under review

எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 21:37, 2 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்

எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (1981) தமிழகத்தின் மேனாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். கவிஞர் முத்துலிங்கம் இந்த நூலை இயற்றினார். எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறப்பு, வளர்ப்பு, கலை ஈடுபாடு, புகழ், பெருமை, அரசியல் சாதனைகளைப் பற்றிக் கூறுகிறது.

பதிப்பு, வெளியீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்று பிள்ளைத்தமிழ். ஆரம்ப காலங்களில் இறைவனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு புலவர்கள் பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றினர். பின் சமயத் தலைவர்கள், ஆன்மிக ஞானிகள், சான்றோர்கள் மீது பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டன பிற்காலத்தில் வள்ளல்களை, புரவலர்களை, சான்றோர்களை, அரசியல்வாதிகளை கலைஞர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் ஒன்று எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்.

திரைப்பாடல் ஆசிரியராகவும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் விளங்கிய கவிஞர் முத்துலிங்கம், 1981-ல், எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் நூலை இயற்றி வெளியிட்டார். இது தென்னகம் இதழில் தொடராக வெளிவந்துப் பின் நூலானது. நீரோட்டம் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.

உள்ளடக்கம்

எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், காப்புப் பருவம் முதலாக சிறுதேர்ப் பருவம் வரை பத்துப் பருவங்களைக் கொண்டுள்ளது. காப்புப் பருவத்தில் தமிழ்த்தாய், நீதி தேவன், தர்ம தேவதை, சத்திய தேவன், வீரத்திருமகன், புகழ், நல்லோர் உள்ளம், இயற்கை, வள்ளுவர், அண்ணா போன்றோர் எம்.ஜி.ஆரைக் காக்குமாறு வேண்டப் பெறுகின்றனர். எம்.ஜி. ராமச்சந்திரனின் கலையுலக அனுபவங்கள், கட்சிப் பணிகள், அரசியல் திறமை, தேர்தல் வெற்றி, ஆட்சிச் செயற்பாடுகள் எனப் பல செய்திகள், நிகழ்வுகள் பிற பருவங்களில் இடம்பெற்றுள்ளன.

செங்கீரைப் பருவத்தில் அண்ணாவின் புகழையும், எம்.ஜி.ஆரையும் சிறப்பையும் முத்துலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தாலப்பருவத்தில் எம்.ஜி.ஆர். மேற்கொண்ட நற்பணிகள் பற்றிக் குறிப்பிட்டு தாலாட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் எம்.ஜி.ஆரின். செயல்கள், சாதனைகள், திரையுலக வெற்றிகள், பெருமைகள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

தாலப் பருவத்திலிருந்து ஒரு பாடல்

மலர்ந்த மலர்கள் மத்தியிலே

மல்லி கைபோல் மணப் பவனே

மணிகள் ஒன்பான் வகைகளிலே

மாணிக் கம்போல் சிறப்பவனே

புலர்ந்த காலைப் பொழுதினிலே

பூபா ளம்போல் இனியவனே

புனித மிகுந்த கோயில்களில்

புண்ய இறைவன் போன்றவனே

நலமே அருளும் கண்ணியனே

நவிலும் தீமைக் கந்நியனே

நாடார் தம்மைப் பணியவைக்கும்

நயங்கள் அறிந்த வித்தகனே

குலமே சிறந்த எம் . ஜி. ஆர் .

கொள்கைக் கொழுந்தே தாலேலோ

குணத்தின் குன்றாம் எம் . ஜி. ஆர் .

கோமான் தாலே தாலேலோ!

உசாத்துணை

எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்: தமிழ் இணைய மின்னூலகம்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.