நம்பியாண்டார் நம்பி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 86: | Line 86: | ||
http://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202126-28034 | http://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202126-28034 | ||
{{ | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:40, 28 May 2022
Ready for review
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர். 10-ஆம் நூற்றாண்டில் திருநாரையூரில் பிறந்த இவர் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்
வாழ்ந்த காலம்
நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்து கொடுத்தது முதலாம் இராஜராஜனிடம் என்றும் இவர் வாழ்ந்தது முதலாம் இராஜராஜன் மற்றும் அவர் புதல்வன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் என்றும் மு. அருணாசலம் தனது தமிழிலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு நூலில் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை வரலாறு
திருமுறை கண்ட புராணத்துள் சொல்லியுள்ள நம்மியாண்டார் நம்பியின் வரலாறு பின்வருமாறு;
இராஜராஜ மன்னன் திருவாரூரிலிருந்து அரசு செய்து வந்த காலத்தில், சில சிவனடியார், மூவர் பாடல்களுள் இரண்டொன்றை மட்டும் ஓதத் கேட்டு, முழுமையும் காண வேண்டும் என்ற விருப்பம் உடையவனாய், அறிந்தவரைத் தேடிக் கொண்டிருந்தான். தில்லைக்கு அருகிலுள்ள திருநாரையூர் என்ற தலத்தில் எழுந்தருளிய விநாயகராகிய பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்த ஆதி சைவரொருவர் இருந்தார். சைவம் ஈடேறச் செய்ய வல்ல ஒரு நற்புதல்வர் அவருக்குத் தோன்றினார். முறைப்படி கல்வி பயின்று அவர் வளர்ந்து வந்த நாளில் ஒரு நாள், தந்தை அயலூர் செல்ல நேரிட்டது. அவர் சொற்படியே இப்பிள்ளை பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைசெய்து நைவேத்தியத்தை அவர் முன் வைக்க, அவர் உண்ணாதிருத்தமையை கண்டு, "பெருமானே, யான் செய்த பிழை உண்டோ, திருவமுது செய்யாத தென்னே?" என்று கேட்டுத் தம் தலையைக் கல்லில் மோதப் பிடிக்கும்போது, பொறு என்று சொல்லிப் பிள்ளையார் திருவமுதை உண்டார். மகிழ்ந்த நம்பி, "இனி நான் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் அடிப்பார்; ஆதலால் நீங்களே எனக்குக் கலைகளைக் கற்பிக்க வேண்டும்" எனக் கேட்டு, அவ்வாறே விநாயகப் பெருமானிடத்தில் பயின்று வருவாராயினார். கல்வியில் மேம்பட்ட நம்பியின் புகழ் எங்கும் பரவிற்று. விநாயகர் துதியாக நம்பி மூத்த பிள்ளையார் இரட்டை மணிமாலை பாடினார்.
அதையறிந்த சோழமன்னன் ஏராளமான பழங்களை எடுத்து வந்து அவற்றைப் பிள்ளையாருக்கு ஊட்டிவிடும்படி நம்பியை வேண்ட, நம்பியின் விருப்பப்படி பிள்ளையார் அவற்றையும் உண்டார். மகிழ்ந்த அரசன், மூவர் தேவாரங்களையும் பெறவேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்ல, தில்லையில் நடராசப் பெருமான் சபையின் பக்கல் மூவர் கை அடையாளமுடைய அறையில் அவை உள்ளன என்பதைப் பிள்ளையார் கூறி, தொண்டர் சரிதமும் அறிவித்தார். அரசன் சென்று அவற்றை எடுத்துத் தரும்படி தில்லை மூவாயிரவருக்கு அறிவிக்க, அவர்கள், "மூவர் வந்தால்தான் அறை திறக்கும்" என்றார்கள். அரசனும் மூவர் சிலையைச் செய்து மூவர் விழா முடித்து வீதியுலா வருவித்து, திருமுறை அறைக்கெதிரே கொணர்ந்து நிறுத்தி, அறையைத் திறப்பித்துப் பார்க்க, திருமுறை ஏடுகள் யாவும் கரையான் மூடியிருக்க கண்டாண். எண்ணெய் சொரிந்து, மண் அகற்றி எடுகளைப் பார்க்க, பெரும் பகுதி பழுதாகியிருந்தது. வருந்தி நின்ற அரசன் முதலியோர் கேட்க, "மூவர் பாடலில் ஈண்டு வேண்டுவன மட்டும் வைத்தோம்" என்று ஒரு வாக்கு எழுத்தது.
