பள்ளு: Difference between revisions
(changed template text) |
(Moved template to bottom of article) |
||
Line 133: | Line 133: | ||
== இதர இணைப்புகள் == | == இதர இணைப்புகள் == | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Revision as of 14:01, 19 November 2022
பள்ளு (உழத்திப்பாட்டு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது மருதநில(வயலும் வயலைச் சார்ந்த இடமும்) இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையை (பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர்) விளக்கிக் கூறும் இலக்கியம் பள்ளு.
பள்ளு இலக்கியங்களிலிருந்து வேளாண் மக்களின் வாழ்க்கை நிலை, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகள், பண்பாட்டுத் தகவல்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. சிற்றிலக்கிய வகை நூல்களில் பள்ளு இலக்கியங்களே அதிகம் கிடைத்திருக்கின்றன.
பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. நவநீதப் பாட்டியலில் நான்கு பாடல்களில் உழத்திப்பாட்டு[1] குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தோற்றமும் வளர்ச்சியும்
சிலப்பதிகாரத்தில் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு போன்ற மருத நில மக்கள் வாழ்க்கையைக் குறித்த பாடல்கள் இருக்கின்றன (நாடுகாண் காதை, 125 :134- 137[2]) ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவது பொன்னேர் பூட்டல் எனப்படும். ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம். வயல்களில் நெற் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுத்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு. இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய பாடல்களும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி வகுத்தது.[3]
பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது.
பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்
வைணவ சமய நூலாகிய முக்கூடற்பள்ளின் பாட்டுடைத் தலைவன் அழகர் (திருமாலின் மற்றொரு பெயர்). பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.
சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி.
எடுத்துக்காட்டு
ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தை சேர்ந்தவள், மற்றவள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவன் மற்றும் திருமால் குறித்த விவாதத்தை முக்கூடற் பள்ளு காட்டுகிறது.
- சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்
- தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி.
என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள்.
- கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு
- கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி
சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.
- நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி
- நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி
இளையவளிடமிருந்து பதில் வருகிறது:
- மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்
- மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி
வேளாண் வாழ்வாடு இணைந்த இயற்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களும் பல இடம்பெறுகின்றன:
ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
யாள மின்னல் ஈழமின்னல்
சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
நீர்ப்படு சொறித்த வளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
தேடியொரு கோடி வானம்
பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க்
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே
பள்ளு நாடகம்
பள்ளு 19 ஆம் நூற்றாண்டில் நாடகமாக நடிக்கும் வழக்கம் இருந்தது. பள்ளு இலக்கியத்தின் இசை அனைவரையும் கவரும் வண்ணம் சிந்து, கலிப்பா, கலித்துறை பாடல் வடிவங்களில் விருத்தப்பாவும் கலந்துவர அமையப் பெற்றிருக்கும். இதன் கதையோட்டம் நாடகத் தன்மைக்கு ஏற்றவாறு அமையப் பெற்றிருக்கும்.
’கட்டியங்காரன்’ எனப்படும் பாத்திரம் இந்நாடகத்தில் இடம்பெறும். இக்கதாப்பாத்திரம் நாடகக் கதையையும், நாடகக் கலைஞர்களையும், நாடக நிகழ்வுகளையும் அறிமுகம் செய்து ஒருங்கிணைக்கவும் செய்யும். மற்ற இரு முக்கிய கதாப்பாத்திரங்கள் மூத்த பள்ளியும், இளைய பள்ளியும். இருவரும் ஒரே பள்ளனின் இரு மனைவியர். இவர்கள் இடையே நடைபெறும் சண்டையை விளக்கும் 'ஏசல்’ பாடல்கள் இடம்பெறும். இருவரும் வெவ்வேறு சமய சார்புடையவர்கள். தமது சமயம் பற்றியும், கணவன் பற்றியும் இருவரும் நடத்தும் வாக்குவாதமே 'ஏசல்’ எனப்படுகிறது. இறுதியில் ஒற்றுமையாக வாழ இருவரும் உடன்படுவர்.
நாடகத்தின் கதை
பள்ளு நாடகத்தின் கதையமைப்பு பொதுவாக ஒரே தன்மையுடையதாய் காணப்படும். இவற்றுள் முக்கூடற்பள்ளு சிறந்த கதையமைப்புடன் விளங்குகிறது. பண்ணையாரிடம் வேலை செய்யும் பள்ளனுக்கு இரு மனைவியர். மூத்த பள்ளி முறையான மனைவி, இளைய பள்ளி பள்ளனின் காதலால் மனைவியானவள். எனவே பள்ளன் இளைய மனைவியுடன் தங்கிக் கொள்கிறான். இதனால் கோபம் கொண்ட மூத்த மனைவி தன் கணவன் வயல் வேலைகளை விட்டு இளைய மனைவியுடன் இருப்பதாக பண்ணையாரிடம் முறையிடுகிறாள். பண்ணையார் பள்ளனைக் கண்டிக்கிறார். பண்ணையார் சொல்படி நடப்பதாக உறுதியளித்துவிட்டு மீண்டும் இளைய பள்ளியிடமே பள்ளன் பொழுதைக் கழிக்கிறான். மீண்டும் பண்ணையாரிடம் மூத்த பள்ளி முறையிடுகிறாள். பள்ளைத் தொழுவத்தில் மாட்டி பண்ணையார் கசையடி கொடுக்கிறார். மூத்த பள்ளி மனமிரங்கி கணவனை விடுவிக்கும் படி வேண்டுகிறாள். மூத்த பள்ளியின் சொல்லுக்காக பண்ணையார் பள்ளனை விடுதலை செய்கிறார்.
