நீலி யட்ச கானம்: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 57: | Line 57: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{ | {{Finalised}} | ||
Revision as of 18:29, 19 July 2024
நீலி யட்சகானம் (1994), பழையனூர் நீலியின் வாழ்க்கையைக் கூறும் நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்சகானமாக அறியப்படுகிறது.
வெளியீடு
ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை நூல்களாகப் பதிப்பித்தது. அவ்வகையில் பதிப்பித்த யட்ச கான ஓலைச்சுவடிகளில் நீலி யட்சகானமும் ஒன்று. டிசம்பர் 1994-ல் வெளியான இந்நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். பொதுப் பதிப்பாசிரியர்கள்கள் டாக்டர் ஷூஹிகோசகா, டாக்டர் ஜி. ஜான் சாமுவேல். நூல் இயற்றப்பெற்ற காலம், ஆசிரியர் பெயர் போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
நூல் அமைப்பு
நீலி யட்சகானத்தில் 130 பாடல்களும் 29 வசனங்களும் இடம்பெற்றன. நான்கு வகையான தாள அமைப்பில் 97 பாடல்களுக்குத் தாளப் பெயராலேயே தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அர்த்த சந்திரிகை, ஏலச்சிந்து, சிந்து, தரு, தாலாட்டு, திபதை, நட்டகத்தரு, பத்தியம் போன்ற பாடல் அமைப்பில் 27 பாடல்கள் இடம் பெற்றன. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் மாளவி ராகம் என ராகத்தின் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் விநாயகர், கந்தன், திருமால், விஸ்வநாதர், சிவகாமி ஆகியோரைப் போற்றும் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. தொடர்ந்து நூல் பகுதி அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மங்கள, வாழ்த்து, சோபனப் பாடல்கள் அமைந்துள்ளன.
உள்ளடக்கம்
பழையனூர் நீலியின் வரலாற்றை இசை நாடக வடிவில் விரிவாகக் கூறும் நூலாக நீலி யட்சகான நூல் அமைந்துள்ளது.
பாடல்
பேய்க்குழந்தைகளின் செயல்கள்
பிறரெல்லாம் இரட்டைப் பிள்ளை
பெற்றாரல் லோயிவர்க்குக்
குறைகளினி இல்லை யென்று
கொண்டாடி யிருந்தார்
பூதமா கியகுழந்தை பொழுதுபோய் இரவில்நடுப்
பாதிநே ரங்களில் பிசாசு உருவமாகித்
தொட்டில்விட் டிழிந்துபோய் சுடுகாட்டி லேவிறகுக்
கட்டையுடன் வேம்பிணத்தைக் கண்டு பசியாறி
ஆட்டுமந் தையிலோடி ஆயர்அறி யாமல்நூறு
ஆட்டைஆவ தானமாய்ப் போட்டுக்கொண்டு வாயில்
ஊரெல்லாம் பானைசட்டி யுருட்டியவ ரவர்வீட்டுச்
சோறுகஞ்சி கூழெல்லாம் சூறைகொண்டு தணிந்து
மட்டமாய்ச் சிறுகுழந்தை வடிவாகி மனைசேர்ந்து
தொட்டிலிலெப் போதும்போல் தூங்கிப் படுத்திடுமே
வேளாளர்கள் அறுபத்தொன்பதின்மர் தீக்குளித்தல்
ஒன்றுஒன் றாய் எண்ணிப் பார்க்கும் போதில் - அங்கு
ஒருத்தர்இல்லை குறைபேர் எல்லாம் - கும்பு
நின்றபேர் களையறுத்து ஒன்பது என்று
எண்ணிக் கொண்டார்
சாட்சியெவர் மார்த்தாண்டனோடும் இந்தத்
தரணியந்தர வாணியே என்று
சாட்சிகூறில் அப்போதநந்தம் வாக்கு தாயே
நிசியிலே செட்டியுடன் விளம்பிய நேரந்தனை
இவர்களும் அறிந்திட வசனமாய்ச் சொன்னபோது
எல்லாரும் கணமகிழ்ச்சி யாயே
கேட்டுநம் இனம்வாழ வென்றவர் வாழ்த்தி
யீசுவரன் பாகம் பணிந்துகொண்டு
ஆட்டமாய் அறுபத்து ஒன்பதின்மரும்
கூட்டமாய் ஒன்றோடொன்று கைகோத்துக்
கொண்டனர்உள் இறங்கிய போதுதான் குளிர்ந்து
தண்ணிபோலே இருந்துடலூடே சிவம் நண்ணினாரே.
மதிப்பீடு
நீலி யட்சகானம் நடை, தாளம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை நாடக வடிவில் இயற்றப்பட்ட இசை நாடக நூல். நூலில் பேச்சு வழக்குச் சொற்கள் இடம்பெற்றன. நீலியட்ச கானம் நூல் பழையனூர் நீலியின் வரலாற்றை இசைப் பாடல் வடிவில் கூறும் நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page