under review

பாயிரம்: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review)
(category & stage updated)
Line 73: Line 73:


== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />{{Ready for review}}
<references />
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 16:49, 20 February 2022

தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி. பொதுவாக பாயிரம் பாடலாக அமைந்திருப்பது வழக்கு.

பதிகம் நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது. நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான சொற்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருளை உணர்த்துவன.

பாயிரம்

பாயிரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் வழக்கில் வருகிறது. நல்லாட்சி புரியும் அரசன் ஒருவனை எதிர்க்க வரும் பகைவர்கள் பலராக ஒன்று திரண்டு 'பாயிரம்' கூறிக்கொண்டு வந்தாலும் ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் போல நல்லரசன் ஒருவன் தாக்கும்போது ஓடிவிடுவர் என்கிறது, பழமொழி பாடல்.[1] அதன் பின்னர் பாயிரம் 'பெருங்கதை' நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்.

தொல்காப்பியம் - பாயிரம்

தொல்காப்பியத்தில் வரும் செய்திகளையும், நூல் அரங்கேற்றம் முதலான தொடர்புடைய செய்திகளையும் தொகுத்து பனம்பாரனார் பாடியுள்ளார். அது தொல்காப்பிய நூலுக்குப் பாயிரமாக அமைந்துள்ளது.

திருக்குறள் - பாயிரம்

திருக்குறளில் பாயிரம் என்பது எது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்துள்ளன. திருக்குறளில் உள்ள முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரம் என்று சொல்லப்படுவது உண்டு. அதை மறுத்து திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள பாடல்களே பாயிரம் எனப்படுவதும் உண்டு.

நன்னூல் தரும் விளக்கம்

நன்னூல் பாயிரத்தைப் பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகைப்படுத்துகிறது.

பொதுப் பாயிரம்
  1. நூல் - நூலின் பெயர்
  2. நுவல்வோன் - நூல் உரைக்கும் ஆசிரியன் பெயர்
  3. நுவலும் திறன் - நூல் சொல்லிச் செல்லும் பாங்கு
  4. கொள்வோன் - நூல் பயில்வோன் எப்படி இருக்கவேண்டும்
  5. கோடல் - பயிலவேண்டிய முறைமை

இந்த ஐந்து பாங்கினையும் கூறுவது பொதுப் பாயிரம்.

சிறப்புப் பாயிரம்
  1. நூலாசிரியனின் பெயர்
  2. நூல் தோன்றிய மரபுவழி
  3. நூல் சொல்லும் பொருளுக்கு எல்லை
  4. நூலின் பெயர்
  5. நூல் சொல்லும் பொருள்
  6. யாப்பு - நூலின் சொற்பொருள் கட்டுக்கோப்பாக யாக்கப்பட்டுள்ள முறைமை
  7. நூல் சொல்லும் பொருள்
  8. நூலைக் கேட்போர் எய்தும் பயன்

ஆகிய எட்டுப் பாங்குகளைக் கூறுவது சிறப்புப் பாயிரம்.

இருநூலுக்கு ஒரு பாயிரம்

சிவஞான சித்தியார் என்னும் நூலின் சுப பக்கம், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ஒரு கோட்டான் இரு செவியன் எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, தேவி காலோத்தரம், சர்வ ஞானோத்திரம் என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப் பாடல் அமைந்துள்ளது. இப்படி அமையும் மரபினை 'வித்தியாபாதம்' என்று வடமொழியாளரும், ஞானபாதம் என்று தமிழ்நூல் ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.[2]

சொல்லமைதி விளக்கம்

முகவுரை, பதிகம் என்னும் சொற்கள் பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்கள் என நன்னூல் குறிப்பிடுகிறது[3].

பதிகம், பாயிரம் என்னும் பழஞ்சொற்கள் இக்காலத்தில் மேலும் பல சொற்களால் குறிப்பிடப் படுகிறது. நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது அணிந்துரை என்றும், நூலைப்பற்றிப் புனைந்து கூறுவது புனைந்துரை என்றும், புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

அணிந்துரை நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை நன்னூல்
தந்துரை நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism நன்னூல்
நூன்முகம் உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம் நன்னூல்
பதிகம் பத்து எண்ணிக்கை கொண்ட பாடல்களின் தொகுப்பு திருமுறைகள்
பாயிரம் நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது நன்னூல்
புறவுரை நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி நன்னூல்
புனைந்துரை நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை நன்னுல்
மதிப்புரை நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும் இக்காலம்
முகவுரை முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை நன்னூல்
முன்னுரை நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம் இக்காலம்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. பழமொழி பாடல் எண் 249 கழகப்பதிப்பு
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206
  3. முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

    புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

    – நன்னூல் - 1


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.