being created

மயில் இராவணன் கதை: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added language label)
Line 34: Line 34:


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 08:03, 23 October 2022

மயில் ராவணன் கதை தமிழகத்தில் வழக்கில் உள்ள ராமாயண நாட்டார் கதை. ராவணனின் தம்பி பாதாளத்தில் வாழும் மயில் ராவணன் ராம, லட்சுமணனைக் கடத்தி வந்து காளிக்குப் பலிக் கொடுத்ததாகவும், அனுமன் விஸ்வரூபம் கொண்டு பாதாள உலகம் சென்று இருவரையும் மீட்டு திரும்பியதாகவும் அமைந்த கதை. அனுமனுக்கு திமிதி என்னும் மச்சகன்னியில் பிறந்த மச்சவல்லபன், ராவணனின் தங்கை மகன் நீலமேகன் போன்றவர்களின் உபகதைகளையும் உள்ளடக்கியது.

பார்க்க: மச்சவல்லபன் போர்

கதை

இலங்கையில் ராவணனுடன் நிகழ்ந்த போரில் ராமன் அதிகாயன், மகாமாயன், நிகும்பன், அகும்பன் ஆகியோரை வீழ்த்தினான். ராவணனன் இதனையறிந்து பெரும்படையைத் திரட்டிக் கொண்டு ராமனுடன் போர் செய்ய யுத்தக் களத்திற்கு வந்தான். ராவணனுக்கும், ராமனுக்கும் போர் நிகழ்ந்தது. ராவணனின் அம்புகள் அனைத்தையும் தாண்டி ராமன் ராவணப் படைகளை நிர்மூலமாக்கினான். ராவணன் தனியனாக அரண்மனைத் திரும்பினான். அரண்மனையில் அமைச்சர்களிடம் நடந்ததைக் கூறினான். அதில் அமைச்சர்கள் ராவணனிடம், “பாதாளத்தில் இருக்கும் உங்கள் ஒன்றுவிட்ட தம்பி மயில் ராவணன் உள்ள வரை நீங்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும். அவன் ராமன், லட்சுமணன் இருவரையும் காளிக்கு பலிக் கொடுத்து வெல்வான்” என்றனர்.

அப்போது தான் நினைவு வந்தவனாய் தசகண்ட ராவணன் தம்பி மயில் ராவணனை அழைத்தான். அண்ணன் அழைத்ததும் பாதாள உலகிலிருந்து இலங்கைக்கு வந்தான் மயில் ராவணன். இலங்கை நகர் சிதைந்து கிடப்பதைக் கண்டு அண்ணனிடம் நட்ந்ததை வினவினான். தசகண்ட ராவணன் நடந்ததைக் கூறியதும், “கவலையை விடு நாம் இச்சிறுவர்களுக்காக அஞ்ச வேண்டியதில்லை. இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களை காளிக்குப் பலிகொடுத்து மீள்வேன்” எனச் சொல்லி அண்ணனிடம் ஆசிப் பெற்று பாதாள இலங்கைக்குச் சென்றான். அவனது அமைச்சனைக் கலந்தாலோசித்தான்.

மயில் ராவணன் இலங்கைக்கு வந்துச் சென்றதை சீதைக்கு காவல் நின்ற விபீஷணனின் மகள் திரிசடை அறிந்தாள். அவள் வாயு தேவனிடம் நடந்ததைக் கூறினாள். “மயில் ராவணன் ராம, லட்சுமணனை பதினைந்து நாழிகைக்குள் பாதாள இலங்கைக்குக் கொண்டுச் செல்லும் ஆற்றல் கொண்டவன். அவன் இருவரையும் சிறை செய்வதாக சபதம் கொண்டிருக்கிறான். இதனை ராம, லட்சுமணனிடம் சொல்லிவிடு” என்றாள். வாயு தேவன் அவற்றை விபீஷணனிடம் சொன்னான்.

விபீஷணன் அனைத்தையும் ராம, லட்சுமண, சுக்ரீவனிடம் கூறினான். மேலும் மயில் ராவணனின் தந்திர சக்தியையும், வீரத்தையும் பற்றி அவர்களிடம் கூறினான். அனைத்தையும் கேட்ட சுக்ரீவன் மயில் ராவணனை வெல்ல தகுதியானவன் அனுமன் மட்டுமே என்றான். சுக்ரீவன் அனுமனை அழைத்து மயில் ராவணனைப் பற்றிக் கூறினான். அதனைக் கேட்ட அனுமன் ஆர்ப்பரித்தான் மயில் ராவணனைக் கொன்று அவன் ரத்தத்தைக் கூடிப்பேன் என சபதமேற்றான். ராமன், லட்சுமணன் அவர்களது எழுபது வெள்ளம் சேனைகளையும் அழைத்தான். அவர்களைச் சுற்றி தன் வாளால் அரண் அமைத்தான். அவர்களைச் சூழ்ந்த வாள் கோட்டையானது. வாள் வளர்ந்து அனைவரையும் மூடிக் கொண்டது. அதன் துவாரம் அனுமனின் வாய் வழியாகச் சென்று காது வழிச் செல்லும் படி அமைந்தது. அந்த கோட்டையை விபீஷணன் இரவு முழுவதும் காவல் காத்தான். பகலில் நீலன், நளன், அங்கதன் ஆகியோரிடம் காவல் காக்கும் படி கட்டளையிட்டான். இரவில் வீரர்கள் அனைவரும் விழித்திருக்க இசைக் கருவிகள் முழங்கும் படி ஆணையிட்டான்.

