under review

வேற்றுமை அணி: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 37: Line 37:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d031-d0314-html-d03142l4-20707 வேற்றுமை அணி-தமிழ் இணைய கல்விக் கழகம்]
[https://www.tamilvu.org/ta/courses-degree-d031-d0314-html-d03142l4-20707 வேற்றுமை அணி-தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|29-Dec-2022, 19:37:33 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:32, 13 June 2024

வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது. தண்டியலங்காரத்தில் எட்டாவதாகக் கூறப்படும் வேற்றுமை அணி உவமை அணியிலிருந்து தோன்றியது. உவமை அணியில் இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமை மட்டுமே சொல்லப்படும். ஒப்புமையைக் கூறி இருபொருள்களுக்கு இடையிலான வேற்றுமையையும் சொல்வது வேற்றுமை அணி. திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இவ்வணி மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. தண்டியலங்காரம் வேற்றுமை அணியின் இலக்கணத்தை

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே
                                            (தண்டியலங்காரம் 49)

என்று குறிப்பிடுகிறது.

(கூற்று - வெளிப்படையாகச் சொல்வது; குறிப்பு - குறிப்பாக, மறைமுகமாகச் சொல்வது)

விளக்கம்

இரு பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ முதலில் கூறிப் பின்னர் அவற்றுக்கிடையே வேற்றுமை தோன்றக் கூறுவது வேற்றுமை அணி.

மோப்பக் குழையும் அனிச்சம்-முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

விருந்தினரும் அனிச்ச மலரும் மென்மையான குணத்தால் ஒத்தவை என அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அனிச்சம் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும், ஆனால் விருந்தினரோ முகம் கடுத்து நோக்கினாலே வாடிவிடுவர் என அவற்றிற்கிடையே உள்ள வேற்றுமையைச் சொல்வதால் இதுவேற்றுமை அணியாகிறது.

இனி, வேற்றுமையை எடுத்துக்காட்டும் வகையிலும் வேற்றுமை அணி இருவகைப்படும். இருபொருள்களை வேற்றுமைப் படுத்தும்போது, இரண்டும் சமமான சிறப்புடையவையே எனத் தோன்றுமாறு கூறுவது வேற்றுமைச் சமம் எனப்படும். அவ்வாறு அல்லாமல், இரு பொருள்களுள் ஒன்று, மற்றொன்றைவிட உயர்ந்தது எனத் தோன்றுமாறு காரணத்துடன் சொல்வது உயர்ச்சி வேற்றுமை எனப்படும்.

வேற்றுமைச் சமம்

வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களும் சமமான சிறப்புடையவையே எனக்காட்டுவது வேற்றுமைச் சமம்.

அனைத்து உலகும் சூழ்போய், அரும்பொருள் கைக்கொண்டு,
இனைத்து அளவைத்து என்றற்கு அரிதாம் -பனிக்கடல்
மன்னவ! நின் சேனைபோல்; மற்று அது நீர்வடிவிற்று
என்னும் இது ஒன்றே வேறு

பொருள்: மன்னவனே! கடலும் நின் சேனையும் ஒரே வகையான இயல்பு, தொழில்களை உடையவை. குளிர்ந்த கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்து, பல அரிய பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, இன்ன அளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது; உன் சேனையும் பல நாடுகளையும் கைப்பற்றுவதற்கு உலகம் முழுவதையும் சூழ்ந்து, பகை நாட்டு அரசர்களின் அரிய பொருள்களை எல்லாம் கைக்கொண்டு, இன்னஅளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது. ஆனால் கடல், 'நீர் வடிவில் உள்ளது' என்னும் ஓர் இயல்பு மட்டும்தான் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், சேனை, கடல் என்னும் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமைகள் முதலில் வெளிப்படையாகக் கூறப்பட்டன. பின்பு, கடல் 'நீர் வடிவினது' என அவற்றிற்கிடையேயான வேற்றுமை சொல்லப்படுகிறது.ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்தது எனக் கூறவில்லை. ஆகவே இது வேற்றுமைச் சமம். கடல், நீர்வடிவை உடையது என ஒரு பொருள் மட்டுமே வேற்றுமைப் படுத்தப்பட்டதால் இது ஒருபொருள் வேற்றுமைச் சமம் எனப்படும்.

உயர்ச்சி வேற்றுமை

வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களில் ஒன்று மற்றொன்றைவிட உயர்ந்தது எனப் புலப்படுமாறு வேற்றுமைப் படுத்துவது உயர்ச்சி வேற்றுமை.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோர் அஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

பொருள்: வானில் உள்ள வெண்ணிலவும் சான்றோரும் உலகுக்கே ஒளியளிப்பதால் ஒத்தவர் என ஒற்றுமையைகூறி, பின் திங்களில் மாசு(களங்கம்) உண்டு, சான்றோர் தம்மேல் களங்கம் வர ஒப்பார் என வேற்றுமையச் சுட்டி, திங்களை விட சான்றோரே உயர்ந்தவர் என உயர்வுபடுத்திக் கூறியதால் இது உயற்சி வேற்றுமை.

உசாத்துணை

வேற்றுமை அணி-தமிழ் இணைய கல்விக் கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Dec-2022, 19:37:33 IST