மனோன்மணி அம்மையார்
மனோன்மணி அம்மையார் (1868 - 1909) நவீனகால தமிழ் பெண்பாற் புலவர்களில் முன்னோடி. ஆயுர்வேத மருத்துவர்.
பிறப்பு, கல்வி
இவர் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில், 1868-ஆம் ஆண்டு முருகேச முதலியாருக்கும், அலர்மேல் அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் 3 ஆண்கள்.
இவர் தன் வீட்டின் அருகில் இருந்த தொடக்க நிலைப்பள்ளியில் சில காலம் பயின்றார். பின்னர் தன் தந்தையிடம் கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ் முதலிய தமிழ் நூல்களை பாடங்கேட்டார். இவருடைய 15-வது வயதில் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களை பாடங்கேட்டார்.
இவருடைய தந்தையிடம் சில மருத்துவ நூல்களையும் கற்றுத்தேர்ந்தார்.
தனிவாழ்க்கை
இவர் 18-வது வயதில் மருத்துவர் ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். இவரின் 25-வது வயதில் இவரின் கணவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சலில் அவர் மரணம் அடைந்தார். பின் இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து சென்னையில் இருந்த தஞ்சாவூர் சுப்பிரமணிய பண்டிதர் என்பவரிடம் நான்கு ஆண்டுகள் மருத்துவம் பயின்றார். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று சென்னை கொண்டித்தோப்பில் மருத்துவராக பணியாற்ற ஆரம்பித்தார்.
சென்னைக்கு குடிபெயர்ந்தபின் ஜார்ஜ் டவுனில் வாழ்ந்த பூவை கல்யாணசுந்தரம் முதலியாரின் சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்து, பின்னாளில் அவரின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவம் பார்த்தபோது அவருடன் நட்பை வளர்த்துகொண்டார். பின் அவரிடம் மாணவியாக சேர்ந்து இலக்கண, இலக்கியங்களை கற்றார். இவர் பூவை கல்யாணசுந்தரத்திற்கு சில மருத்துவ முறைகளை சொல்லிகொடுத்தார்.
அறிவியக்க பங்களிப்பு
சொற்பொழிவு
இவர் பூவை கலியாணசுந்தரம் அவர்களிடம் கற்ற மற்ற மாணவியர்களான பண்டிதை நாரயணி அம்மையார், ஜெயலட்சுமி அம்மையார் மற்றும் இவரின் சகோதரரின் மகளான அகிலண்ட நாயகி அம்மாள் ஆகியோரை கொண்டு மாதர் கல்விச் சங்கம் என்று ஒன்றை நிறுவி வாரமொருமுறை கூடி பெரிய புராணச் சொற்பொழிவுகளை சென்னையின் பலப் பகுதிகளில் நடத்தினார்.
நூல்கள்
இவர் 1891-ஆம் ஆண்டு முதல் அந்தாதி, மாலை, சதகம், பதிகம் முதலிய சிறு நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். இந்நூல்களைப் பாராட்டி வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள், திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணித் தம்பிரான், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் சரவணமுத்துப் பிள்ளை, வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை, திருமயிலை சண்முகம் பிள்ளை, பூவை கல்யாணசுந்தரம், தசாவதனம் பேறை ஜெகநாதப் பிள்ளை , கந்தசாமிப் புலவர், சோடசாவதானம் சுப்ராய செட்டியார் ஆகியோர் சாற்று கவிகள் பாடி வாழ்த்தினர்.
இவர் பல சந்தர்ப்பங்களில் பல தமிழ் அறிஞர்களுக்கு எழுதி அனுப்பிய பாடல்களைத் தொகுத்து தனிப்பாடல்கள் என்ற நூலாக வெளியிட்டார்.
இவர் தாம் அறிந்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு மனோன்மணியம் என்ற மருத்துவ நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலைப் பாராட்டி சென்னையில் இருந்த மருத்துவ அறிஞர்களும், தமிழ் அறிஞர்களும் இவருக்கு ஆயுர்வேத ரத்நாகரம் என்னும் பட்டத்தை அளித்தனர்.
நூல்கள்
இவர் இயற்றிய நூல்கள்
- மனோன்மணியம் (மருத்துவ நூல்)
- சென்னைக் கந்தசாமி பதிகம்
- பூவை சிங்கார சதகம்
- பொன்னியம்மன் பதிகம்
- பழநிப் பாமாலை
- பழநி இரங்கல் விருத்தப்பதிகம்
- திருவாமாத்தூர்ப் பஞ்சரத்னம்
- ஆனைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதி
- திருமயிலைக் கற்பகவல்லியந்தாதி
- பழநிச் சந்நிதிமுறை
- பழநிவெண்பாப்பதிகம்
- திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரிமாலை
- திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி
- பழநிச் சிங்கார மாலை
- புதுவை காமாட்சி அம்மன் பதிகம்
- குன்றத்தூர் பொன்னியம்மன் பதிகம்
- தனிப்பாடல் திரட்டும் பலபாடல் திரட்டும்
மறைவு
இவர் 1908-ஆம் ஆண்டு தன்னுடைய 45-ஆம் வயதில் மறைந்தார்.
உசாத்துணை
- தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம் - சு. அ. ராமசாமிப் புலவர்
- மருத்துவர் மனோன்மணி - தினமணி - அக்டோபர் 14, 2018 ஆம் ஆண்டு
- தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1 - வித்துவான் டி கண்ணம்மாள், 1950
✅Finalised Page