மயில் ராவணன் ராம, லட்சுமணனை காளிக்கு பலிக் கொடுக்கும் நாள் குறித்தான். மயில் ராவணன் சதுரன், சகலப் பிரவாணன், மாயவினோதன், சாத்தி என தன் நான்கு அமைச்சர்களை அழைத்தான். அவர்கள் உரையாடலைக் கேட்ட மயில் ராவணனின் மனைவி வர்ணமாலிகை வந்தாள். கணவனுக்கு அறிவுரைகள் கூறினாள். விஷ்ணுவின் அவதாரமான ராமனின் பெருமைகளை எடுத்துரைத்தாள். மயில் ராவணன் அவளை அலட்சியம் செய்து அமைச்சர்களின் பேச்சிற்கு மட்டும் செவிக் கொடுத்தான்.

மயில் ராவணனின் முதன்மை அமைச்சன் சதுரன் ராம, லட்சுமணனைக் கொண்டு வரப் புறப்பட்டான். ராமனின் இடத்திற்குச் சென்ற போது அங்கே ஆகாயத்திற்கும் பூமிக்குமான வெறும் கோட்டையைக் கண்டான். வெறுங்கையுடன் திரும்பினான். இரண்டாவது அமைச்சன் சாயித்தன் முயற்சித்துக் கோட்டையைச் சுற்றி வந்து பறவையாக உருமாறி உள்ளே செல்ல முயற்சித்து வாலைத் தள்ளி தலையை உள்ளே விட்டான். மூக்கும், வாயும் சிதைந்து பாதாளம் திரும்பினான். இப்படி அமைச்சர் தோற்று திரும்பியதும் மயில் ராவணன் தானே செல்ல முடிவெடுத்தான். தாமரை தண்டின் வழியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வந்தான். விபீஷணன் உருக் கொண்டு அனுமன் முன் சென்று, “அனுமனே எல்லாம் பத்திரம் தானே? உள்ளே வீரர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்களா?” என வினவினான். அனுமன் வாய் வழியே புகுந்து காதுக்குள் சென்று வால் கோட்டையை அடைந்து உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ராமனையும், லட்சுமணனையும் ஒரு பெட்டியில் அடைத்து மீண்டான். அனுமனிடம், “கவனமாக இரு. மயில் ராவணன் என் உருவில் வந்து உன்னை ஏமாற்றக் கூடும்.” என எச்சரித்து பாதாள இலங்கைக்கு மீண்டான்.

மயில் ராவணன் ராமனுடன் மீள்வதைக் கண்ட ஆகாயவாணி, “ராக்கதனே! இச்செயலால் நீ துன்புறுவாய். அனுமன் ராம, லட்சுமணனை மீட்பான். உன் தங்கை மகனான நீலமேகனுக்குப் பட்டம் கட்டுவான். அதனால் இப்போதே அவர்களை விட்டுவிடு” என்றாள். மயில் ராவணன் அவள் சொல்லை லட்சியம் செய்யாது பாதாள உலகம் வந்து தங்கை தூர தண்டிகையையும் அவள் மகன் நீலமேகனையும் விலங்குப் பூட்டி குகைச் சிறையில் அடைத்து வைத்தான்.

கோட்டைக்குத் திரும்பிய விபீஷணனைக் கண்ட அனுமன் திகைத்தான். “அரை நாழிகை முன்பு தானே வந்து எச்சரித்தீர். மீண்டும் எச்சரிக்கிறீர்.” எனக் கேட்டான். விபீஷணனுக்கு நடந்தது புரிந்தது. அனுமனின் வாய் வழியாகக் கோட்டைக்குள் சென்று பார்த்தான். அங்கே ராமன், லட்சுமணன் இல்லை என்பதை உறுதி செய்தான். திரும்பி வந்து அனுமனிடம் விஷயத்தைச் சொன்னான். அனுமன் தன் கவனக் குறைவை எண்ணிக் கவலைக் கொண்டான். சுக்ரீவனுக்கு பதில் என்ன சொல்வது என எண்ணினான். விபீஷணனிடம் பாதாள இலங்கைக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்தான்.

