under review

உருவக அணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Reviewed by Je)
Line 54: Line 54:
* அவயவ உருவகம்
* அவயவ உருவகம்
* அவயவி உருவகம்
* அவயவி உருவகம்
{{first review completed}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 00:23, 7 May 2022

உருவக அணி உவமையணியிலிருந்தே தோன்றுகிறது. உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் பொருளுக்கும் (உவமேயம்) இடையிலான வேறுபாட்டை நீக்கி, உவம உருபு இல்லாமல், அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை,

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்'

என்று தண்டியலங்காரம் கூறுகிறது.

விளக்கம்

மலர் போன்ற முகம் என்ற உவமை முகமாகிய மலர் என்ற உருவகமாகிறது. உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்று வரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய' என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும் வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும். இவை மறைந்து வருதலும் உண்டு.

மலர் போன்ற முகம், மலர்முகம் - உவமைகள்

முகமாகிய மலர் முகமலர் - உருவகம்

மலர் போன்ற முகம் என்ற உவமையில் மலரும் முகமும் வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகிய மலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும் வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் காணலாம்.

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு-1 கம்பராமாயணம்

வினையுடை அரக்கராம் இருந்தை வெந்துகச்
சனகியென்றொருதழல் நடுவண் தங்கலால்
அனகன்கை யம்பெனும் அளவில் ஊதையால்
கனகம் நீடிலங்கை நின்றுருகக் காண்டியால் - சுந்தரகாண்டம்

தீவினையுடைய அரக்கர் எனும் விறகால், சீதையாகிய நெருப்பால், ராமன் கை அம்பெனும் பெருங்காற்றால் பொன்மயமான இலங்கை உருகியோடுவதைப் பார்க்கப் போகிறாய் என்று அனுமன் சீதைக்குச் சொல்லும் இடத்தில் அரக்கர்களுக்கு விறகும், சீதாப்பிராட்டிக்கு நெருப்பும், ராமனின் அம்புக்கு பெருங்காற்றும் உருவகமாக அமைகின்றன.

எடுத்துக்காட்டு-2 பராபரக் கண்ணி (தாயுமானவர்)

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

நெஞ்சம் கோவிலுக்கும், நினைவு சுகந்தத்திற்கும், அன்பு திருமஞ்சன நீருக்கும் உருவகமாகிறது.

எடுத்துக்காட்டு-3 பாரதியார்

வெள்ளலைக் கைகளை கொட்டி முழங்கும் கடலினை

அலைகள் கடலின் கைகளுக்கு உருவகமாய் அமைந்தன.

எடுத்துக்காட்டு-4 பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

அன்பு விளக்காகவும், ஆர்வம் நெய்யாகவும், சிந்தை திரியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

உருவக அணியின் வகைகள்

  • தொகை உருவகம்
  • விரி உருவகம்
  • தொகைவிரி உருவகம்
  • இயைபு உருவகம்
  • இயைபு இல் உருவகம்
  • வியனிலை உருவகம்
  • சிறப்பு உருவகம்
  • விரூபக உருவகம்
  • சமாதான உருவகம்
  • உருவக உருவகம்
  • ஏகாங்க உருவகம்
  • அநேகாங்க உருவகம்
  • முற்று உருவகம்
  • அவயவ உருவகம்
  • அவயவி உருவகம்


✅Finalised Page