first review completed

நா.காமராசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 74: Line 74:
#
#


{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:59, 19 April 2022

நா.காமராசன்

நா. காமராசன் (நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிஞர், திரைப்பாடலாசிரியர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிதைக்கு வந்தார். அரசியல் செயல்பாட்டாளராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

நவம்பர் 29, 1942-ல் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். போடிநாயக்கனூரில் தொடக்கக் கல்வி கற்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.

நா.காமராசன் மனைவியுடன்

தனிவாழ்க்கை

காமராசன் பிப்ரவரி 5, 1967-ல் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை மணந்தார். தைப்பாவை என்ற மகள் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். தீலீபன் என்ற மகன் பட்டயக்கணக்கர்.

முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல்சட்ட நகலை எரித்தமைக்காக கைதானார். பின்னர் தியாகராசர் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் ஆலோசனைப்படி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாக பணியாற்றினார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.1991-இல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்

நா.காமராசன் குடும்பம்

இதழியல்

காமராசன் சோதனை என்னும் இதழை நடத்தியிருக்கிறார்.மூன்று இதழ்களே வெளிவந்தது.

அரசியல்

காமராசன் 1964-ல் தியாகராசர் கல்லூரியில் பயில்கையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்த காமராசன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து 1990-ல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் உட்பட வெவ்வேறு கட்சிப்பதவிகளை வகித்தார்.

நா.காமராசன்

திரைவாழ்க்கை

எம்.ஜி.ராமச்சந்திரனால் 1975-ல் பல்லாண்டு வாழ்க என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார். 34 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். பஞ்சவர்ணம் என்னும் படத்துக்கு வசனம் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

நா.காமராசன் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் பாதிப்புடன் மரபுக்கவிதைகள் எழுதியவர். சுரதா அவரை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தார். பின்னர் வானம்பாடி கவிதை இயக்கம் அவரை புதுக்கவிதை நோக்கிக் கொண்டு வந்தது. வானம்பாடி கவிதை இயக்கத்தின் பாதிப்பு கொண்டவர் என்றாலும் அவருடைய கவிதைகள் வானம்பாடிக் கவிஞர்களைப்போல நேரடிக்கூற்றுகளை நம்பாமல் படிமங்களை முதன்மையான கூறுமுறையாக கொண்டவை. முதல் தொகுப்பு கறுப்பு மலர்கள் பரவலாக கவனிக்கப்பட்டது. தொடக்கம் முதலே திராவிட இயக்கச் சார்புடன் இருந்த நா.காமராசன் வானம்பாடி இயக்கத்தின் இடதுசாரி முழக்கங்களை எதிரொலித்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டார்.

மறைவு

நா. காமராசன் மே 24, 2017-ல் சென்னையில் காலமானார்.

விருதுகள்

  • கலைமாமணி விருது
  • சிறந்த பாடலாசிரியர் விருது
  • பாரதிதாசன் விருது

இலக்கிய இடம்

நா. காமராசனின் கவிதைகள் வானம்பாடி இதழும் பின்னர் திராவிட இயக்கமும் முன்வைத்த அரசியல் சமூகவியல் கருத்துக்களை மேடையுரைகளுக்குரிய முறையில் முன்வைப்பவை. கருத்துக்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட உருவகங்கள் கொண்டவை. தமிழ்ப்புதுக்கவிதை வானம்பாடி இயக்கம் வழியாக பொதுவாசகர்களிடம் சென்றபோது அவர்களில் பரவலாக விரும்பப்பட்ட கவிஞராக இருந்தார்.

நூல்கள்

கவிதைகள்
  • கறுப்புமலர்கள்
  • சூரியகாந்தி
  • தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
  • சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
  • மலையும் ஜீவநதிகளும்
  • கவியரசு நா. காமராசன் கவிதைகள்
  • மகாகாவியம்
  • கிறுக்கல்
  • சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி
  • ஆப்பிள் கனவு
  • அந்த வேப்பமரங்கள்
  • பெரியார் காவியம்
  • பட்டத்துயானை
  • காட்டுக்குறத்தி
  • சிகரத்தில் உறங்கும் நதிகள்
  • பொம்மைப்பாடகி
  • ஞானத்தேர்
கதைகள்
  • நரகத்திலே சில தேவதைகள்
திறனாய்வு
  • நாவல்பழம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.