கள் போக ராஜா கொஞ்சம் அதிகமாகவே.

மனப்போராட்டத்தில் உள்ள பாலிக்கு நடனப்பயிற்சியே யோகமாக ஆகிறது. பாலியின் விருப்பம் அறிந்து எல்லாரும் அதிர்ந்து போகிறார்கள். இருந்தாலும் நாயக்கர் அவள் மேல் உள்ள பிரியத்தால் அவள் மனம் போலவே நடக்கும் என்று வாக்கு தருகிறார். பாலியின் மனமறிந்த தோழி செல்லம் அவளுக்கும் மற்றவர்களுக்கும் பாலமாக இருக்கிறாள்.

தஞ்சை பெரிய கோவிலில் அனைவரும் கூட, தங்கராஜனும் இதை அறிகிறான். வருடங்களுக்கு முன்னால் தங்கராஜன் செய்த செயல் ஒன்று தெரிய வருகிறது. அந்த செயலா அல்லது அண்ணாந்து பார்த்த கோபுரங்கள் தந்த தெளிவா -பாலி முடிவு செய்கிறாள். தாயின் வாக்குறுதியே வெல்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றியதால் ஒருவரும், காப்பாற்றாததால் இன்னொருவரும் துறவு மேற்கொள்கிறார்கள்.

கதாபாத்திரங்கள்

  • பாலி - கதையின் நாயகி. நுட்பமும், மன உறுதியும் தெளிவும் நிறைந்த பெண்
  • ராமையா- பாலியின் தந்தை. நான்கு முறை மணந்து நான்கு மனைவியரையும் இழந்தவர்
  • அகிலாண்டம்-பாலியின் தாய், அவளைப் பெற்றவுடன் தங்கராஜனுக்கு நிச்சயம் செய்துவிட்டு இறந்தவர்
  • வடிவம்மாள் - பாலியின் அத்தை, அவளை வளர்த்தவள்
  • ஜகது,சுப்ரமண்யன் -கிராமத்தில் குடும்ப நண்பர்கள்
  • தங்கராஜன் - பாலிக்கு நிச்சயிக்கப்பட்டவன். அவளை உயிராக நேசிப்பவன்
  • சொர்ணம் , சின்னக்கண்ணு - தங்கராஜின் தாய் தந்தையர்
  • வையன்னா - ராஜாங்காட்டின் நிலச்சுவான்தார் தீமையே உருவானவர், ராமையாவை அவதூறு செய்து, அவர் தோட்டத்தை அழித்தவர்
  • சாமிநாத நாயக்கர் - வணிகர். ராமையாவின் ஆப்த நண்பர். கோணவாய் நாயக்கர் என்ற காரணப் பெயரும் உண்டு
  • வக்கீல் நாகேஸ்வரய்யர்-ராமையாவுக்கும் நாயக்கருக்கும் ஆப்த நண்பர்
  • பெரியசாமி - பாலியின் நாட்டிய குரு
  • ராஜா - வக்கீலின் பேரன்
  • செல்லம் - பாலியின் கல்லூரித்தோழி, பால்ய விதவை

இலக்கிய மதிப்பீடு

நாவலாசிரியராக தி. ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பு இது. பாத்திரப் படைப்பு, மொழி, வாசிப்பின் உயிரோட்டம் , ஆண் பெண் உறவுச்சிக்கல் பற்றிய விசாரணை ஆகிய கூறுகளால் தனித்துநிற்கும் படைப்பு. மரப்பசு அம்மணிக்கும், உயிர்த்தேன் அனுசுயாவுக்கும் பாலியே முன்னோடி. மீறல்களை நோக்கிப் போனாலும் இறுதியில் யதார்த்தத்தை பார்க்கத் திரும்பும்தி. ஜா வின் கதாபாத்திரங்களின் முன்னோடி என்று கருதப்படுகிறது. நாயக்கர், வக்கீல் மற்றும் செல்லம் - இவர்களில் உயர்ந்த நட்பில் காணும் இலட்சியத் தன்மையும் குறிப்பிடத்தக்கது.

வையன்னாவால் நாசம் செய்யப்பட்ட மீனாட்சிக் கொல்லையை செகாவின் ' The Cherry orchard’ ல் வரும் செர்ரித் தோட்டம் அழிக்கப்படுவதற்கு ஒப்பிடுகிறார் இரா.கைலாசபதி. முடிவில் வரும் தஞ்சை கோவில் கோபுரமும் அதன் மேல் அமரும் காக்கைகளும் பெரிய படிமங்களாகின்றன. விமரிசகர் வெங்கட் சுவாமிநாதனும் எழுத்தாளர் ஜெயமோகனும் இவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் தன் தமிழ் நாவல்கள்-விமரிசகன் சிபாரிசில் மலர்மஞ்சம் நாவலை பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகளில் ஒன்றாக வகைப்படுத்தியிருக்கிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:44 IST