under review

கோமகள்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
(Added First published date)
 
Line 69: Line 69:
*[https://kungumamthozhi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ கோமகள் கதை குங்குமம் தோழி]   
*[https://kungumamthozhi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ கோமகள் கதை குங்குமம் தோழி]   
*  
*  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:38:55 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 16:48, 13 June 2024

கோமகள்

கோமகள் (இயற்பெயர் ராஜலட்சுமி; மே 22, 1933- அக்டோபர் 21, 2004) பொதுவாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் அறிந்தவர். இவருடைய பல சிறுகதைகளும், குறுநாவல்களும் இந்தியிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கோமகள் (இயற்பெயர் ராஜலட்சுமி), சீர்காழியில் உள்ள அளக்குடி என்ற கிராமத்தில், மே 22, 1933 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே எழுத்தார்வம் உடையவராய் இருந்தார். உயர்கல்வியை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் பொறியாளர் ராமமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கோமகள் ஆரம்ப காலக்கட்டங்களில் ’ராஜலட்சுமி ராமமூர்த்தி’ என்ற பெயரிலேயே எழுதினார். அக்காலத்தில் 'ராஜம் ராமமூர்த்தி’, 'சரோஜா ராமமூர்த்தி’ , 'கங்கா ராமமூர்த்தி’ எனப் பல எழுத்தாளர்கள் இயங்கி வந்ததால், 'கோமகள்’ என்ற புனை பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். பிரசண்ட விகடன், கல்கி, மங்கை, மணியன் மாத இதழ், தினமணி கதிர், தினமலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகின.

கோமகளின் முதல் நாவல் 'பனிமலர்’ 1964-ல் வெளியானது. அடுத்து வெளியான 'அன்பின் சிதறல்’ பிரசண்ட விகடனில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பு. கல்கி இதழில் தொடராக வெளிவந்த 'இனிக்கும் நினைவுகள்’ வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ’பூச்சரம்' நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது 'வடு' என்ற சிறுகதை, +1 மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் இடம் பெற்றது. 'இந்த யுகம் பூத்து குலுங்குமடி’ என்ற சிறுகதைத் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதுகலை பட்டப்படிப்பிற்கான துணைப்பாடநூலாக வைக்கப்பட்டது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது படைப்புகள் நாடகமாக ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன.

நாற்பதிற்கும் மேற்பட்ட நாவல்களையும், முப்பதிற்கும் மேற்பட்ட குறுநாவல்களையும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் தந்திருக்கிறார் கோமகள்

கோமகளின் சிறுகதைகள் சாரிகா, யுகப்ரபா, மாயா போன்ற ஹிந்தி இதழ்களிலும், மாயுரா, உத்தான போன்ற கன்னட இதழ்களிலும், விபுலா, வனிதா போன்ற தெலுங்கு இதழ்களிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

அமைப்புச் செயல்பாடுகள்

ஐந்தாம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, சாகித்ய அகாதமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கள் உள்பட பல இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார் கோமகள். தமிழக அரசின் குடும்பநலத்திட்டப் பிரச்சாரத்திற்கென நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். தமிழக அரசின் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஆகியவற்றுக்கான நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

கோமகள் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சித் துறையின் 1982-ம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் தேர்வில் இரண்டாம் பரிசு - அன்னை பூமி நாவலுக்குக் கிடைத்தது.
  • கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிப் பரிசு -(1966 ) மனச்சந்ததி சிறுகதைக்கு அளிக்கப்பட்டது.
  • கல்கி - பெர்க்லி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு - பால் மனம் சிறுகதைக்குக் கிடைத்தது.
  • வி.ஜி.பி. வழங்கிய சந்தனம்மாள் நினைவுப் பரிசு.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ் அன்னை’ பரிசு.
  • பாரத வங்கியும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டிப் பரிசு.

மறைவு

கோமகள் டிமென்ஷியா (Dementia) என்னும் மனச்சிதைவுக்கு ஆளானார். நோய் குணமாகாமல் அக்டோபர் 21, 2004-ல் காலமானார்.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர் கோமகள். இவரது பெரும்பாலான படைப்புகள் மத்திய தர மக்களின் குடும்ப வாழ்வை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்டவை. அலுவலகச் சூழல்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தனது படைப்புகளில் முன்வைத்தவர்.

நூல்கள்

நாவல்கள்
  • பனிமலர்
  • அன்னை பூமி
  • அன்பின் சிதறல்
  • இனிக்கும் நினைவுகள்
  • இருவரில் ஒருவர்
  • பூச்சரம்
  • சுடர் விளக்கு
  • மணிச்சரங்கள்
  • சுநாதங்கள்
  • நிலவில் மலராத மலர்கள்
  • பெண் ஒரு மலர்
  • சந்தன மலர்கள்
  • மலர்கள் நடுங்குகின்றன
  • என் மனம் உனக்குத் தெரியாதா?
  • மேகச் சித்திரங்கள்
  • நிஜம் ஒரு நிறம் நிழல் பல நிறம்
  • தூரத்துக் கனவுகள்
  • மலரும் அரும்புகள்
  • இளமைக் கனவுகள்
  • நிலாக் கால நட்சத்திரங்கள்
  • பால்மனம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • முதல் சந்திப்பு
  • உயிரின் அமுதாய்
  • ஆறறிவின் திகைப்பு
  • கானல் நீர்
  • மனச்சந்ததி
  • இணை ஒன்றுசேர்ந்தால்
  • ஒரு மெட்ரோபாலிட்டன் நகரில்
  • காஸ்மோபாலிட்டன் மனிதர்கள்
  • இந்தியா மீண்டும் விழித்தெழும்
  • சில நியதிகள் மாறுகின்றன
  • இந்த யுகம் பூத்து குலுங்குமடி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:55 IST