under review

வைத்தியநாத தேசிகர்

From Tamil Wiki
Revision as of 18:44, 9 June 2024 by Logamadevi (talk | contribs)

வைத்தியநாத தேசிகர்(திருவாரூர் வைத்தியநாத தேசிகர்)(பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) இலக்கண விளக்கம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வைத்தியநாத தேசிகர். அபிடேகத்தார் குலத்தில் திருவாரூரைச் சேர்ந்த வன்மீகநாத தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். அகோர முனிவரிடம் கல்வி கற்றார். தருமை ஆதீனத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பரம்பரையில் தோன்றியவர். இவர் கயத்தாற்றில், திருமலை நாயக்கரின் ஆணையாளர்களில் ஒருவரான திருவேங்கடநாத ஐயரின் மக்களுக்குக் கல்வி புகட்டும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். நாயக்கர் மன்னரின் கவர்னர் ஒருவருக்குச் சிலகாலம் தமிழ் கற்பித்தார். இவரது மனைவி பெயர் தங்கம்.

வைத்தியநாத தேசிகர் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்க இலக்கியங்களையும் நன்கு கற்றவர். படிக்காசுப்புலவர், சதாசிவ தேசிகர், ஒப்பிலாமணிதேசிகர், திருவேங்கடநாதர் முதலியோரின் ஆசிரியர். இவர் காலம் பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு என்பது மயிலம் ஆதீனத்து இரண்டாவது பட்டத்துச் சுவாமிகள் காலத்தில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் எழுதிய நூல்களின் கருத்துக்களை பல இடங்களில் எடுத்தாள்வதாலும் புலப்படும்.

இலக்கிய வாழ்க்கை

வைத்தியநாத தேசிகர் தன் மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது முன்னூலாகிய தொல்காப்பியத்தொடு பின்னூலாகிய நன்னூலின் செய்திகள் முரண்படும் இடங்களைக் கண்டு அவற்றை புதுக்கி , நன்னூலின் மயிலை நாதர் உரை முரண்பட்ட இடங்களை செப்பனிட்டு 'குட்டித் தொல்காப்பியம்' என அழைக்கப்பட்ட இலக்கண விளக்கம் என்னும் இலக்கண நூலை எழுதினார். தம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தபோது நன்னூல் முதலிய இலக்கண நூல்களின் உரைகள் ஆசிரியரின் கருத்திற்கு மாறாக அமைந்ததைக்கண்டு தான் இயற்றிய இலக்கண விளக்கம் நூலுக்குத் தானே உரையும் எழுதினார். இந்நூலின் விளக்கத்தில் இவர் முன்னோர் கருத்துகள் சிலவற்றை மாற்றி உரைக்கிறார்.

வைத்தியநாத தேசிகர் மயிலம் முருகன்மேல் மயிலம் ஶ்ரீ முருகன்பிள்ளைத்தமிழ் இயற்றினார். இந்நூலில் ஒவ்வொரு பருவத்து முதற் செய்யுளிலும் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலையஸ்வாமிகளைப் புகழ்ந்து கூறுகிறார். நல்லூர்ப்புராணம், வாட்போக்கிப்புராணம் முதலிய புராணங்களும், பாசவதைப் பரணி, திருவாரூர்ப் பன்மணிமாலை முதலிய பல சிறு நூல்களும் இயற்றினார். பாசவதைப் பரணி சிவஞான பாலையஸ்வாமிகள் மீது பாடப்பட்டது. 'பிரபோத சந்திரோதயம்' இவரால் இயற்றப்பட்டது எனவும் கருதப்படுகிறது.

வைத்தியநாத தேசிகரின் சமகாலத்தவரான அந்தகக்கவி வீரராகவ முதலியார் தேசிகரைப் புகழ்ந்து எழுதிய பாடல்

ஐம்பதின்மர் சங்கத்தார் ஆகிவிடா ரோநாற்பத்து
ஒன்பதின்மர் என்றே உரைப்பாரோ-இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி
தன்மீதந் நாள்சரித்தக் கால்

பாடல் நடை

மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்

தூவுந் துளிமழை பொழிகரு மேகஞ்
சூழ மதக்கலுழி
சொரிகரி யாமென வானின் மடங்கல்
துடர்ந்து களப்பொதுளு

மாவும் பனசமும் வாழையு மீதுயர்
வழையுந் தழைச்சாரல்
வழியிற் குழியின் வந்து பதுங்கி
வதிர்ந்துவிண் ணிடைமேட

மேவும் பொழுதிரு கால்க ணிமிர்த்துகிர்
விட்டழல் விழிசுழல
வெம்புலி வாலை முறுக்கி யடித்தடல்
வெவ்வா யங்காந்து

தாவுங் குவடுயர் மயிலைக் கிரியாய்
தாலோ தாலேலோ
சமரவி பாடன குமர சடானன
தாலோ தாலேலோ(8)

பாசவதைப்பரணி

அலையு மீனமு மானமு மின்றியே
   அன்றி யோடுநா வாய்க்குமெட் டாததாய்
நிலையுந் தாழ்வு மிலாததோ ரானந்த
    நீள்க டற்றுறை யாடியர் திறமினோ

நூல்கள்

  • இலக்கண விளக்கம்
  • நல்லூர்ப் புராணம்
  • வாட்போக்கிப்புராணம்
  • பாசவதைப்பரணி
  • திருவாரூர்ப் பன்மணிமாலை
  • கமலாலய அன்னை பிள்ளைத்தமிழ்

உசாத்துணை

மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ், மதுரைத் திட்டம்


✅Finalised Page