under review

அ. யேசுராசா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Madhusaml moved page அ. யேசுராஜா to அ. யேசுராசா without leaving a redirect)

Revision as of 21:25, 30 December 2024

நன்றி: காலச்சுவடு பதிப்பகம்
யேசுராசா சிறப்பிதழ்

அ.யேசுராசா (அ. யேசுராஜா, அத்தனாஸ் யேசுராசா)(பிறப்பு : டிசம்பர் 30, 1946) ஈழக் கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர், பதிப்பாளர் . கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர் . யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் ஆகியவற்றிலும் செயல்பட்டு வருகிறார். 50 ஆண்டுகளாக ஈழத்தின் கலை இலக்கியச் செயல்பாடுகளில் பங்காற்றி வருகிறார்.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணத்தில் குருநகர் என்ற கடலோரக் கிராமத்தில் டிசம்பர் 30, 1946 அன்று அத்தனாஸ், செபஸ்தியானா இணையருக்கு யேசுராசா பிறந்தார். கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் (G.C.E. O/L) வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியைக் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார்.

யேசுராசா

தனி வாழ்க்கை

அ. யேசுராஜா அஞ்சல் அதிபர், தந்தியாளர் (Postmaster & Signaller) சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றார். பேராதனை தபாலகத்தில் வேலை செய்தபோது பல சிங்கள கலை இலக்கிய எழுத்தாளர்களின் நட்பைப் பெற்றார்.

யேசுராவின் மனைவி மேரி ஜெயறோசா அறிவியல் ஆசிரியை.

இதழியல்

1975-ல் தொடங்கப்பட்ட 'அலை' இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயல்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25-வது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தார்.

மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'திசை' வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும், கலாசாரப் பக்கங்களுக்குப் பொறுப்பாளராகவும் இருந்தார். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு 1994 -1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான 'கவிதை' இதழை வெளியிட்டார். மார்கழி 2003 முதல் 'தெரிதல்' என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அ. யேசுராஜாவின் முதலாவது சிறுகதை 'வரவேற்பு' 1970-ல் வெளிவந்தது. 'தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்' என்னும் சிறுகதைத் தொகுதியில் 1966 முதல் 1974 வரை அவர் எழுதிய 11 சிறுகதைகளில் 10 சிறுகதைகள் இடம்பெற்றன. இத்தொகுதி 1975-ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான பரிசைப்பெற்றது.

கவிதைகள்
பனிமழை, கவிதைகள்

அ. யேசுராசாவின் கவிதைகள் 'அறியப்படாதவர்கள் நினைவாக' என்கிற கவிதைத் தொகுப்பாக வெளியாகின.

மொழியாக்கம்

அ. யேசுராஜா மொழியாக்கம் செய்த கவிதைகள் 'பனிமழை' என்ற பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.எட்டாவது அலை வெளியீடாக வந்த இந்நூலில் இலங்கை, யூகோஸ்லாவியா, அமெரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, இந்தியா (கேரளம்), உருகுவே, இங்கிலாந்து நாட்டுக் கவிஞர்களின் தேர்ந்த கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கட்டுரை

யேசுராஜாவின் முதலாவது கட்டுரை 'ஒரு வாசகனின் அபிப்பிராயம்' என்கிற பெயரில் தினகரனில் செ. கணேசலிங்கம் மௌனி சிறுகதைகள் பற்றிய பிரமிளின் கட்டுரைக்கு எழுதிய எதிர்விமர்சனத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. அ. யேசுராஜா தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியப் போக்குகள் பற்றிய பதிவுகளையும் தனது கருத்துக்களையும் பத்திகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிவந்துள்ளார். இவற்றின் தொகுப்புகள் 'பதிவுகள்', 'குறிப்பேட்டிலிருந்து', 'தூவானம்', 'நினைவுக் குறிப்புகள்' என்கிற பெயரில் வெளிவந்தன. திரைப்படங்கள், நாடகங்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்' என்கிற பெயரில் 2013-ல் வெளிவந்தன.

பதிப்பியல்

அ. யேசுராஜா 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்', 'மரணத்தில் வாழ்வோம்', 'காலம் எழுதிய வரிகள்' போன்ற கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பாளர்களில் ஒருவர். ஓவியர் மார்க்கின் நினைவாக வெளியிடப்பட்ட 'தேடலும் படைப்புலகமும்' என்கிற தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவர்.

அமைப்புப் பணிகள்

அ.யேசுராசா 'கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம்' என்கிற அமைப்பொன்றை, 1969 -ன் பிற்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார்.

