under review

மா. கிருஷ்ணன்

From Tamil Wiki

To read the article in English: M. Krishnan. ‎

மா.கிருஷ்ணன்
மா. கிருஷ்ணன் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)
மழைக்காலமும் குயிலோசையும்
மாதவையா குடும்பப் புகைப்படம்

மா. கிருஷ்ணன்(ஜூன் 30, 1912 - பிப்ரவரி 18, 1996) எழுத்தாளர், சுற்றுசூழல் ஆர்வலர். தமிழில் சுற்றுசூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்.

பிறப்பு, கல்வி

மா. கிருஷ்ணன் திருநெல்வேலி, தச்சநல்லூரில் அ. மாதவையா, மீனாட்சி தம்பதியினருக்கு எட்டாவது மகனாக ஜூன் 30, 1912-ல் பிறந்தார். மா.கிருஷ்ணனுக்கு 13 வயது இருக்கையில் தந்தை அ.மாதவையா மறைந்தார். தன் அக்கா லட்சுமியம்மாளின் பராமரிப்பில் வளர்ந்தார். சென்னையில் அ.மாதவையாவின் வீடு மரங்கள் அடர்ந்து விரிந்த தோட்டம் கொண்டது. அதிலிருந்தே இயற்கை மேல் ஆர்வம் வந்ததாக மா.கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

மா.கிருஷ்ணன் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை சென்னை இந்து உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். 1931-ல் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தாவரவியலில் பி.ஏ. பட்டம்பெற்றார். 1934 முதல் 1936 வரை சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மா.கிருஷ்ணன் இந்துமதி ஹஸ்பானிஸ் ஐ 1937ல் மணந்தார். அவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் என ஒரு மகன்.

மா.கிருஷ்ணன் சட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெறவில்லை. ஆகவே வேலைகிடைப்பது கடினமாக இருந்தது. நீதிமன்ற உதவியாளராக சிறிதுகாலம் பணியாற்றிய பின் அசோசியேட்டர் பிரிண்டர்ஸ் என்னும் நிறுவனத்தில் ஓவியராக வேலைபார்த்தார். சென்னை கலைக்கல்லூரியில் (Madras School of Arts) விளம்பரத்துறை அலுவலராகவும் பணியாற்றினார். இந்திய அரசு வானொலியில் விளம்பரத்துறையிலும் குறுகிய காலம் அலுவலராக பணியாற்றினார்.

1938ல் இந்துமதி உடல்நிலை நலிவடைந்து மெலிய தொடங்கினார். மருத்துவர்கள் அவர் நகரை விட்டு செல்வது நல்லது என அறிவுறுத்தினர். இந்துமதியின் தந்தை கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகே இருந்த சந்தூரில் பணியாற்றி வந்தார். அவருடைய ஏற்பாட்டில் மா.கிருஷ்ணன் வானொலி வேலையை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் சந்தூர் அரசு ஊழியராக 1941ல் சந்தூருக்குச் சென்றார். 1950 வரை கிருஷ்ணன் சந்தூரில் பணியாற்றினார். அங்கே ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியை தொடங்கி நீதிபதியாகி, மன்னரின் விளம்பர அதிகாரியாகி, இறுதியில் மன்னரின் அரசியல் செயலாளராக திகழ்ந்தார். பின்னர் சென்னை திரும்பி முழுக்க முழுக்க எழுத்தின் வருமானத்தில் வாழ்ந்தார். மா.கிருஷ்ணனின் மகன் ஹரிகிருஷ்ணன் சூழியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்.

சூழலியல்

மா.கிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும் போது பிலிப் ஃபைசன் (Professor P.F. Fyson) என்ற தாவரவியல் பேராசிரியரால் ஈர்க்கப்பட்டார். அவருடனான நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கான பயணங்களில் பறவைகள் மீது ஈடுபாடு கொண்டார். கள ஆய்வின் நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றார். நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளரான ஆல்பர்ட் பௌர்ன் அவர் மனைவி எமிலி டிரீ கிளேஷேர் ஆகியோருடன் தொடர்பு உருவானது.

1942-ல் சந்தூர் சமஸ்தானத்தில் எட்டு ஆண்டுகள் பன்முகம் கொண்டதாக அவரது வேலை அமைந்தது. பாறைக் குன்றுகளால் சூழப்பட்டசந்தூர் பள்ளத்தாக்கின் நடுவே ஓடியது துங்கபத்ரை.சுற்றியிருந்த காடுகளில் காட்டுயிர்களை அவதானிக்கஅவருக்குக் கிடைத்த வாய்ப்பு, அன்றாடப் பணியின்அயர்வை நீக்கியது. வீட்டிலிருக்கும் வேளைகளில் ஆடு வளர்த்தார்; பந்தயப் புறாக்களை வைத்திருந்தார்.சில புறாக்களைக் கடிதம் கொண்டு செல்லவும் பழக்கி வைத்திருந்தார்.

