under review

ராஜதிலகம்

From Tamil Wiki
ராஜதிலகம்

ராஜதிலகம் (1975) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். காஞ்சிபுரத்தை சாளுக்கியர்கள் கைப்பற்றிய வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டது.

எழுத்து, வெளியீடு

1975-ல் இந்நாவலை சாண்டில்யன் குமுதம் இதழில் தொடராக எழுதினார். பின்னர் வானதி பதிப்பகம் நூலாக்கியது.

வரலாற்றுப் பின்புலம்

பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான போர் முந்நூறாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஒன்று. குண்டூர் அமராவதியை தலைநகராக கொண்டு ஆண்ட முற்கால பல்லவர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்ததே சாளுக்கியர் படையெடுப்பில் இருந்து தப்பத்தான். இரண்டாம் புலிகேசி (பொ.யு. 610-642) பல்லவமன்னர் முதலாம் மகேந்திரவர்மனை (பொ.யு. 600-630) தோற்கடித்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (பொ.யு. 630-668) வாதாபிமேல் படைகொண்டுசென்று புலிகேசியை வென்றார். புலிகேசியின் மகன் விக்ரமாதித்யன் (பொ.யு. 655-680) படைகொண்டு வந்து பரமேஸ்வர வர்மனை (பொ.யு. 670-695) வென்று பழிவாங்கினார்.

'விளிந்தை' என்ற இடத்தில் நடந்த போரில் விக்கிரமாதித்தனின் நண்பனும் கங்க நாட்டின் மன்னனுமான பூவிக்கிரமனிடமும் பரமேசுவர வர்மன் தோற்றார். பரமேஸ்வர வர்மனின் மகன் ராஜசிம்ம பல்லவன் (பொ.யு. 690-725) விக்ரமாதித்யனை வென்று காஞ்சியை கைப்பற்றினார். பெருவளநல்லூரில் தோற்று, கந்தையை சுற்றிக் கொண்டு ஓடினான் விக்கிரமாதித்தன் என்று 'கூரம்' பட்டயம் கூறுகிறது.ராஜசிம்ம பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பெயருடன் முடிசூட்டிக்கொண்டார். இவர் கட்டிய ஆலயமே காஞ்சி கைலாசநாதர் ஆலயம் . மாமல்லபுரம் ஆலயங்களும் ராஜசிம்மனால் அமைக்கப்பட்டவை.

கதைச்சுருக்கம்

காஞ்சிபுரத்தை சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன் கைப்பற்றி ஆட்சிசெய்துவருகிறான். போர் நடந்தால் காஞ்சியின் சிற்பங்கள் அழியும் என்பதனால் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் படையுடன் வெளியேறி தங்கியிருக்கிறான். அவன் மகன் ராஜசிம்ம பல்லவன் மாமல்லபுரத்தில் கலைக்கோயில்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறான். ராஜசிம்ம பல்லவன் பல்லவப்படைகளை நடத்தினால் அவர்கள் வெல்லக்கூடும் என்பதனால் சாளுக்கிய அமைச்சர் ஸ்ரீராமபுண்யவல்லபர் அவனை சிறைசெய்ய முயல்கிறார். ஆனால் நேருக்குநேர் போர் நடக்கட்டும் என அவனை தப்பவிடுகிறான் விக்ரமாதித்யன்.

மாமல்லபுரத்தில் இருந்து மைவிழிச்செல்வி என்னும் காதலியுடன் தப்பிச்செல்லும் ராஜசிம்மன் தன் சீன நண்பன் யாங் சின்னுடன் காஞ்சிசென்று அங்கே ஆச்சாரிய தண்டியைச் சந்திக்கிறான். கங்கமன்னன் பூவிக்ரமனின் மகள் ரங்கபதாகாதேவி அங்கே இருக்கிறாள். அவளையும் அவன் விரும்புகிறான். சாளுக்கியர்களின் நண்பனான கங்கமன்னனுடன் விளிந்தை என்னும் இடத்தில் பரமேஸ்வர வர்மன் போர்புரிய நேர்கிறது. அதை தடுக்க முயன்ற ராஜசிம்மனை ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்து சிறைவைத்துவிடுகிறார். போரில் தோற்று பரமேஸ்வர வர்மன் காயம்படுகிறார். தப்பிவரும் ராஜசிம்மன் தந்தையை காப்பாற்றுகிறான். யாங் சின் அக்குபஞ்சர் முறைப்படி மன்னனுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றுகிறான்.