பின்னர் அரசன் தேவாரங்களைத் திருமுறைகளாக வகுக்க எண்ணி நம்பியை வேண்ட, அவர் சம்பந்தர் திருமுறை மூன்று, அப்பர் திருமுறை மூன்று, சுந்தரர் திருமுறை ஒன்று, திருவாசகம் ஒன்று, திருவிசைப் பாமாலை ஒன்று, திருமந்திரம் ஒன்று ஆகப் பத்துத் திருமுறைகள் ஆக்கினார். பின்னர் அரசன் நம்பியை வணங்கி, "திருமுகப் பாசுரம் முதலாம் பதிகங்களையும் ஒரு முறையாகச் செய்க" என வேண்ட, அவர் பதினொன்றாந் திருமுறையாத் தொகுத்தார்: அதன்மேல் அவரே திருத் தொண்டத்தொகையையொட்டித் திருத்தொண்டர் அந்தாதி பாடினார். பின்னர் பண்ணடைவு பெற வேண்ட, திருநீலக் கண்ட யாழ்ப்பாணர் அவதாரத் தலமாகிய திரு எருக்கத்தம் புலியூர் அடைந்து, "அரனே, இன்னிசை தந்தருள்" என்று குறையிரந்தார். அப்போது ஒரு வாக்கு, "பாணர் மரபிலே வந்த பெண்ணொருத்திப் பண்களை அருளிச் செய்தோம்" என்று எழுந்தது. அரசனும் நம்பியும் அவளைத் தில்லையம்பலத்துள் ஆடுவார் திருமுன்பு கொண்டுசென்று பாடுவித்து, இசை வகுத்துக் கொண்டார்கள். இவ்வாறு நாடு எங்கும் அருட்சென்னி சிவம் பரப்பினான். அதுமுதல், அரசன் திருமுறை கண்ட சோழன் எனப் பெயர் பெற்றான்.
திருமுறைத் தொகுப்பு
மன்னன் இராஜராஜனின் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை கீழ்காணுமாறு தொகுத்தார்;
திருமுறைகள் | எழுதியவர்கள் மற்றும் நூல் | ||
---|---|---|---|
முதல் மூன்று | திருஞானசம்பந்தர் தேவாரம் | ||
நான்கு, ஐந்து மற்றும் ஆறு | திருநாவுக்கரசர் தேவாரம் | ||
ஏழு | சுந்தரர் தேவாரம் | ||
எட்டு | மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் | ||
ஒன்பது |
|
||
பத்து | திருமூலர் இயற்றிய திருமந்திரம் | ||
பதினொன்று | பன்னிருவர் இயற்றிய நாற்பது நூல்கள் |
நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பிறகு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பனிரெண்டாம் திருமுறையாக இணைக்கப்பட்டது.
இயற்றிய நூல்கள்
நம்பியாண்டார் நம்பி கீழ்காணும் பத்து நூல்களை இயற்றினார். இப்பத்து நூல்களுள் ஒன்று விநாயகர் மீதும், ஒன்று சிவன் மீதும், ஒன்று திருத்தொண்டத் தொகையின் விரிவாகவும், ஆறு நூல்கள் திருஞானசம்பந்தர் மீதும், பத்தாவது நூல் திருநாவுக்கரசர் மீதும் பாடப் பெற்றுள்ளன.
- திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
- திருத்தொண்டர் திருவந்தாதி
- ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
- ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
- ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
- ஆளுடையபிள்ளையார் திருஉலாமாலை
- ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
- ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
- திருநாவுக்கரசு நாயனார் திரு ஏகாதசமாலை
உசாத்துணை
மு. அருணாசலம் இயற்றிய தமிழிலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு
தமிழ் இணைய கல்விக்கழகம்
http://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202126-28034
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.