under review

வாஸவேச்வரம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 40: Line 40:
* சுப்புக்குட்டி சாஸ்திரிகள்-உபன்யாசம் செய்பவர்
* சுப்புக்குட்டி சாஸ்திரிகள்-உபன்யாசம் செய்பவர்
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பெண்ணின்  பால்விழைவைக் குறித்து கலாபூர்வமாக எழுதப்பட்டதாலும், மீறலின் அழகியலாலும், தன் அங்கதச் சுவையாலும், விசித்த்ரத் தன்மையாலும்  வாஸவேச்வரம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது.   
பெண்ணின்  பால்விழைவைக் குறித்து கலாபூர்வமாக எழுதப்பட்டதாலும், மீறலின் அழகியலாலும், தன் அங்கதச் சுவையாலும், விசித்திரத் தன்மையாலும்  வாஸவேச்வரம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது.   


இந்திரனின்  பெற்ற சாபம் என்ற  உபன்யாசத்தில் தொடங்கும் நாவல்  சீதையின் கற்பைப் பற்றிய  உபன்யாசத்தில் முடிவதில் கிருத்திகாவின் அங்கதம் தெரிகிறது.  "அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு .பெண்ணியம்  உருவாகி வந்தவுடன் ''வாஸவேச்வரம்'' மறுவாசிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.   
இந்திரனின்  பெற்ற சாபம் என்ற  உபன்யாசத்தில் தொடங்கும் நாவல்  சீதையின் கற்பைப் பற்றிய  உபன்யாசத்தில் முடிவதில் கிருத்திகாவின் அங்கதம் தெரிகிறது.  "அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு .பெண்ணியம்  உருவாகி வந்தவுடன் ''வாஸவேச்வரம்'' மறுவாசிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.   

Revision as of 08:08, 23 April 2022

நன்றி:காலச்சுவடு பதிப்பகம்

வாஸவேச்வரம் எழுத்தாளர் கிருத்திகா 1966-ல் எழுதிய தமிழ் நாவல்.

வாஸவேச்வரம் என்ற வட்டார அடையாளங்கள் இல்லாத, பௌராணிக சாயலுடன் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தை, தன்முனைப்பாலும், காமத்தாலுமே செலுத்தப்படும் கதை மாந்தர்களை, அவர்களின் ஒழுக்க வீழ்ச்சிகளை அங்கதச் சுவையுடன் சொல்கிறது. தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்

கிருத்திகாவின் இயற்பெயர் மதுரம் பூதலிங்கம் (1915 - 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில் புகை நடுவினில், சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேச்வரம், தர்ம க்ஷேத்திரே , புதிய கோணங்கி, நேற்றிருந்தோம் போன்ற நாவல்களை எழுதியவர்.

உருவாக்கம், பதிப்பு

கிருத்திகா (நன்றி:விகடன் தடம்)

கிருத்திகா 1966-ல் எழுதிய வாஸவேச்வரம் நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் தேக்க நிலையில் நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தைச் சித்தரித்திருக்கிறார்.

முதல் பதிப்பை 1966-ல் டால்டன் பதிப்பகம் வெளியிட்டது. 1996-ல் இரண்டாம் பதிப்பு நூலகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு டிசம்பர், 2007-ல் வெளி வந்தது.

கதைச்சுருக்கம்

வாஸவேச்வரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்ட ஈசன் பெண்ணாசையால் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததைப் பற்றிய கதாகாலட்சேபத்துடன் நாவல் தொடங்குகிறது.ஒரு சிறிய வட்டத்துக்குள் ஆன்மா தேங்கிய ஊர்மக்கள் தன்முனைப்பாலும் காமத்தாலும் மட்டுமே செலுத்தப்படுகின்றனர். உபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளும் கூட விதிவிலக்கல்ல. பண்பாலும், ஆளுமையாலும் ஓங்கி உயர்ந்து நிற்பவர் பெரியபாட்டா என்ற ஊர்த்தலைவர் மட்டுமே.

பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கம். அவள் கணவன் டாக்டர் சுந்தா வாய்ச் சோல் வீரன்.

சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள், தாயாதிகள். பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள்.செயலூக்கமும் கொண்ட சந்திரசேகரன் தன் உழைப்பால் நிலத்தைப் பெருக்குகிறார். பேரழகியான மனைவி ரோகிணி , கிராமத்தில் பொருந்தாமல் கணவனின் அன்புக்காக ஏங்கி அவன் தன் அழகை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியைத் துரும்பாக மதிப்பவர். சுப்பையா சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். தாயின் மரணத்துக்குப்பின் மனம் அமர்ந்து செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு உள்ளவனை மனைவி விச்சுவும் சந்திரசேகரனோடு ஒப்பிட்டுத் தேளாகக் கொட்டுகிறாள். சுந்தாவுக்கும் விச்சுவுக்கும் மணவினை தாண்டிய உறவு முளைக்கிறது

பிச்சாண்டி நெஞ்சுரமம் உடைய பொதுவுடமைவாதி இளைஞன். ரோகிணியும் அவனும் மனதிற்குள் ஒருவரையொருவர் ரகசியமாக ஆராதிக்கிறார்கள்.பிச்சாண்டி ஊரைச் சீர்திருத்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறான். பாட்டாவை எதிர்த்து சவால் விடுகிறான்.பிச்சாண்டியை எதிர்த்து சந்திரசேகரன் தேர்தலில் போட்டியிடுகிறான். பிச்சாண்டி ஊர்த் திருவிழா அன்று ஒரு சதியால் வெறுப்புற்று ஊரை விட்டே செல்லும் வழியில் ரோகிணியைக் கடைசி முறையாகப் பார்க்கச் செல்கிறான். அங்கே சந்திரசேகரன் உலக்கையால் அடிபட்டு இறந்துகிடக்கிறான். அவன் மேல் கொலைப்பழி விழுகிறது.