ராஜசிம்மனுக்கும் கங்கமன்னனுக்கும் போர் நிகழாமல் ரங்கபதாகாதேவி தடுக்கிறாள். கங்கமன்னனை கண்டு அவள் மகளை மணந்து பட்டத்தரசியாக ஆக்குவதாக வாக்களித்து ராஜசிம்மன் கங்கர்களின் ஆதரவை பெறுகிறான். விக்ரமாதித்யனின் மகன் வினயாதித்தனை போரில் வெல்லும் ராஜசிம்மன் அவனை கொல்லாமல் திருப்பி அனுப்புகிறான். இருதரப்பும் படை திரட்டுகிறது. பரமேச்வர வர்மன் ஆந்திரநாட்டுக்குச் சென்று படைதிரட்டுகிறான். விக்ரமாதித்யன் பாண்டியர்களின் உதவியை அடையமுடியாமல் ராஜசிம்மன் தடுக்கிறான்

கடைசியாக பெருவநல்லூர் என்னும் இடத்தில் நடந்தபோரில் விக்ரமாதித்யனை தோற்கடித்து கொல்லாமல் திருப்பி அனுப்புகிறான் ராஜசிம்மன். விக்ரமாதித்யனின் அமைச்சர் ஸ்ரீராமபுண்யவல்லபர் ராஜசிம்மனை வாழ்த்தி அவன் கனவுகாணும் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றை கட்டும்படி வாழ்த்தி விடைபெறுகிறார். ரங்கபதாகாதேவி மைவிழிச்செல்வி இருவரையும் ராஜசிம்மன் மணக்கிறான்.

தொடர்ச்சி

ராஜதிலகம் நாவலை முடிக்கையில் 'ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி ட்டினான். எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்’ என்று சாண்டில்யன் குறிப்பிட்டிருந்தார். சாண்டில்யனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'கமலம்’இதழில் ராஜசிம்மன் சீனத்தை வென்ற வரலாற்றை அவர் எழுத ஆரம்பித்தார். ராஜசிம்ம பல்லவன் (இரண்டாம் நரசிம்மன்) மன்னனாக தன் இரு தேவியர்களுடன் வர, வீரசிம்மன் என்ற இளைஞனைக் கதாநாயகனாக வைத்து தொடங்கிய அந்தக்கதை கமலம் நின்றுவிட்டதனா பாதியில் நின்றது.

பின்னர் குமுதத்தில் 'சீன மோகினி’ என்ற தலைப்பில் ராமநாதன் என்னும் இளைஞனைக் கதாநாயகனாக்கி எழுதத் தொடங்கினார். அவர் மறைந்ததனால் அது எழுதி முடிக்கப்படவில்லை.

இலக்கிய இடம்

பல்லவர்காலகட்டத்தில் சாளுக்கியர்களுக்கும் அவர்களுக்கும் நடந்த போரின் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது. காஞ்சி ஆலயங்கள், மாமல்லபுரம் ஆலயங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்துக்கொண்டு கதை சொல்லப்படுகிறது. அனைவருமே பெருந்தன்மையானவர்களாக காட்டப்படுகிறார்கல். திசைதிரும்பல் இல்லாமல் கதையோட்டம் கொண்டுள்ளது. பல்லவர்களின் காலகட்டத்தை கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் விரிவாக காட்டுகிறது. அதற்கு அடுத்த காலகட்டத்தின் சித்திரம் இந்நாவலில் உள்ளது. பொதுவாசிப்புக்குரிய மிகைசாகசத் தன்மை கொண்ட படைப்பு

உசாத்துணை


✅Finalised Page