தொகை நிலை(தும்பை): Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 74: | Line 74: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|06-Jul-2025, 10:02:39 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 7 July 2025
தொகை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்ட இரு தரப்பும் மொத்தமாக அழியும் நிலையைக் கூறுவது. .தொகைநிலை என்னும் துறை உழிஞைப் படலத்திலும் உள்ளது. தொகை நிலை என்பது தும்பைப் போரின் உச்சம். மொத்தமாக அழியும் அவலம் இதில் உணர்த்தப்படுகிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அறியாதபடி தமது புகழை உலகில் நிலைநிறுத்திப் போரிட்ட இரு பெரும் வேந்தரும், படைஞரும் ஒருவர் எஞ்சாமல் மடிந்தது தொலைநிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அழிவு இன்று புகழ்நிறீஇ
ஒரழிவுஇன்று களத்துஒழிந்தன்று- (கொளு-28)
வெண்பா
மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்திரள்வேல் மன்னர் களம்பட்டார் - பெண்டிர்
கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும்
கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.
தமது தோள் வலிமையைப் புலப்படுத்திப் பகை மன்னர் இருவரும் உலகத்தை ஆள ஆளில்லாத வகையில் மடிந்தனர். அவருடைய மனைவியரும் தீப்பாய்ந்தனர். இப்படியாயினும் இன்னும் கூற்றின் வயிறு நிரம்பவில்லை. கொடியதே கூற்று.
எடுத்துக்காட்டு
புறநானூறு 62
- பாடியவர்: கழாத்தலையார்
- பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி இருவரும் போரிட்டு இறந்தபோது பாடியது.
- திணை: தும்பை; துறை: தொகைநிலை
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், 5
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் 10
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,
உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே; 15
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது:
படைவீரர்கள் மாண்ட பின்னர் அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர். இதற்கு அறப்போர் போர் என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர். இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் போர்களத்தில் சாய்ந்து கிடந்தன. பேய்மகளிர் குருதியை வாரித் தலையில் பூசிக்கொண்டனர். புண் பட்டுச் சாவோரைத் தூங்க வைப்பதற்காக அனந்தல் பறை (சாவு மேளம்) கொட்டப்பட்டது. போர் மறவர்களின் உடல்களைப் பருந்துகள் தின்றுகொண்டிருந்தன. இறந்தவர்களின் மனைவிமாரும் பச்சைக் கீரைகளைத் தின்றுகொண்டும், பனிநீரில் குளித்துக்கொண்டும் கைம்மைக் கோலம் கொள்ளாமல் கணவருடன் சேர்ந்து மாண்டுவிட்டனர். புகழ் பெற்றவர் அடையும் வானுலகத்துக்கு நல்ல விருந்து கிடைத்தது. மாண்டவர் நாடு என்ன ஆவது? மாண்டவர் புகழ் மலரட்டும் எனப் புலவர் வாழ்த்துகிறார்.
புறநானூறு 63
- பாடியவர்: பரணர்
- திணை: தும்பை; துறை: தொகைநிலை
- பாடப்பட்டோர்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம், 5
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, 10
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?
எத்தனை யானைகள்! அத்தனை யானைகள்மேலும் பாய்ந்திருக்கும் அம்புகள். அதனால் அவை போரிடாமல் கிடந்தன. குதிரைகளும் வீரர்களோடு மாண்டன. தேரில் வந்த மறவர்களும் அவர்கள் அணிந்திருந்த தோல் என்னும் மார்புக் கவசம் மூடிய நிலையில் மாண்டு கிடந்தனர். முரசுகள் முழக்குவார் அற்றுக் கிடந்தன. வேந்தர்களும் சந்தனமணிந்த மார்போடு களத்தில் மாண்டு கிடந்தனர். இனி அவர்களின் நாட்டு வளம் என்ன ஆவது? நன்செய்க் கழனிகளில் பூத்த ஆம்பல் மலர்களைச் சூடிக்கொண்டு பச்சிலைகள் படர்ந்திருக்கும் குளத்து நீரில் குளித்து விளையாடும் மகளிர் மகிழ்வு என்ன ஆவது?
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 10:02:39 IST