under review

ரிவோல்ட் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(→‎பங்களிப்பாளர்கள்: வழக்கறிஞர் என்ற சொல் வழக்குரைஞர் என்பதா மாற்றம் செய்யப்பட்டது.)
(→‎பங்களிப்பாளர்கள்: வழக்கறிஞர் என்ற சொல் வழக்குரைஞர் என்பதா மாற்றம் செய்யப்பட்டது.)
 
(No difference)

Latest revision as of 20:44, 12 May 2024

ரிவோல்ட் ஆங்கில இதழ்

ரிவோல்ட் (Revolt) (1928) திராவிட இயக்கத்தின் சார்பாக, முதன் முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்த வார இதழ். 1928-ல், ஈரோட்டில் இருந்து வெளிவந்தது. ஈ.வெ. ராமசாமி பெரியார் மற்றும் எஸ். இராமநாதன் ரிவோல்ட்டின் ஆசிரியர்களாக இருந்தனர். பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக நாகம்மாள் செயல்பட்டார். குத்தூசி குருசாமி துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிரசுரம், வெளியீடு

தமிழ்நாட்டைக் கடந்து தமிழ் மொழி அறியாத பிற மக்களும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளை அறிய வேண்டும் என்று ஈ.வெ. ராமசாமிப் பெரியார் விரும்பினார். அந்த நோக்கத்தில், ஈரோட்டில், நவம்பர் 7, 1928-ல், ஈ.வெ. ராமசாமி தொடங்கிய ஆங்கில இதழ் ரிவோல்ட் (Revolt). கோவை ரத்தினசபாபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், சவுந்தரபாண்டியன், ரிவோல்ட் இதழின் முதல் பிரதியை வெளியிட்டார்.

‘ரிவோல்ட்’ என்பதற்கு ‘கட்டுப்பாட்டை உடைத்தல்’ என்பது பொருள். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் மற்றும் எஸ்.இராமநாதன் ஆகியோர் ரிவோல்ட் இதழின் ஆசிரியர்களாக இருந்தனர். பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக நாகம்மாள் செயல்பட்டார். குத்தூசி குருசாமி துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ரிவோல்ட் முதலில் புதன்கிழமைதோறும் வெளிவந்து. பின்னர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. முதலில் ஈரோட்டிலிருந்தும், சில காலம் சென்னையில் இருந்தும் பின்னர் மீண்டும் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது.

இதன் வருடச் சந்தா ரூபாய் நான்கு. மாணவர்களுக்கு ரூபாய் மூன்று. வெளிநாடுகளுக்குச் சந்தா ரூபாய் ஐந்து என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தனி இதழின் விலை ஒரு அணா. 10 பக்கங்களில் இவ்விதழ் வெளிவந்தது. ஒரு அணா ஸ்டாம்ப், முகவரியுடன் அனுப்புவர்களுக்கு மாதிரி இதழ் அனுப்பப்பட்டது.

இதழின் நோக்கம்

ரிவோல்ட் (Revolt) இதழின் நோக்கம் குறித்து ஈ.வெ. ராமசாமிப் பெரியார், நவம்பர் 11, 1928 தேதியிட்ட குடி அரசு இதழில், “‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் ‘குடி அரசு’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு நாம் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி, அவைகளினால் ஏற்படும், இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.” என்று குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

ரிவோல்டில் இதழ் தோறும் தலையங்கம் இடம் பெற்றது. அந்தந்த வாரங்களின் முக்கிய நிகழ்வுகள் முதல் பக்கத்தில் இடம் பெற்றன. எஸ். குருசாமி (குத்தூசி குருசாமி) இதழ்தோறும் பகுத்தறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டும் பல கட்டுரைகளை, தொடர்களை எழுதினார். ‘ராமாயணம்’ பற்றிய குருசாமியின் கட்டுரை, காந்தியின் கவனத்துக்குச் சென்றது. தேசியப் பிரச்சனைகள் குறித்துப் பல்வேறு கட்டுரைகளை ரிவோல்ட் வெளியிட்டது. தேவதாசி ஒழிப்பு மசோதா, குழந்தைத் திருமணத் தடை மசோதா, ஆலய நுழைவுப் போராட்டம் என்று பல கட்டுரைகள் ரிவோல்ட் இதழில் வெளியாகின.

நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளை எழுதிய ‘The Right of Temple Entry’ கட்டுரை வரவேற்பைப் பெற்றது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எழுதிய ‘A Heartrending Rape’ என்னும் கட்டுரை சாரதா சட்டம் விரைவாக அமலுக்கு வர காரணமாக அமைந்தது. சர்வதேச பகுத்தறிவாதிகளுடன் ரிவோல்ட் இதழ் தொடர்பில் இருந்தது. அறிவியல், நாத்திகம் போன்ற தலைப்புகளில் ரிவோல்ட்டில் கட்டுரைகள் வெளியாகின.

பிராமணர் அல்லாதார் மாநில மாநாடு, சுயமரியாதை இயக்கச் செய்திகள், சமூக சீர்த்திருத்தச் செய்திகள், சமகால அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றைத் தாங்கி ரிவோல்ட் வெளிவந்தது.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

1930 வரை, 55 இதழ்கள் வெளிவந்த ரிவோல்ட் (Revolt), பொருளாதாரச் சூழல்களால் நின்றுபோனது.

வி.கீதா மற்றும் எஸ்.வி. ராஜதுரை தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட ரிவோல்ட் இதழ் தொகுப்பு நூல்

ஆவணம்

பெரியார் திராவிடர் கழகத்தின் வேண்டுகோளின் படி, ரிவோல்ட் இதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபகுதிகளை வ. கீதா மற்றும் எஸ்.வி. ராஜதுரை ஆகியோர் இணைந்து தொகுத்தனர். ”Revolt - A Radical Weekly in Colonial Madras” என்ற தலைப்பில் அது நூலாக வெளிவந்தது.

உசாத்துணை


✅Finalised Page