படப்பெட்டி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 03:54, 19 June 2024 by Editorgowtham (talk | contribs)
படப்பெட்டி எட்டாவது இதழ் - முகப்பு

தீவிர சினிமா ஆர்வலர்களுக்கான காலாண்டிதழாக சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான இதழ் படப்பெட்டி.

சலன ஊடகம் குறித்த பு‌ரிதலை விசாலப்படுத்தவும், சந்தேகங்களை களையவும், உலக அளவிலான புதிய முயற்சிகளை தெ‌ரிந்து கொள்ளவும் மக்கள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் 'படப்பெட்டி' இதழ் வந்து வெளியானது. ’பரிசல்’ புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வரும் சிவ. செந்தில்நாதன் அவர்கள் இவ்விதழை பதிப்பித்து வெளியிட்டார்.

துவக்கம்

படப்பெட்டி முதல் இதழ் ஜீன் 2004-ல் வெளியானது.

திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், இவைகளைப் பற்றிய ஆழமான கட்டுரைகள், அறிமுகம், நேர்காணல் ஆகியவை ஒவ்வொரு இதழிலும் இடம் பெறும்.

முதல் இதழ்

கே.பி.பாலசந்தர், சிவசெந்தில்நாதன், அ.சதீ ஜெ.முனுசாமி, விஜய் ஆனந்த் ஆகியோரடங்கிய ஆசிரியர் குழுவினால் வெளியான முதல் இதழில் காத்திரமான ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

  1. குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட "ஃபைனல் சொல்யூசன்" ஆவணப்படம் பற்றிய கட்டுரை. அதன் இயக்குநர் ராஜஸ் சர்மாவின் நேர்காணல்.
  2. குறும்பட முயற்சிகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆராய்கிற 'தமிழ்ச்சுழலில் குறும்படங்கள்' என்னும் செழியனின் கட்டுரை.
  3. பெண் அரங்கம், பெண்ணிய அரங்கம் குறித்து இந்திய அளவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை தமிழ்ச் சுழலுடன் தொடர்புறுத்தி விரிவாகப் பேசுகிற அ. மங்கை அவர்களின் 'விரியும் அரங்கவெளி' கட்டுரை.
  4. மலையாள இயக்குநர் ஜி. அரவிந்தன் பற்றிய 'காலமற்ற நதியில் நெடும் பயணம்' எனும் மு. இசக்கியப்பனின் கட்டுரை
  5. உயர்சாதியை சேர்ந்தவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பன்வாரி தேவியின் உண்மைக் கதையை அடிப்படையாகக்கொண்டு நந்திதாதாஸ் நடித்து வெளியான 'பவாந்தர்' எனும் இந்திப் படம் பற்றிய கட்டுரை.

முதல் சுற்று (2004)

சினிமாவுக்குப் பின் உள்ள அரசியல், பின்னணி, தொழில்நுட்பம், வெவ்வேறு தளத்தில் உள்ள விஷயங்களைப் பதிவு செய்ய ஒன்பது இதழ்கள் வெளிவந்தன.

  • சென்னையில் உள்ள திரையங்குகள் சில மூடப்பட்டபோது, இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட பார்வையாளர்களின் அனுபவங்களை கட்டுரைகளாக வெளியிட்டன.
  • பி.கே.நாயரைப் பற்றி முதன்முதலில் தமிழில் நேர்காணல் செய்ததும் படப்பெட்டி இதழில் தான்.
  • ஒளிப்பதிவாளர் செழியன் தமிழ் சினிமாவின் அருஞ்சொற்பொருள்களை இரண்டு மூன்று இதழ்களில் எழுதியிருந்தார்.

இரண்டாம் சுற்று (2011)

படப்பெட்டி நான்காவது இதழ்

R.P.அமுதன், விஜய ஆனந்த், தயாளன், ஆனந்த குமரேசன், கொற்றவை, தி.பரமேஸ்வரி ஆகியோரைக்கோண்டு உருவாக்கப்பட்டது `படப்பெட்டி திரைப்பட இயக்கம்'[1].

படப்பெட்டி நான்காவது இதழ் இசைக் கலைஞர் எம்.பி. சீனிவாசனின் அட்டைப்படத்துடன் வெளியானது.

இயக்குநர் பாலு மகேந்திரா, முனைவர் வி. அரசு, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

  • எட்டாவது இதழ் படத்தொகுப்பு குறித்த சிறப்பிதழாக 2015-ல் வெளியானது.
  • ஒன்பதாவது இதழ் ’எழுத்தும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தியடோர் பாஸ்கரன், சொர்ணவேல், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.


மூன்றாம் சுற்று (2018)

கூகை நூலகத்தில் படப்பெட்டி பத்தாவது இதழ் வெளியீடு (2018)

ஆசிரியர் குழுவில் மா. பாலசுப்ரமணியன், சோமிதரன், இரா.குமரகுருபரன் போன்றோரும், ஆலோசகர்களாக ட்ராட்ஸ்கி மருது, ஷாஜி, ஆர்.ஆர்.சீனிவாசன், அமுதன், செழியன், மாமல்லன் கார்த்தி ஆகியோரும் செயல்பட்டார்கள்.

படப்பெட்டியின் பத்தாவது இதழ் ஒளிப்பதிவு சிறப்பிதழாக அதன் மூன்றாம் சுற்றில் வெளியானது.

படப்பெட்டி - மூன்றாம் சுற்று

அடிக்குறிப்புகள்

உசாத்துணை