சந்தூரின் வறண்ட காடுகளில் அலைவது கிருஷ்ணனின் பொழுதுபோக்காக இருந்தது. விரிவான தோட்டம் கொண்ட தன் -ல்லத்தில் வளர்த்த செல்லப்பிராணிகளைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தார். அவை அவருடைய எழுத்துக்களுக்கு பின்னர் உதவியாக அமைந்தன.

1950ல் சந்தூர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டபோது சென்னை வந்த கிருஷ்ணன் அரசுப்பணிக்குச் செல்வதை தவிர்த்து எழுத்தாளராக நீடிக்க முடிவுசெய்தார். ஆங்கில இந்து நாளிதழ், இலஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ,சங்கர்ஸ் வீக்லி ஆகிய இதழ்களில் சூழியல் கட்டுரைகளையும், கலை இலக்கியம் மற்றும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார்.

கல்கத்தாவிலிருந்து வெளியாகும் Statesman நாளிதழில் My Country Note Book என்ற மாதமிருமுறைத் தொடரை 1950 முதல் எழுதலானார். இது நாற்பத்தாறு ஆண்டுகள், அவர் மறைவது வரை, தொடர்ச்சியாக வெளிவந்தது. இத்தொடரில் கடைசிக் கட்டுரை அவர் இறந்து சிலநாட்கள் கழித்து அச்சேறியது. (இந்தியாவின் மிக அதிக காலம் வெளியான பத்தி என்ற பெருமை இதற்கு உண்டு.) அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் கிருஷ்ணன்தான் அது மட்டுமல்லாமல்,அன்று காட்டுயிர் பற்றி எழுதிக்கொண்டிருந்தவர்களில் துப்பாக்கி தூக்கி வேட்டையாடாத இயற்கைவாதியான கிருஷ்ணன் தனித்து நின்றார்.வளர்ப்பு பிராணிகள் குறித்த கிருஷ்ணனின் கதைகளைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன், காட்டுயிர்களைப் பற்றித்தமிழில் எழுத வேண்டுமென்று அவரை ஊக்குவித்தார்.கலைமகள் இதழில் கிருஷ்ணனின் கட்டுரைகள் பல வெளியாயின. பின்னர் கல்கி இதழிலும் எழுதினார்.தமது கல்லூரித் தோழர் பெரியசாமி தூரனின் அழைப்பின்பேரில் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்ற உயிரினங்கள் பற்றி மிக அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை அவர் எழுதினார்.

மா. கிருஷ்ணன் இந்திய வனவிலங்கு வாரியத்தில் (Indian Board for Wildlife) முப்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்தார். 1968-ல் இந்திய நாட்டுப் பாலூட்டிகளைப்பற்றி ஆய்வு மேற்கொள்ள 1968- 1970 ல் ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை நல்கை வழங்கப்பட்டது. இதைப்பெற்ற முதல் அறிஞர்களில் மா.கிருஷ்ணனும் ஒருவர். இந்திய தீபகற்பத்தில் விலங்குகளின் சூழலியல் நிலை (Ecological Survey of the Mammals of Peninsular India) பற்றி இரு வருடங்கள் ஆய்வு நிகழ்த்தி வெளியிட்டார். அவருடைய ஆய்வு இந்தியாவில் கானியல் வாழ்க்கை( India’s Wildlife, 1959-70 (BNHS) ) எனும் தலைப்பில் மும்பை இயற்கை கழகத்தின் சார்பில் ( Bombay Natural History Society) நூலாக வெளியிடப்பட்டது.

Nature's Spokesperson

மா.கிருஷ்ணன் இந்திய கானியலாளர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அரசு கானியல் பாதுகாப்புக்காக அமைத்த ஏராளமான கமிட்டிகளில் பணியாற்றினார். இந்திய கானியல் பாதுகாப்பு அமைப்பின் ( Indian Board for Wildlife) நிறுவனர்களில் அவரும் ஒருவர். 1960களில் கிருஷ்ணன் ஏராளமாகப் பயணம் செய்தார். இந்தியக் காடுகளை அரசு உதவியுடன் பார்வையிட்டு ஆவணப்படுத்த அவரால் இயன்றது. புலிகளைக் காக்க 1970-ல் நிறுவப்பட்ட Project Tiger திட்டத்தில் முக்கியப்பங்காற்றினார்.

