under review

விஷால்ராஜா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Removed Category:Spc)
 
Line 37: Line 37:
[[Category:எழுத்தாளர்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:இலக்கிய விமர்சகர்]]
[[Category:இலக்கிய விமர்சகர்]]
[[Category:Spc]]

Latest revision as of 21:46, 8 January 2026

விஷால்ராஜா
விஷால்

விஷால்ராஜா (நவம்பர் 26, 1993) தமிழில் புனைகதைகளும் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய வடிவிலும் மொழியிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்பவராக மதிப்பிடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

விஷால்ராஜா சென்னை அருகே திருநின்றவூரில் நவம்பர் 26, 1993-ல் பொ.சுந்தரேசன்- சு.எஸ்தர் ராணி இணையருக்குப் பிறந்தார். திருநின்றவூர் புனித யோவான் மெட்ரிக் பள்ளி, பள்ளிக்கல்வியும், ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார்.

தனிவாழ்க்கை

விஷால்ராஜா திருநாமதீபாவை மே 17, 2021 அன்று மணந்தார். பெங்களூரில் மென்பொருள் பொறியியலாளர். மகள் கிருத்திகா சுந்தரி.

இலக்கிய வாழ்க்கை

விஷால்ராஜா 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். உயிர் எழுத்து மாத இதழில் 2013-ல் பிரசுரமான 'ஞாபகங்களின் கல்லறை' முதல் படைப்பு. 2017-ல் முதல் சிறுகதைத்தொகுப்பான "எனும்போது உனக்கு நன்றி" ஜீவா படைப்பக வெளியீடாக வந்தது. தன் எழுத்தின் மீதான செல்வாக்கு பற்றிச் சொல்லும்போது புதுமைப்பித்தன், அசோகமித்திரன், வண்ணதாசன், ஜெயமோகன், தஸ்தயேவ்ஸ்கி, அமெரிக்க எழுத்தாளர் மெரிலின் ராபின்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். விஷால்ராஜா சொல்வனம் முதலிய இதழ்களில் கவிதைகள் எழுதியிருந்தாலும் சிறுகதையையும் நாவலையுமே தன் வடிவம் எனக் கருதுகிறார். இலக்கிய ஆக்கங்கள் சார்ந்த ரசனை, விமர்சனக் கட்டுரைகள் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்துள்ளன.

"நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நம் வாழ்க்கையே முற்றிலுமாக உருமாறி கலவையான புது வடிவத்தை எட்டியுள்ளது. அது நம் சிந்தனை முறையிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இலக்கியத்திலும் பேசுபொருள் சார்ந்து அது அதிக தாக்கத்தை உண்டு பண்ணும் என நான் நம்புகிறேன். தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சமூக அழுத்தங்களும் உறவுச் சிக்கல்களும் புதுப்புது உருவங்கள் பெறுகின்றன. அவற்றை எழுத்தில் பேசாமல் இருக்க முடியாது" என தன் எழுத்தின் இலக்கு பற்றிச் சொல்கிறார்[1].

இலக்கிய இடம்

விஷால்ராஜா உருவகத்தன்மை கொண்ட கதைகளைச் செறிவான மொழியில் எழுதுபவர். அன்றாட வாழ்க்கையை விட அதன் அடிப்படைகளை ஆராயும் மெய்யியல்நோக்கை முதன்மைப்படுத்துபவர். சமகாலப் படைப்பாளிகள் பற்றியும் மேலை இலக்கிய மேதைகள் பற்றியும் விரிவான விமர்சனக்கட்டுரைகளை எழுதுகிறார். 'விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் 'ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?' எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரைக் குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது' என விமர்சகர் சுனில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்[2].

நூல்கள்

சிறுகதைத்தொகுப்பு
  • எனும்போது உனக்கு நன்றி (2017, ஜீவா படைப்பகம்)
  • திருவருட்செல்வி (2023, விஷ்ணுபுரம் பதிப்பகம்)

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:44 IST