under review

சுரேஷ் பிரதீப்

From Tamil Wiki
Revision as of 17:50, 18 April 2023 by Ramya (talk | contribs)
சுரேஷ் பிரதீப்
சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்(சுரேஷ் பன்னீர்செல்வம்) (பிறப்பு: ஜனவரி 14, 1992) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தஞ்சை திருவாரூர் மாவட்டப் பின்னணியில் கதைகளை எழுதிவருகிறார். நேர்கோடற்ற வடிவில் கதைகள் எழுதுவதிலும் மனிதனின் அடிப்படையான இருத்தலியல் சிக்கல்களை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

சுரேஷ் பிரதீப் திருவாரூர் மாவட்டம் தக்களூரில், பன்னீர்செல்வம், வசந்தா இணையருக்கு ஜனவரி 14, 1992அன்று இரண்டாவது மகனாக பிறந்தார். திருவாரூரில் உள்ள கண்கொடுத்தவனிதம் அரசு தொடக்கப்பள்ளி, கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப்பள்ளியில், திரூவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். 2012இல் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுரேஷ் பிரதீப் ஜனவரி 25, 2021 அன்று பிரியதர்ஷினியை மணந்தார். சுரேஷ் பிரதீப் அஞ்சல்துறையில் பணியாற்றுகிறார்.

அமைப்புப் பணிகள்

  • சுரேஷ் பிரதீப் திருவாரூரில் 'நதிக்கரை இலக்கிய வட்டம்’ என்னும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வை நண்பர்களுடன் நடத்தி வருகிறார். அகழ் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
  • Tamil Literary Talks என்ற பெயரில் இலக்கிய விமர்சன உரைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார்.
  • அகழ் மின்னிதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

சுரேஷ் பிரதீப்பின் முதல் படைப்பு 'அலுங்கலின் நடுக்கம்' எனும் சிறுகதை பதாகை மின்னிதழில் 2017இல் வெளியானது. அதே ஆண்டு அவருடைய முதல் நாவலான 'ஒளிர் நிழலும்' சிறுகதை தொகுப்பான 'நாயகிகள் நாயகர்களும்' வெளியாயின.

சிதறுண்ட வடிவத்தில் கதைக்குள் கதை எனும் தன்மையுடன் சொல்லப்பட்ட அவருடைய 'ஒளிர் நிழல்' நாவல் பரவலாக கவனிக்கப்பட்டது‌. 'பாரம்', 'எஞ்சும் சொற்கள்' ஆகிய சிறுகதைகள் அவற்றின் பேசுபொருளுக்காகவும், கூர்மையான கூறுமுறைக்காகவும் வாசக கவனத்தைப் பெற்றன.

இலக்கிய இடம்

கதையின் வெவ்வேறு வடிவங்களை சோதனை செய்து பார்ப்பது, மொழியின் புதிய வாய்ப்புகளை பரிசீலிப்பது ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் நவீன தமிழ் எழுத்தாளர்களில் சுரேஷ் பிரதீப் ஒருவர். இருத்தலியல் சிக்கல்களையும், இலட்சியவாதத்திற்கு எதிரான நம்பிக்கையின்மை கொண்ட தத்துவ நோக்கும் இவருடைய படைப்புகளில் உள்ளன. யதார்த்தக் களத்தை விட்டு மீறிச்சென்று தத்துவ, உளவியல் உரையாடலுக்கான வெளியை புனைவுமூலம் உருவாக்குகிறார்.

"வெவ்வேறு உத்திகளைக் கொண்டு மாறுபட்ட கதைசொல்லல் முறைகளைக் கையாண்ட போதிலும் சுரேஷ் பிரதீப்பின் பேசுபொருள் சாதிய அழுத்தங்களாலும் சீர்கெட்ட உறவுகளாலும் நவீன வாழ்வில் பெரும் மனச் சிதைவுக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய இளைஞர்களின், சமூகத்தின் தீர்வுகளற்ற கையறு நிலை என்பதால் இக்கதைகள் அழுத்தம் பெறுகின்றன" என்று விமர்சகர் எம். கோபாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.[1]

விருதுகள்

  • 2017இல் வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது பெற்றார்.
  • 2021இல் 'பத்து பாத்திரங்கள்' படைப்புக்காக புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசு பெற்றார்.

நூல்பட்டியல்

நாவல்
  • ஒளிர்நிழல் நாவல் (2017)
சிறுகதைத் தொகுப்பு
  • நாயகிகள் நாயகர்கள் (2017)
  • எஞ்சும் சொற்கள் (2019)
  • உடனிருப்பவன் (2020)
  • பொன்னுலகம் (2021)
கட்டுரைத் தொகுப்பு
  • தன்வழிச்சேரல் (2018)

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page