எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 55: | Line 55: | ||
* இரட்சணிய பாலபோதனை | * இரட்சணிய பாலபோதனை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0py தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்] | * [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0py தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்] | ||
* [https://archive.org/details/ratchanya-yathirigam இரட்சணிய யாத்ரீகம் மின்னூல்] | * [https://archive.org/details/ratchanya-yathirigam இரட்சணிய யாத்ரீகம் மின்னூல்] | ||
== இணைப்புகள் ==<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | == இணைப்புகள் == | ||
<references/> | |||
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | <!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | ||
{{second review completed}} | {{second review completed}} |
Revision as of 09:30, 11 March 2022
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை (ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ண பிள்ளை, ஏப்ரல் 23, 1827 – பிப்ரவரி 3, 1900) ஒரு தமிழறிஞர். இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பிய வடிவிலான கிறிஸ்தவ நூலை எழுதியவர். தமிழில் கிறிஸ்தவ இறைநெறிப் பாடல்களை எழுதியவர்களில் முன்னோடி.
பிறப்பு, இளமை
கிருஷ்ண பிள்ளை தென்தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே கரையிருப்பு என்னும் சிற்றூரில் ஏப்ரல் 23, 1827-ல் வேளாளர் குலத்தில் வைணவ குடும்பத்தில் பிறந்தார். தந்தை சங்கர நாராயண பிள்ளை, தாய் தெய்வநாயகியம்மை. கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக ஆற்றும் திறன் பெற்றவர். கிருஷ்ணப் பிள்ளை குலமுறைப்படி இளமையிலேயே தன் தந்தையிடம் ராமாயணம், மகாபாரதம், நாலாயிர திவ்யபிரபந்தம், அஷ்டப் பரபந்தம், திருவாய்மொழி, சடகோபர் அந்தாதி ஆகியவற்றைக் கற்றிருந்தார். சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல்நாதன் கவிராயரிடம் நன்னூலை கற்றிருந்தார்.
கிருஷ்ண பிள்ளையின் பதினாறாவது வயதில் தந்தை மறைந்தார். அதன் பின் பாளையங்கோட்டை வந்து வள்ளல் வெங்கு முதலியார் என்பவரது வீட்டிலிருந்த தமிழ்ச்சுவடிகளைபயின்றார்.
தனிவாழ்க்கை
அந்தக் காலகட்டதில் திருநெல்வேலி பகுதிகளில் பல கிறிஸ்தவ சங்கங்கள் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் மதப் பணி செய்து வந்தார். கிறிஸ்தவ சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரத்தில் ஜி.யு. போப் ஒரு கல்லூரி தொடங்கி நடத்திவந்தார். போப் ஓய்வுக்கு சில காலம் இங்கிலாந்து சென்றபோது அக்கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை கால்டுவெல் தேடிக் கொண்டிருந்தார். அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவரான இருபத்தைந்து வயது கிருஷ்ண பிள்ளை தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் திறமை கொண்டிருந்ததால் கால்டுவெல் அவரையே சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.
ஆசிரியர் பணி செய்து வரும்பொழுது கிருஷ்ண பிள்ளைக்கு கிறிஸ்துவத்தில் ஈடுபாடு உண்டானது. ஏற்கனவே கிருஷ்ண பிள்ளையின் உறவினர் சிலர், கிறிஸ்தவ சமயத்தை தழுவி இருந்தனர். கிருஷ்ண பிள்ளை கிறிஸ்தவ நூல்களை கற்கத் தொடங்கினார். முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலை தூய தாமஸ் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்று ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளை எனப் பெயர் ஏற்று கிறிஸ்தவரானார்.
இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்[1]. பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.
கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கியப் பங்களிப்பு
கிருஷ்ண பிள்ளை கிறிஸ்தவ நூல்களை விரும்பிப் படித்த காலத்தில் ஜான் பனியன் (1628-1688) எழுதிய தி பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (The Pilgrim's Progress) என்னும் நூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தன் சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் அந்நூல் சொல்வது போல உணர்ந்தார். இரண்டு பாகங்கள் கொண்ட அந்த நூலை அடிப்படையாக வைத்து இரட்சணிய யாத்திரிகம் என்னும் செய்யுளை இயற்றினார். மூலநூலை அப்படியே மொழியாக்கம் செய்யாமல் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளோடு இணைத்து தமிழ் கிறிஸ்தவ மரபின் முக்கியமான படைப்பாக எழுதினார்.
இரட்சணிய யாத்ரீகம் பாளையங்கோட்டையில் இருந்து வெளியான ‘நற்போதகம்’ என்னும் இதழில் பகுதி பகுதியாக வெளியானது. இந்த நூல் 3800 செய்யுள்களைக் கொண்டது. அக்காலத்தில் புலவர்களின் திறமைக்கு சான்றாகக் கருதப்பட்ட யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று இதில் உள்ளது. ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இந்த நூலில், பண்ணோடு பாடப் பெற்ற சைவத் தேவாரப் பாடல்களை அடியொற்றி 144 பாடல்கள் இயற்றியிருக்கிறார். தேவாரப் பண்ணையும், நடையையும் கையாண்டு தேவாரம் என்னும் தலைப்பிலேயே பருவந்தோறும் இடையிடையே அந்த இசைப் பாடல்களை அமைத்துள்ளார். நூலை எழுதிய நோக்கத்தை சொல்லும்போது “மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்” என்கிறார்.
இறைவனைப் புகழும் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், அவர் கிறிஸ்தவரான வரலாறு குறித்த தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் எழுதியுள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார்.
வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளார்.
இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.
கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:
“சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன.”
மறைவு
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை தனது 73-ஆவது வயதில் பிப்ரவரி 3, 1900 அன்று மறைந்தார்.
படைப்புகள்
கிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள்:[2]
செய்யுள் நூல்கள்
- போற்றித் திருகல் அகவல்
- இரட்சணிய யாத்ரீகம்
- இரட்சணிய மனோகரம்
உரைநடை நூல்கள்
- இலக்கண சூடாமணி
- நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு
- இரட்சணிய சமய நிர்ணயம்
தொகுப்பு நூல்கள்
- காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
- இரட்சணிய குறள்
- இரட்சணிய பாலபோதனை
உசாத்துணை
இணைப்புகள்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.