first review completed

ஈழத்தில் தமிழ் இலக்கியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 66: Line 66:


[http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov16/31866-2016-11-23-16-07-08 ஈழத்தில் தமிழ் இலக்கியம், கீற்று இதழ்]
[http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov16/31866-2016-11-23-16-07-08 ஈழத்தில் தமிழ் இலக்கியம், கீற்று இதழ்]
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:42, 9 October 2022

கா.சிவத்தம்பி

ஈழத்தில் தமிழ் இலக்கியம், ஈழத்து தமிழ் எழுத்தாளர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய கட்டுரை நூல்.

ஆசிரியர் குறிப்பு

ஈழத்தில் தமிழ் இலக்கியம் நூலின் ஆசிரியர்  கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10,1932-ஜூலை 6, 2011) (கா.சிவத்தம்பி) ஈழத்து தமிழ் அறிஞர். ஆசிரியர், எழுத்தாளர், பண்பாட்டு வரலாற்று ஆசிரியர். நாடக நடிகர். அவரது பங்களிப்பு மொழியியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல், அரசியல், வரலாறு என விரிவானது. மார்க்ஸிய அழகியல் அணுகுமுறை கொண்ட இலக்கிய விமர்சகர். இலக்கிய வரலாற்றாசிரியராக அமெரிக்க ஆய்வுமுறைகளை கையாண்டவர். தமிழ் தொல்லிலக்கியங்களின் சமூகவியல் கூறுகளை கண்டடைவது, அவற்றினூடாக ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. (பார்க்க; கார்த்திகேசு சிவத்தம்பி)

நூலின் பொருண்மை

இலங்கையின் தனித்துவத்தையும், தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஓர் இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த முறையினைச் சிறப்பாக இந்திய வாசகர் களுக்கு எடுத்துக்காட்டுவதே 'ஈழத்தில் தமிழ் இலக்கியம்' நூலின் முக்கிய நோக்கம் என முன்னுலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பண்பு நன்கு திகழ்ந்த காலமான 1948 - 1970 காலப் பிரிவையே 'ஈழத்தில் தமிழ் இலக்கியம்' நூல் விவரிக்கிறது.

நூல் அமைப்பு

ஈழத்தில் தமிழ் இலக்கியம் நூல் கீழ்காணும் ஏழு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது;

  1. ஈழத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிக் கட்டங்கள்- 1948 வரை
  2. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும் (1954 - 1970)
  3. ஈழத்தின் ஆக்க இலக்கிய நூல் வெளியீடு (1948 - 1970)
  4. 1970 க்குப்பின் ஈழத்திலக்கியத்தில் தோன்றிய முக்கிய வளர்ச்சி நெறிகள்
  5. ஈழத்தில் தமிழ் இலக்கிய விமரிசனம்
  6. ஈழத்து தமிழ் நாடகங்கள்
  7. யார் இந்த யாழ்பாணத்தான்

பொருண்மை

ஈழத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிக் கட்டங்கள்- 1948 வரை

இந்தப் பகுதி ஈழத்து இலக்கியத்தின் தேசிய பரிமாணத்தை காட்டும் முறையில் எழுதப் பெற்றுள்ளது. ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பின் வரும் காலப் பகுதிகளாக வகுத்துக் கொள்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி;

  1. யாழ்ப்பாணம் இராச்சியம் தோன்றும் வரையுள்ள காலம்.
  2. யாழ்ப்பாண இராச்சியக் காலம். இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் என்றே எடுத்துக் கூறப்படல் மரபு.
  3. போர்த்துக்கேயர் காலம்
  4. ஒல்லாந்தர் காலம்
  5. பிரித்தானியர் காலம். இதனைப் பின்வரும் உப பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.

அ. கிறித்துவத்தின் பரவலும், சமூகப் பண்பாட்டுத் தனித்துவப் பேணுகையும் (1796 -1879) ஆறுமுகநாவலர் (1822 - 79)

ஆ. ஆங்கில ஆட்சி மத்தியதர வர்க்கத் தோற்றக் காலம் (1890 - 1948)

இ. தேசிய இலக்கியக் காலம் 1956 முதல்.