மா.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் ’My Book of India Wildlife’, ’Jungle and Backyard’, ’India's Wildlife night and days’ போன்ற சுற்றுசூழல் நூல்களை எழுதினார். Nature's Spokesperson (M. Krishnan and Wildlife) என்ற பெயரில் கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டார். இதற்கு ராமச்சந்திர குஹா முன்னுரை எழுதினார்.

மா.கிருஷ்ணன் அயல்நாட்டின மரங்கள் இந்தியாவில் வளர்க்கப்படுவதை எதிர்த்தார். அமெரிக்கக்கண்டத்தின் இறக்குமதியான டபேபிவியா(Tabebuia) மரம் இந்தியாவில் வளர்வதை எதிர்த்தார். "ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்குட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப்பரவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படைகளையுமே சார்ந்ததாக இருக்க வேண்டும்" என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

புகைப்படக்கலை

சென்னையில் வாழ்ந்த தொடக்க காலகட்டத்தில் எழுத்தின் வருமானத்தில் வாழ கிருஷ்ணன் கடுமையாகப்போராடினார். படங்களை வரைவதுடன் புகைப்படக்கலையையும் கற்றுக்கொண்டார். தன் காமிராவில் (Super Ikonta by Zeiss-Ikon) அவர் எடுத்த தொடக்ககால புகைப்படங்கள் புகழ்பெற்றன. காமிராக்களை பழுதுநீக்குவதையும் கற்றுக்கொண்டார். கிருஷ்ணன் கடைசிவரை கறுப்புவெள்ளை புகைப்படங்கள் எடுப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். 35 எம் எம் ஃபிலிம்களில் படம் எடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அவற்றின் நெகெட்டிவ்கள் பெரியதாக இருப்பதனால் அவற்றை மேலும் பெரியதாக்கி துல்லியமாக ஆக்க முடியும் என எண்ணினார். கோடாக் நிறுவனம் 1966ல் மா.கிருஷ்ணனின் கானியல் புகைப்படங்களின் கண்காட்சி ஒன்றை சென்னையில் ஒருங்கிணைத்தது.

India's Wildlife

இலக்கிய வாழ்க்கை

1937 - 42-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலும்,பின்னர் சந்தூர் சமஸ்தானத்தில் வேலைபார்த்தபோதும்

அவரது கதைகளும் கட்டுரைகளுடன் தமிழ்ப்பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாயின. 1937 ல் மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார்.

1939முதல் 1941வரை வெளிவந்த சில்பஸ்ரீ என்ற இதழில் தமிழ் அறிஞர்களான வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலியோர் எழுதி வந்த சமயத்தில் இந்தப் பத்திரிகை கிருஷ்ணனின் எழுத்துகளுக்கு இடமளித்தது.முதலில் கிருஷ்ணன் சிறுகதைகள்தான் எழுதினார். தன்

இயற்பெயரிலும், 'கண்ணன்’ என்ற புனைபெயரிலும் தன்னுடைய சிறுகதைகளை இயற்கையியல் பின்னணியில் எழுதினார். பந்தயப் புறாக்கள், நாய்கள், தாவரங்கள் அவருடைய கதைகளில் பாத்திரங்களாக அமைந்தன.

மா.கிருஷ்ணன் ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். 'தான் உயிரோடிருந்தவரை அவர் எழுதிய கட்டுரைகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்' என்று ராமச்சந்திர குஹா தான் தொகுத்த மா.கிருஷ்ணன் பற்றிய புத்தகத்தில் கூறியுள்ளார். அவற்றில் ஒரு சிறுபகுதியே இன்று கிடைக்கிறது. 'Z' என்ற புனைபெயரில் தி இந்து நாளிதழில் எழுதி வந்தார். இவர் தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு புக் ஆஃப் பீஸ்ட்ஸ் (Books of Beast) என்ற தலைப்பில் வெளியாகியது.

கிருஷ்ணனுக்குத் தமிழ் செவ்விலக்கியத்தில் நல்ல பயிற்சி உண்டு. பல இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.சத்திமுத்தப் புலவர் எழுதிய "நாராய், நாராய்"பாடலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் நேர்த்தி இவரது திறமைக்குச் சான்று.

அவருடைய நண்பர் தி. ஜானகிராமன் எழுதிய 'அம்மா வந்தாள்’ நாவலை The sins of Appu’sMother என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,-ல்லஸ்ட்ரேடட் வீக்லி யில் தொடர்ந்து வெளியிட்டார்.பின்னர் இது ஒரு நூலாகவும் வெளிவந்தது.