திரைப்பட வட்டம்

யேசுராசா திரைப்பட ரசனை சார்ந்து சரியான புரிதல் ஏற்படாத காலகட்டத்தில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களை யாழ்ப்பாண சமூகத்திற்கு திரையிட்டுக் காட்டி ஒரு விவாதத்தை உருவாக்க முயன்றார். 1979 – 1982 காலகட்டத்தில்,ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பு உருவானது. நல்ல பிறமொழிப் படங்களை யாழ்ப்பாணத்தில் திரையிடுவதில் ஆர்வத்துடன் இயங்கினார். 1998 – 2006 வரையான ஆண்டுகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா. சிவச்சந்திரனுடன் இணைந்து, ஒவ்வொரு வாரமும் பிறமொழிப் படங்களையும் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் திரையிட்டார். அயல்நாட்டுத் திரைப்படங்களின் படச்சுருள்களை அந்தந்த நாட்டின் தூதரகத்தின் முறையான அனுமதி பெற்று வரவழைத்தார். காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளும் சிற்றிதழ்களில் எழுதினார். அவ்வெழுத்துக்கள் ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் நூலாக வந்துள்ளன. யாழ் திரைப்பட வட்டத்தின் செயல்பாடுகள் 1982-களில் போர் காரணமாக நின்றன.

போர்ச்சூழல் சற்று மாறிய பின் 1998-இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா.சிவச்சந்திரனின் தலைமயில் 'புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம்' என்கிற சுயாதின அமைப்பு உருவாக்கப்பட்டது. ராமரூபன் மற்றும் அ.யேசுராசாவின் பங்களிப்பில் இவ்வமைப்பு ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும், குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்சிப்படுத்தினார்கள்; காட்சியைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்களும் நடந்தன. பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட திரைப்பட ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 2006-ல் மீண்டும் போர் காரணமாக இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.

அ. யேசுராசா 2006-க்குப்பின் நடைபெறும் இளைஞர்களின் சில குறும்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் தனது மதிப்பீட்டுக் கருத்துக்களை முன்வைத்து, உரையாடி வருகிறார்.

பிற செயல்பாடுகள்

அ. யேசுராச நவீன கலைகளில் ஈடுபாடுகொண்டவர். அன்று யாழ்ப்பாணத்தில் நவீன ஓவிய, சிற்பக் கலைகளில் முக்கியப் பங்காற்றிய மார்க் மாஸ்டர், லண்டன் பத்மநாப ஐயர் ஆகியோருடன் இணைந்துநவீன கலையை வளர்க்கும் நோக்கில் செயற்பட்டார்.

விருதுகள்

இலங்கை சாஹித்ய மண்டலி விருது (1975) (தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பிற்காக)

மதிப்பீடு

யேசுராஜா ஈழச்சூழலில் இலக்கியத்தின் அழகியலை முன்னிலைப்படுத்திய இலக்கிய சிந்தனையாளர், இதழாளர் என்ற வகையில் அறியப்படுகிறார். ஈழத்தேசியவாதத்தில் நம்பிக்கை கொண்ட யேசுராஜா ஈழத்திற்குரிய ஓர் அழகியல் மரபை உருவாக்கும் நோக்கம் கொண்டவர். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத் தரப்புடன் தொடர் விவாதத்தில் இருந்தார்.

" அ. யேசுராசா இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர். இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற 'அலை' இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர். யேசுராசாவின் எழுத்துகள் கூருணர்வும் விமர்சன ரீதியான பார்வையும் நிறைந்தவை" என்று ஈழத்து எழுத்தாளர் அருண்மொழிவர்மன் குறிப்பிடுகிறார்.

"யாழ் திரைப்பட வட்டத்தின் இவ்வமைப்பின் தலைவராக ஏ.ஜே. கனகரத்தினா இருந்தாலும், இவ்வமைப்பின் இயங்கு வெளியின் அதியுன்னத வீச்சுக்கு காரணமாக செயல்பட்ட பிரதான செயற்பாட்டாளராக அ.யேசுராசாவையே குறிப்பிட முடியும். அவரின் தனிப்பட்ட ஆர்வமும் ஆளுமைத்திறனும் யாழ்.திரைப்பட வட்டத்தை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது" என்று அனோஜன் பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதை
  • தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை 1974. 1989)
கவிதை
  • அறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)
மொழியாக்கம்
  • பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
தொகுப்பாசிரியர்
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" - (கவிதை, தொகுப்பாசிரியர் 1984, 2003)
  • மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, தொகுப்பாசிரியர்1985, 1996)
  • காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, தொகுப்பாசிரியர், 1994)
கட்டுரை
  • தூவானம் - (பத்தி, 2001)
  • பதிவுகள்" - (பத்தி, 2003)
  • குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
  • திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)

உசாத்துணை

இணைப்புகள்

பனிமழை-அ.யேசுராசா, நூலகம்.ஆர்க்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Aug-2024, 11:14:15 IST