சுப்பையா ஒரு முறையாவது தான் வென்று அதை விச்சுவுக்கு நிரூபிக்க சந்திரசேகரனை உலக்கையால் கொன்று, விச்சுவுக்கு அதைக் கடிதமெழுதி, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான். தலையில் இடி மேல் இடி விழுந்தும் பாட்டா காவல்துறையிடம் கடிதத்தைத் தந்து பிச்சாண்டியை விடுவிக்கிறார். ரோகிணியிடம் மட்டும் உண்மையைச் சொல்லும்படி கோரிவிட்டு பிச்சாண்டி ஊரைவிட்டே போகிறான்.

கதை மாந்தர்

  • பெரிய பாட்டா- குடும்பத்தின் ஆலமரம்.ஊர்த் தலைவர்
  • சந்திரசேகரன் ,சுப்பையா-பாட்டாவின் தமக்கை பேரன்கள், தாயாதிகள்.
  • பிச்சாண்டி-அஞ்சா நெஞ்சன் , பொதுவுடமைவாதி
  • ரோகிணி-சந்திரசேகரனின் மனைவி, பேரழகி
  • விச்சு- சுப்பையாவின் மனைவி
  • தங்கம்-பாட்டவின் மகள் வயிற்றுப் பேத்தி
  • சுந்தா-தங்கத்தின் கணவன்
  • அம்மாளு அம்மாள்-சுந்தாவின் தாய்
  • ரங்கன் -பாட்டாவின் மகன் வயிற்றுப் பேரன்
  • கோமதி- தூரத்து உறவுமுறையில் பட்டாவின் பேத்தி
  • சுப்புக்குட்டி சாஸ்திரிகள்-உபன்யாசம் செய்பவர்

இலக்கிய இடம்

பெண்ணின் பால்விழைவைக் குறித்து கலாபூர்வமாக எழுதப்பட்டதாலும், மீறலின் அழகியலாலும், தன் அங்கதச் சுவையாலும், விசித்திரத் தன்மையாலும் வாஸவேச்வரம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது.

இந்திரனின் பெற்ற சாபம் என்ற உபன்யாசத்தில் தொடங்கும் நாவல் சீதையின் கற்பைப் பற்றிய உபன்யாசத்தில் முடிவதில் கிருத்திகாவின் அங்கதம் தெரிகிறது. "அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு .பெண்ணியம் உருவாகி வந்தவுடன் வாஸவேச்வரம் மறுவாசிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

ஆண் அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் குடும்ப அமைப்பை, அந்த அமைப்புக்குள்ளிருந்தே பால் விழைவுகளின் ஊடாட்டத்தின் வழி நாவலின் பெண்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் பரப்பாக இந்நாவலை வாசிக்கும்போது நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைப் பெண்ணியப் பிரதியாக நாம் மாற்றி எழுத முடியும் என்று நாவலின் முன்னுரையில் கவிஞர் பெருந்தேவி குறிப்பிடுகிறார்.

ஆன்மா தேங்கிக் கிடக்கும் வாஸவேஸ்வரத்தில் . கடுமையான நெறிமுறைகள், ஆசாரங்களுக்கு அடியில் நடக்கும் பாலியல் மீறலை, சில்லரைத்தனங்களை எள்ளலுடன் முன்வைத்து ,மீறலின் அழகியலை இலக்கியமாகிய கிருத்திகா ஒரு புதிய பாதையை உருவாக்கியிருக்கிறார். மீறலுக்காக அம்மா வந்தாள் நாவல் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. அதே வருடம் வெளிவந்த, காமமும், மீறலும் நாவல் முழுதும் ஊடாடி வந்த இந்நாவலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. தனியாக ஒரு பாத்திரத்தை மட்டும் பின் தொடராதது ஒரு காரணம் என்றால் பரவலான வாசிப்பைப் பெறவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

வாஸவேச்வரம் எழுத்தாளர்கள் ஜெயமோகன்[1], எஸ்.ராமகிருஷ்ணன் [2]இருவரின் தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறுகிறது. "ஒரு குமரி மாவட்டக் கிராமத்தை பிராந்திய அடையாளங்களற்ற பெளராணிகச் சாயல் தந்து, ஆனால்  நவீனத் தன்மை கெடாமல் சித்தரித்து அதன் ஒழுக்க, அற வீழ்ச்சியை ஆழ்ந்த அங்கத்துடன் கூறும் இந்நாவல் அதன் விசித்திரத் தன்மை காரணமாகவே முக்கியமானது" என்று தன் தமிழ் நாவல்கள் விமரிசகன் பட்டியலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.