under review

செம்மண்ணும் நீல மலர்களும் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:நாவல்கள் to Category:நாவல்Corrected Category:மலேசிய படைப்புகள் to Category:மலேசிய படைப்பு)
 
Line 25: Line 25:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்]]
[[Category:மலேசிய படைப்புகள்]]
[[Category:மலேசிய படைப்பு]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்]]

Latest revision as of 13:46, 17 November 2024

செம்மண்ணூம்-நீல-மலர்களும்-204x300.jpg

'செம்மண்ணும் நீல மலர்களும்' (1971) எம். குமாரனால் எழுதப்பட்ட நாவல். லட்சியவாதங்களைப் பேசிக்கொண்டிருந்த மலேசிய நாவல்களில் முதன்முறையாக அவநம்பிக்கைகளையும் இருத்தலியல் சிக்கல்களைப் பேசியதால் இந்நாவல் கவனம் பெற்றது. இந்நாவல் 112 பக்கங்களைக் கொண்டது.

எழுத்து வெளியீடு

1971-ல் எம்.குமாரன் இந்நாவலை எழுதினார். சென்னை தமிழ்ப்புத்தகாலயம் இதை வெளியிட்டது.

வரலாற்றுப் பின்புலம்

சுதந்திரத்துக்கு பிறகு, மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சினை, தோட்டத் துண்டாடல் பெரும்பாலான தமிழர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தநிலையில், இந்தத் தோட்டத் துண்டாடல்களினால் அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குறியானது. கிழக்கத்திய முதலாளிகளின் பெரிய தோட்டங்களைச் சிறிது சிறிதாகப் பிரித்து விற்றால்தான் ஆசியாவில் இருக்கும் சின்ன முதலாளிகளால் வாங்கமுடியும் என தோட்டங்கள் கூறு போடப்பட்டன. சின்ன முதலாளிகள் உருவாக வேண்டும் என்பதால் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிச் சமூகத்தினர் நிராதரவாக விடப்பட்டனர். துண்டாடல் கொடுமை அதிகரித்ததால் கூட்டுறவு மூலம் தோட்டங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றியது. இத்தகைய ஒரு சூழலில் தமிழர்களின் அலட்சிய மனப்பான்மை, ஒற்றுமையின்மை, விழிப்புணர்வு அற்றநிலை, பிரிவினைகள், பிரிவினைகளைக் கொண்டு லாபம் அடைந்தவர்கள் என ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ குறுநாவல் அக்காலகட்டத்தின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ளது.

நாவல் சுருக்கம்

இக்குறுநாவல் கன்னியப்பன் எனும் இளைஞனைச் சுற்றி நகர்கிறது. கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் நிறைந்தவனாகவே கன்னியப்பன் காட்டப்படுகிறான். தற்காலிக ஆசிரியராக இருப்பதில் நம்பிக்கை இழந்து தான் பிறந்த தோட்டத்திலேயே ஏதாவது வேலை செய்து வாழ்வை நகர்த்த எண்ணி மீண்டும் தோட்டத்திற்கே வருகிறான். அதற்கு காதலும் ஒரு காரணம். கன்னியப்பன் வீட்டில் நீலாவை மணப்பதற்கு சாதி, வசதி, குடும்ப சூழல் போன்றவை தடையாக உள்ளன. நீலாவுக்காக எல்லாவற்றையும் எதிர்க்க முனைகிறான். ஆனால், நீலா தன் அத்தை மகனை மணந்துகொண்டது அவன் காதுகளில் விழுகிறது. அந்த ஏமாற்றம் ஏற்படுத்திய வெறுமையிலிருந்து விடுபட, ஒரு பெண்ணை மணந்து அர்த்தம் தேட முயல்கிறான். அவளும் ஒரு குழந்தையைப் பிரசிவித்துவிட்டு இறக்கிறாள். மறுபடியும் வெறுமை.

அப்போது அவனுக்கு வேறொரு எண்ணம் தோன்றுகிறது. தோட்டத்துண்டாடலால் பாட்டாளி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தோட்ட மக்களிடம் கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்கி ஒரு லட்சம் ரிங்கிட் திரட்டி, தோட்டத்தை வாங்க வேண்டும் என்ற பொதுநல எண்ணத்துடன் உழைக்கத் தயாராகிறான். பிரச்சாரத்தில் ஈடுபடுகிறான். பல சமூகத் தலைவர்களைப் பார்த்து ஆதரவு கேட்கிறான். தொழிற்சங்கத்தில் சிலரும், அரசியலில் சிலரும், மாற்று கருத்துடையவர் ஒரு சிலரும், எதிலும் நம்பிக்கை இல்லாதவர் சிலருமாக இருந்த அந்தத் தோட்டத்தில் கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்க முடியாமல் அவன் எதிர்கொள்ளும் தோல்விகள் மனிதர்கள் மீது கசப்பை ஏற்படுத்துகிறது. அவன் நம்பிக்கையுடன் பழகிய மனிதர்களுக்கு எல்லாம் வேறொரு முகங்கள் இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நீலாவை தவறாகக் கணித்தது போலவே தோட்ட மக்களுக்கான போராளிகள் விலைபோவதும் அவன் செயலூக்கத்தை அழிக்கிறது. இறுதியாக தோட்டத் துண்டாடலுக்கு எதிராக மக்கள் நடத்தும் மறியலுக்கு எந்த அர்த்தமும் இல்லை என வீட்டிலே முடங்கிக் கிடக்கிறான். லட்சியங்கள் அர்த்தம் இழந்து போகின்றன.

ஆசிரியர்

எம். குமாரன்

எம். குமாரன் அன்றைய இலக்கியச் சூழலில் ‘மலபார் குமாரன்’ என்றே அழைக்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் மலையாளத்தில் கதை, கவிதை, கட்டுரை என எழுதத்தொடங்கிய இவர் ஜாசின் மலாக்காவைச் சேர்ந்தவர். தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கல்வி கற்க கேரளம் சென்றவர் நண்பர்களுடன் இணைந்து ‘கலாமாலா’ என்ற கையெழுத்திதழ் ஒன்றை நடத்தியுள்ளார். 1957-ம் ஆண்டு மலேசியா திரும்பிய அவர் 1960-ல் தமிழில் எழுதத் தொடங்கினார். 1970-ல் வெளிவந்த ‘சீனக்கிழவன்’ என்ற சிறுகதை தொகுப்பும் 1971-ல் வெளிவந்த 'செம்மண்ணும் நீலமலர்கள்' நாவலுமே அவரது புனைவு ரீதியான பங்களிப்பு. இவர் கோமாளி எனும் நகைச்சுவை இதழையும் நடத்தியுள்ளார்.

இலக்கிய மதிப்பீடு

'லட்சியவாதத்தையும் (idealism), கற்பனாவாதத்தையும் (romanticism), மிகை உணர்ச்சிகளையும் (sentument) நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971-ல் எழுதப்பட்ட ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ அதன் இருத்தலியல் (existentialism) தன்மையினால் தனித்துவம் பெறுகிறது.' என எழுத்தாளர் ம. நவீன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-May-2023, 18:15:14 IST