வீடூர் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
Revision as of 07:22, 23 February 2022 by Ramya (talk | contribs)

வீடூர் ஆதிநாதர் கோயில்

இடம்

திண்டிவனத்திற்கும், விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள வீடூர். இவ்வூர் திண்டிவனத்திலிருந்து இருபத்தினான்கு கிலோமீட்டர் தென்கிழக்கில் உள்ளது.

வரலாறு

பொ.யு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சமணத் தலமாக விளங்கியுள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்களின் வழி அறியலாம்.

கல்வெட்டுக்கள்

இங்குள்ள கோயிலில் பண்டைக்காலத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் இருந்திருக்கவேண்டும். பின்னர் இக்கோயில் பலமுறை புதுப்பிக்கப்பட்டமையால் அவை முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கோயிலில் பண்டைய கட்டடக் கலையம்சங்கள் எவையும் இல்லை. திருச்சுற்று மதிலின் கிழக்கிலுள்ள தரைப்பகுதியில் ஏராளமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கற்கள் ஒன்றில் இராட்டிரகூட மன்னாகிய மூன்றாம் கிருஷ்ணனது (பொ.யு. 939-968) சாசனம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த சாசனத்தின் தொடக்கத்தில் ”ஸ்வஸ்திஸ்ரீ கன்னரதேவர்க்கு ...” என்ற வாசகமும், அதற்குச் சிலவரிகளுக்குக் கீழாக தானம் கொடுத்ததைக்குறிக்கும் செய்தியும் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சிதைந்தும் தேய்ந்தும் காணப்படுகிறது. இச்சாசனத்தின் அடிப்படையில் பொ.யு. 10 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இங்கு ஆதிநாதர் கோயில் இருந்தது. தக்காணத்தை ஆட்சிபுரிந்த இராட்டிரகூட பரம்பரையில் வந்த மூன்றாம் கிருஷ்ணன் (கன்னரதேவன்) தமிழகத்தின் வடபகுதியினைக் கைப்பற்றி அரசுபுரிந்தபோது இக்கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டதென்று வரையறை செய்ய இயலவில்லை.

இந்த கோயிலின் திருச்சுற்று மதிலின் வடக்குப்பகுதியில் வெளிப்புறமாக கல்வெட்டுக்களைக் கொண்ட சில கருங்கற்கள் தலைகீழாகப் பதிக்கப்பட்டிருப்பட்டிருக்கிறது. இவையும் மிகவும் சிதைக்கப்பட்ட சாசனங்கள். இதிலிருந்து எந்த செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை எனினும், இது பொ.யு. 12-13 ஆம் நூற்றாண்டு வரிவடிவம் பெற்றிருக்கிறதென்பதனை மட்டும் கூறலாம். இதுபோன்று மிகவும் அழிந்த நிலையிலுள்ள எழுத்துக்களைக்கொண்ட ஓரிரு உடைந்த கற்கள் கோபுரவாயிலுக்கு உட்புறமாகத் தரையில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை இக்கோயில் தொடர்பான வரலாற்றுச்செய்திகளை நமக்குத் தர இயலாமற்போயினும் பொ.யு. 12 அல்லது 13ஆம் நூற்றாண்டிலும் இக்கோயில் வழிபாட்டுடன் திகழ்ந்ததை மறைமுகமாக உணர்த்துபவையாக உள்ளன. தற்போது எஞ்சியுள்ள சான்றுகளின் அடிப்படையில் இந்த கோயிலுக்கு பொ.யு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே நீண்ட தொரு வரலாறு இருந்திருக்க வேண்டுமெனத்தெரிகிறது.

அமைப்பு

இங்கு முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கு எழுப்பப்பட்ட கோயில் ஒன்று உண்டு. வீடூரிலுள்ள அருகன் கோயில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருப்பதால், இதில் பண்டைய கலைப்பாணியினை காணல் இயலாது. தற்போது இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டது. கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் திருச்சுற்று மதிலை ஒட்டி உட்புறமாக பலதூண்களைக் கொண்ட மண்டபமும், வடக்குப்புறம் சிறிய கருவறையொன்றும் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இவையனைத்தையும் உள்ளடக்கியவாறு திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது.

சிற்பங்கள்

கோயிலின் கருவறையில் ஆதிநாதரின் சிற்பம் உள்ளது. அமர்ந்த நிலையிலிருக்கும் இவரது தலைக்குப் பின்பகுதியில் அலங்கார பிரபையும், அதற்கு மேலாக முக்குடையும் திகழ்கின்றன. கருவறையில் பிற்காலத்தைச் சார்ந்த பல தீர்த்தங்கரர்களது செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் புறச்சுவர்களிலுள்ள மாடங்களில் தற்கால திருவுருவ அமைப்புகளைக் கொண்ட மகாவீரர், பார்சுவநாதர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் விமான மேற்பகுதியிலுள்ள சுதை வடிவங்களும் தற்காலத்தில் நிறுவப் பட்டவையாகும். முன் மண்டபத்தில் மகாவீரர், இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களைச் சிற்றுருவச் சிற்பமாகக் கொண்ட சதுர்விம்சதி திருவுருவமும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை பொ.யு. 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டவையாக இருக்கலாம்.

திருச்சுற்று மதிலின் மேற்குப்புறத்தில் இரு யக்ஷியர் சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இவ்விரண்டும் பத்மாவதி அல்லது அம்பிகா யக்ஷிகளைக் குறிப்பவையாக இருக்கலாம். முன்பு இவை தனியாக உள்ள கருவறைகளில் நிறுவப்பட்டு பின்னர் சிதைந்து போனமையால் திருச்சுற்று மதிலை ஒட்டியுள்ள பகுதியில் கொண்டு வைக்கப்பட்டன. இத்தேவியரது திருமேனிகளை கரண்ட மகுடம், பத்ரகுண்டலங்கள், அடுக்கடுக்கான கழுத்தணிகள், கைவளைகள், முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஆடை, சிம்மமுகமுடைய மேகலை முதலிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இவற்றின் ஆடை அலங்காரங்கள் யாவும் பொ.யு. 15-16ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியினை நிறுவுகின்றன.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991