விபீஷணன் அனுமனிடம் பாதாள இலங்கைக்குச் செல்லும் வழியில் மச்சவல்லபன் காவலிருக்கிறான். அவனை வென்று கடந்து செல்வது யாருக்கும் இயலாதது. கடலின் நடுவே தாமரை ஒன்றுண்டு அதன் தண்டு வழியே ஒரு துவாரம் உள்ளது. அதன் வழி சரீரத்தை ஒடுக்கி காற்றுப் போலச் சென்றால் ஒரு அக்னி கோட்டை வரும், அதன் வாயிலில் மச்சவல்லபன் காவலிருப்பான். அவனுக்கு உதவ இரண்டாயிரம் லட்சம் அரக்கர்கள் இருப்பர். அவர்களைக் கடந்து சென்றால் ஒரு குளம் வரும். அதனையும் கடந்தால் தான் பாதாள இலங்கைக்குச் செல்ல முடியும் என்றான்.

அனுமன் விபீஷணனிடம் விடைபெற்று தாமரை தண்டு வழியாக பாதாள இலங்கைக்குச் சென்றான். அங்கே அக்னி கோட்டையின் வாயிலில் காவலிருந்த மச்சவல்லபனை எதிர் கொண்டான். இருவரும் நிகர் வல்லமையில் போர் புரிந்தனர். இரண்டு முறை மச்சவல்லபனின் அடிக்கு அனுமன் நிலைக் குலைந்தான். அனுமன் தனக்கு நிகராக ஒருவனா என எண்ணி, “நீ யார்? உன் குலமென்ன? நான் போர் செய்து தோற்றதில்லை. உன்னிடம் மட்டும் என் சக்தி ஒடுங்குகிறது. இனி நான் உயிரோடு வாழ்ந்து பயனில்லை” என்றான்.

அனுமனின் பேச்சைக் கேட்ட மச்சவல்லபன், “என்னைப் பற்றிச் சொல்கிறேன் கேள். என் தந்தை எட்டுத் திசையிலும் உள்ள பகைவரை வெல்லும் ஆற்றல் கொண்டவர். சிரஞ்சீவி. அனுமனென்று பெயர். என் தாய் திமிதி மச்சகன்னி. வாயு தேவன் என் தந்தை வழி பாட்டன்” என்றான்.

மச்சவல்லபன் சொல் கேட்டு திகைத்த அனுமன் தன் பிரம்மசரியம் தவறியது எண்ணி வருந்தினான். ராவணனின் அந்தபுறத்திற்குச் சென்ற போது அரக்கியர் நடுவே ஏதேனும் தவறாக நடந்துக் கொண்டார்களா? இவன் தாய் அரக்கி அல்லவே மச்சகன்னி ஆயிற்றே என அனுமன் குழம்பினான். அனுமனின் குழப்பத்தைக் கண்ட மச்சவல்லபன், “என்ன போருக்கு வருகிறாயா? இல்லை தோல்வியை ஒப்புக் கொள்கிறாயா?” என்றான்.

மச்சவல்லபனிடம் அனுமன், “தந்தை அனுமன் என்றாயே. அவன் எங்கிருக்கிறான். யாரிடம் பணிபுரிகிறான்.” என வினவினான்.

மச்சவல்லபன், “தோல்வியை மறைக்க தந்திர வழியா. இருந்தாலும் சொல்கிறேன் கேள். அவர் அயோத்தியின் அரசர் ராமனின் அடியவர். சுக்ரீவனின் வலதுகை. நீலன், நளன், குமுதன், கேசன் என வானரப் படைகள் கிஷ்கிந்தையில் காத்திருக்க கடல்வழி இலங்கைக்கு சீதையை தேடிச் சென்றார். வழியில் அவரது நிழலைக் கடலில் வாழ்ந்த வெட்கை என்ற அரக்கி கவ்விக்கொண்டாள். அவளது வாய் வழிச் சென்ற என் தந்தை வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் உடலில் பெருகி நின்ற வியர்வையை வழிந்துவிட்ட போது கடலுள் வாய் பிளந்து நின்ற என் தாய் திமிதியின் வயிற்றுள் அவரது வியர்வை சென்று நான் கருவானேன். என் தந்தை இதனை அறியாது இலங்கைக்கு கிளம்பிவிட்டார். என் தாயின் வயிற்றில் பாட்டன் வாயு தேவன் என்னை அரவணைத்தார். ‘குழ்ந்தாய் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். அவரிடம் என் தந்தைக்கு நிகர் நிற்கும் வல்லமை வேண்டும். அவரை வீழ்த்தும் சக்தி வேண்டுமென வரம் பெற்று வாங்கினேன்.” என்றான்.

அதனைக் கேட்ட அனுமன், “மகனே நானே உன் தந்தை அனுமன்” என தழுதழுத்த குரலில் சொன்னான்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.