உழவு வேலை நடைபெறும்போது பள்ளனை மாடு முட்டுகிறது. மூத்த பள்ளி மருந்திட்டு அவனைக் காப்பாற்றுகிறாள். அறுவடை முடிந்த பின் தனக்குரிய பங்கு கிடைக்காமையைச் சொல்லி பள்ளன் மேல் குறைச் சொல்லி மூத்தவள் மீண்டும் பண்ணையாரிடம் முறையிடுகிறாள். இளைய பள்ளி இதற்கு சண்டை செய்கிறாள். ஏசல் ஆரம்பமாகிறது. இருவர் வழிபடும் கடவுள்களை இந்தச் சண்டைக்குள் இழுக்கின்றனர்.
பண்ணையார் தலையீட்டில் இருவரும் அமைதியாகின்றனர். பள்ளனோடு இருவரும் சேர்ந்து வாழ சம்மதிக்கின்றனர். கதை முடிகிறது.
நாடக அமைப்பு முறை
பள்ளு நாடக மரபினைப் பின்பற்றும் தொடக்க முறையைக் கொண்டது. பள்ளு மேடையேற்றத்தில் கட்டியங்காரனின் பங்களிப்பு உள்ளது. காப்புச் செய்யுள் பாடல் இசைக்கப் பெற்ற பின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நாடகம் தொடங்கும். தொடர்ந்து கதாப்பாத்திரங்களின் வருகை அமையும். பள்ளன் கடவுளைப் போற்றியும் தன் குணநலன்களைக் குறிப்பிட்டும் பாடிய படி அறிமுகம் ஆவான். மூத்த பிள்ளி, இளைய பள்ளி இருவரும் மேடையில் அறிமுகம் ஆவாது அடுத்து அமையும். அவர்கள் தங்கள் பிறப்பு, வளர்ப்பு பற்றிய செய்திகளைச் சொல்லி தங்களை அறிமுகம் செய்வர்.
கட்டியங்காரனால் நாட்டுவளம் விரிவாகப் பேசப்படும். குயில் பாடல்ம் மழை வேண்டல், மழைக்கான அறிகுறிகள், மழை பெய்தல், ஆற்றில் நீர் வருதல், ஐவகை நிலங்கள் குறித்த செய்திகள் சொல்லப்படும். இப்படி விவசாயத்திற்கான பின்னணி சூழல் அறிமுகம் ஆகும் போது பண்ணையார் வருவார்.
இரண்டு பள்ளிகளும் பண்ணையாரிடம் தங்கள் குறைகளை முறையிடும் நிகழ்வு இடம்பெறும். பின் பண்ணையார் பள்ளனை தண்டிப்பார். பண்ணையாரின் கோபத்தைக் குறைக்க பள்ளன் வித்து வகை, மாட்டு வகை, ஏர்வகை குறித்து பேசுவான். மூத்த பள்ளிக் கேட்டுக் கொள்ளவும் பள்ளன் விடுவிக்கப்படுவான்.
மீண்டும் அறுவடைக் கூலியைப் பங்கிடுவதில் இரண்டு பள்ளிகளுக்கும் சண்டை வரும். பண்ணையார் அவர்களை சமாதானம் செய்து இறைவனை துதிப்பதோடு நாடகம் முடியும்.
இக்கதை நிகழும் இடங்களாக மூத்த பள்ளியின் ஊரும், பண்ணையார் வாழும் மருத நிலமும் அமையும்.
திருவாரூர்க் கோவில் திருவிழாவின் போது திருவாரூர் பள்ளு மேடை நாடகமாக நடிக்கப்பட்டது என்றும் நாடகம் முடிந்ததும் நாடகக் கலைஞர்கள் நூலாசிரியரின் பரம்பரையினர் வாழும் வீட்டிற்கு வந்து ஆசி பெற்றதாகவும் தகவல் கிடைக்கிறது.
பள்ளு நூல்கள்
- அகத்தியர் பள்ளு
- இரும்புல்லிப் பள்ளு
- கங்காநாயக்கர் பள்ளு
- கட்டி மகிபன் பள்ளு
- கண்ணுடையம்மன் பள்ளு
- கதிரை மலைப் பள்ளு
- குருகூர்ப் பள்ளு
- கொடுமாளூர்ப் பள்ளு
- கோட்டூர் பள்ளு
- சண்பகராமன் பள்ளு
- சிவசயிலப் பள்ளு
- சிவசைல பள்ளு
- சீர்காழிப் பள்ளு
- செண்பகராமன் பள்ளு
- சேரூர் ஜமீன் பள்ளு
- ஞானப் பள்ளு
- தஞ்சைப் பள்ளு
- தண்டிகைக் கனகராயன் பள்ளு
- திருச்செந்தில் பள்ளு
- திருமலை முருகன் பள்ளு
- திருமலைப் பள்ளு
- திருவாரூர்ப் பள்ளு
- திருவிடைமருதூர்ப் பள்ளு
- தென்காசைப் பள்ளு
- பள்ளுப் பிரபந்தம்
- பறாளை விநாயகர் பள்ளு
- புதுவைப் பள்ளு
- பொய்கைப் பள்ளு
- மாந்தைப் பள்ளு
- முக்கூடற் பள்ளு
- முருகன் பள்ளு
- வையாபுரிப் பள்ளு
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑
புரவலற் கூறி அவன் வாழியவென்று
அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்
எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே - ↑
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்; - ↑ பள்ளு இலக்கியம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.