மதுரை வீரன் அம்மானை

From Tamil Wiki
Revision as of 23:25, 12 September 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
மதுரை வீரன் அம்மானை

மதுரை வீரன் அம்மானை (1999) கதைப் பாடல் நூல்களுள் ஒன்று. மதுரை வீரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது. இந்நூலை இயற்றியவர் பற்றி அறிய இயலவில்லை. இந்த நூலை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டது. இதன்  பதிப்பாசிரியர், ம. சீராளன்.

பிரசுரம், வெளியீடு

ஓலைச்சுவடி வடிவில் இருந்த மதுரை வீரன் அம்மானை இலக்கியப் படைப்பை, சரஸ்வதி மகால் நூலகம், 1999-ல் பதிப்பித்து நூலாக வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர், ம. சீராளன்.

நூலின் கதை

நாட்டுப்புற தெய்வங்களுள் ஒன்று மதுரை வீரன். மதுரை வீரன் காசி ராஜாவின் மகனாகப் பிறந்தான். அவன் மாலை சுற்றிப் பிறந்ததால், அவன் இருப்பது நாட்டுக்கு ஆகாது என நிமித்திகர்கள் கூறுகின்றனர். அதனால் காசிராஜன் அவனைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறான். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவன் மதுரை வீரனைக் கண்டெடுத்து வளர்த்தான். மதுரை வீரன் சித்திகள் பல பெற்றான். சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். பொம்மன நாயக்கனின் மகள் பொம்மியை மணம் செய்துகொண்டான். திருச்சிராப்பள்ளியில் அரசு செலுத்திய விஜயரங்க சொக்கலிங்கரிடம் மாதமொன்றுக்கு ஆயிரம் பொன் பெற்றுக் கொண்டு சேவகப் பதவியில் அமர்ந்தான்.

இந்நிலையில், திருமலைநாயக்கர், மதுரையில் கள்வர் பயம் அதிகமாயிருந்ததால் விஜயரங்க சொக்கலிங்கர் வந்து அவர்களை அடக்க வேண்டுமெனக் கேட்டு கடிதம் எழுதினார். விஜயரங்க சொக்கலிங்கர்,  மதுரைக்குச் சென்று அக்கொடிய கள்வர்களையடக்கி வருமாறு மதுரை வீரனுக்கு ஆணையிட்டார். அவனும் அவ்வாறே மதுரை சென்று, கள்வர்களை ஒழித்துக் கள்வர் பயம் நீக்கினான். தொடர்ந்து  திருமலைநாயக்கர் அரண்மனையிலேயே பணியாற்றினான்.

நாளடைவில், விதிவசத்தால்,  திருமலை நாயக்கருக்கு உறவான வெள்ளையம்மாள் என்பவளை மணந்தான். அவளை அழைத்துச் செல்லும்போது காவலர்களால் மாறு கால், மாறு கை  வாங்கப்பட்டான். இறுதியில் திருமலைநாயக்கர் மீனாட்சி அம்மனை வேண்டிகொள்ள, மதுரை வீரன், அன்னையின் அருளால் முன் போலவே கை, கால்கள் வரப்பெற்றான். இறுதியில் பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் தீக்குழியில் இறங்கித் தன் உயிரைப் போக்கிக் கொண்டான். மக்கள் வணங்கும்  தெய்வமானான்.

- இதுவே மதுரை வீரன் அம்மானையின் கதை.

மீனாட்சியம்மன் சந்நிதியில் கம்பத்தடியில் பூசைகொண்டிருக்கும் மதுரை வீரனை, மாவீரனாக மக்கள் இன்றும் வழிபட்டுச் செல்கின்றனர்.