கோட்டை இராச்சியத்தை ஆண்டுவந்த மூன்றாம் பராக்கிரமபாகு காலமான 1310-ல் தேனுவரைப் பெருமாள் என அழைக்கப்படும் போசராஜர் இயற்றிய 'சரகோதிடமாலை' என்னும் காலத்தால் முந்திய இலங்கைத் தமிழ் நூலில் இருந்து 1954 -க்குப் பிறகு மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிடப்படும் தெளிவத்தை ஜோசப் உள்ளிட்டவர்களின் படைப்புகள் வரையிலான ஈழத் தமிழ் இலக்கியத்தின் பொதுச்சித்திரத்தை இந்த முதல் பகுதி அளிக்கிறது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும் (1954 - 1970)

இப்பகுதியில், 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  1954 முதல் 1970 - ஆம் ஆண்டுவரையான  இலட்சியம், செயல்கள் போன்றவற்றையும் அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் மற்றும் இதழ்களைப் பற்றியும் மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது.

ஈழத்தின் ஆக்க இலக்கிய நூல் வெளியீடு (1948 - 1970)

இப்பகுதியில், 1948 -1970 காலப்பகுதியில் வெளியான புனைகதை, நாடகம், கவிதை  போன்ற பிரிவுகளில் ஈழத்தில் வெளியான நூல்களையும் அது பதிப்பிக்கப்பட்ட மற்றும் விற்பனையின் விவரங்களையும் விரிவாக அளிக்கிறது. மேலும்,  தென்னிந்திய நூல்களைவிட ஈழத்து நூல்கள் குறைவாக விற்பதற்கான காரணத்தையும் அதனை உயர்த்துவதற்கான உபாயத்தையும் விவரிக்கிறது.

1970-க்குப்பின் ஈழத்திலக்கியத்தில் தோன்றிய முக்கிய வளர்ச்சி நெறிகள்

இப்பகுதி,  1970-ஆம் ஆண்டுக்குப் பின் ஈழத்தில் நூல்கள் விற்பனையை அதிகரிப்பதற்கு எடுப்பட்ட முயற்சிகளையும் அதனால் ஏற்பட்ட பலன்களையும் விவரிக்கிறது.

ஈழத்தில் தமிழ் இலக்கிய விமரிசனம்

இப்பகுதி, ஈழத்தில் தமிழ் இலக்கிய விமரிசனம் உருவான விதத்தையும் அதன் நோக்கங்களையும் அதனால் விளைந்த பயன்களையும் விவரிக்கிறது. கீழ்காணும் குழுவினர் ஈழத்து தமிழ் இலக்கிய விமர்சன மரபில் முக்கிய இடம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது;

1. ஈழத்து இலக்கிய உரைகாரர்கள்

2. ஆசிரியப் பரம்பரை முக்கியஸ்தர்கள்

3. பத்திரிக்கை தொடர்புடைய அழகியல்வாத விமர்சகர்கள்

4. அ. மறுமலர்ச்சி குழுவினரிடையே தோன்றிய சமூக நோக்குடைய, இலக்கிய விமர்சன திறன் வாய்ந்த ஆக்க இலக்கிய கர்த்தாக்கள்

ஆ. முற்போக்கு இலக்கியவாதத்தின் முன்னோடிகள்

5. அ. பல்கலைக்கழக வழி வந்த முற்போக்கு விமர்சகர்கள்

ஆ. முற்போக்கு இலக்கியம் தாக்கம் காரணமாக அதனை ஆதரித்தும் எதிர்த்தும் நின்ற ஆக்க இலக்கிய கர்த்தாகளாகிய விமர்சகர்கள் 6. கல்விப் பயிற்சி வழியாக இலக்கிய விமர்சனத்தை தமது ஆய்வும் துறையாகக் கொண்டுள்ள விமர்சக ஆய்வாளர்கள்

ஈழத்தில் தமிழ் இலக்கியம்
ஈழத்து தமிழ் நாடகங்கள்

இப்பகுதியில், ஈழத்தில் தோன்றிய மரபான கூத்து மற்றும் நாடகங்களின் வகைமைகளையும் அரங்கேற்ற அடிப்படைகளையும் விவரிக்கிறது. கீழ்காணும் மூன்று வகையான நவீன நாடகங்கள் தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது;

  • வரலாற்றுக் கதைகளையும் ஐதீகக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்
  • யாழ்ப்பாண வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரதேச மொழி வழக்கு நாடகங்கள்
  • பொதுவான சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் பொதுத்தர மொழி வழக்கினைக் கொண்ட நாடகங்கள்

பதிப்பு

ஈழத்தில் தமிழ் இலக்கியம் என்னும் இந்நூலை 1978 -ஆம் ஆண்டு சென்னை தமிழ் புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.

உசாத்துணை

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் புத்தகாலயம், சென்னை ( 1978)

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கீற்று இதழ்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.