under review

வி.வி.வைரமுத்து: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 43: Line 43:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாடகக் கலைஞர்]]
[[Category:நாடகக் கலைஞர்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:05, 21 December 2025

வைரமுத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வைரமுத்து (பெயர் பட்டியல்)
வி.வி.வைரமுத்து
வி.வி.வைரமுத்து நூல்

வி.வி. வைரமுத்து (பிப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989) இலங்கையின் இசைநாடகக் கலைஞர். அரிச்சந்திர மயானகாண்டம் இவருடைய புகழ்பெற்ற நாடகம். நடிகமணி என போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

வி.வி.வைரமுத்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா- ஆச்சிக்குட்டி இணையருக்கு பிப்ரவரி 11, 1924-ல் பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932-ல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3-ம் வகுப்பில் சேர்ந்தார். 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கர்நாடக இசைக்கல்வி பெற்றார்

தனிவாழ்க்கை

வி.வி. வைரமுத்து 1944-ல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். வசந்தா, லலித, வனிதா, சாரங்கன், மணிமேகலை ஆகியோர் வாரிசுகள். ஆசிரியராக பணியாற்றிய வி.வி. வைரமுத்து கலைப்பணியில் ஈடுபட்டமையால் வேலையை இழந்தார்.

கலைவாழ்க்கை

பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938-ம் ஆண்டு தனது 14-ம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். 'வசந்தகான சபா" என்னும் நாடகமன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை மேடையேற்றினார். சத்தியயவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாகவும் சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாகவும், ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளியாகவும், நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளகவும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த வைரமுத்து 1950-ம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்தில் முதன்முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வி.வி. வைரமுத்துவின் மிகச்சிறந்த வேடமாக மயானகாண்டம் என்னும் இசை நாடகத்தில் அரிச்சந்திரன் அமைந்தது. இலங்கை முழுவதும் 3000-த்திற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது அது.

இலங்கை வானொலியில் பல இசை நாடகங்களை வழங்கினார். மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஜலதங்கரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பவளவிழாவின் போது இவர் பாடி நடித்த 'நந்தனார்' இசை நாடகத்தை ஒலிப்பதிவு செய்து குறுவட்டாக வெளியிட்டார்கள். இலங்கை வானொலியில் முதல் முதலாக வெளிவந்த நாட்டுக்கூத்து நாடகம் இதுவே.

மயானகாண்டத்தில் வி.வி. வைரமுத்து

பேராசிரியர் கா. சிவத்தம்பி "நாடக தீபம்" என்னும் வி.வி வைரமுத்துவின் நினைவு நூலில் தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல் என்று வைரமுத்துவை குறிப்பிட்டார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் கலைக் கோமான் என்னும் விருதையும் பேராசிரியர் க. கைலாசபதி நவரச திலகம் என்னும் விருதையும், தென்னிந்திய தமிழ் மூதறிஞர் ம. பொ. சிவஞானம் நாடக வேந்தன் என்னும் விருதினையும், முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் முத்தமிழ் வித்தகர் என்னும் விருதினையும் வழங்கிக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள். கிருஷ்ணாழ்வார் போன்ற மூத்த இசைநாடகக் கலைஞர்களால் பாராட்டப்பட்டவர்.

திரைப்படம்

ஏ. ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் வி.வி. வைரமுத்துவின் 'மயானகாண்டம்' இசை நாடகத்தின் பகுதியும் இணைக்கப்பட்டது.

நந்தாப்புகழ்பெற்ற நாயகன் வி.வி.வைரமுத்து

நினைவுகள்

விருதுகள்

  • 1960-ல் கலையரசு சொர்ணலிங்கம் நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
  • 1964-ல் அமைச்சர் எஸ். தொண்டமான் நாடகச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் வழங்கினார்.
  • 1970-ல் தந்தை செல்வா நடிப்பிசை மன்னன் எனும் பட்டத்தை வழங்கினார்.
  • 2004-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு "கலாநிதி" பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது

மறைவு

வி.வி. வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் ஜூலை 8, 1989-ல் காலமானார்.

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:39 IST