மா.கிருஷ்ணன் தமிழில் மஞ்சரி, கலைமகள் ஆகிய இதழ்களில் எழுதினார். கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

மறு கண்டடைவு

தமிழில் மா.கிருஷ்ணன் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை. ’’1940களிலும் 50களிலும் எளிய தமிழில் கானுயிர், இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதி, சூழலியல் சார்ந்த கருதுகோள்களை அவர் விளக்க முற்பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நம்நாட்டிலோ அல்லது உலகளவிலோ கூடத் தோன்றியிருக்கவில்லை. வேட்டைஇலக்கியங்களைப் படித்து மகிழ்ந்து கொண்டிருந்த

காலமது. அவருடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம் கண்டுகொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம். மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும்,புலி அழிவின் விளிம்பிலிருப்பது பற்றியும் இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்து பற்றியும் ஒரு

தீர்க்கதரிசி போல் எழுதினார்’ என்கிறார் அவரது நண்பர் சு.தியடோர் பாஸ்கரன். மா.கிருஷ்ணன் மறைந்தபின் அவரது கட்டுரைத்தொகுப்பு ஒன்றை மழைக்காலமும் குயிலோசையும் என்னும் தலைப்பில் தியடோர் பாஸ்கரன் வெளியிட்டார். அது மா.கிருஷ்ணனுக்கு அடுத்த தலைமுறை வாசகர் நடுவே கவனத்தை பெற்றுத்தந்தது

சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இவர் எழுதிய பறவைகள் பற்றிய கட்டுரைகள் பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற பெயரில் பெருமாள்முருகனை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தன.

விருதுகள்

  • 1970 ல் மா.கிருஷ்ணனுக்கு இந்திய அரசு "பத்மஸ்ரீ" விருது வழங்கியது
  • 1995 ல் மா கிருஷ்ணன் ஐக்கியநாடுகள் சபையின் குளோபல் 500 கௌரவத்தை பெற்றார்(Global 500 Roll of Honour of the UNEP (United Nations Environment Program)
My Native Land

நினைவு விருதுகள்

சென்னை இயற்கையியலாளர் சங்கம் (Madras Naturalist Society )மா.கிருஷ்ணன் நினைவு விருது வழங்குகிறது[1]

மறைவு

மா. கிருஷ்ணன் தனது எண்பத்தி நான்காவது வயதில் பிப்ரவரி 18, 1996-ல் காலமானார்.

பங்களிப்பு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் மா.கிருஷ்ணன்தான்.முதுமலை சரணாலயம், பந்திப்பூர் சரணாலயம், ஜிம் கார்ப்பெட் தேசியப் பூங்கா ஆகியவை அமைவதில் மா.கிருஷ்ணனின் வழிகாட்டுதல்கள் முக்கியமானவை. சென்னை பாம்புப் பூங்காவின் நிறுவனர்களில் மா.கிருஷ்ணனும் ஒருவர்.

இந்தியாவில் பொதுவாசகர் நடுவே சூழியல் பற்றிய வாசிப்பார்வத்தை தூண்டியவை மா.கிருஷ்ணன் எழுதிய எளிமையும் அழகும் கொண்ட கட்டுரைகள். நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு பதிலாக மக்களிடம் நேரடியாகப் பேசும் குறுங்கட்டுரைகளே பெரிய விளைவை உருவாக்குபவை என நம்பினார். இந்தியாவின் சூழலியல் சார்ந்த எழுத்தில் மா.கிருஷ்ணன் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

தமிழில் கட்டுரைகள் எழுதும்போது பறவைகள், விலங்குகள், தாவர இனங்கள் இவற்றுக்கான தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடி பயன்படுத்துவது மா.கிருஷ்ணனின் வழக்கம். ஒரு மொழியில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் சூழியல் செய்திகள் பற்றிய பெயர்கள் அப்பண்பாட்டின் செல்வங்கள் என்றும், அவை மறைந்தால் நீண்டகாலமாக அச்சமூகம் சேர்த்துவைத்த அறிவும் அழிகிறது என்று மா.கிருஷ்ணன் குறிப்பிட்டார். இயற்கை பற்றிய சொற்களை ஆங்கிலத்தில் இருந்து அப்படியே மொழியாக்கம் செய்வதும் ஒருவகை சூழியல் அழிவு என குறிப்பிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • கதிரேசன் செட்டியாரின் காதல் (நாவல்)
  • My Book of India Wildlife
  • Jungle and Backyard
  • India's Wildlife night and days
  • Books of Beast
  • பறவைகளும் வேடந்தாங்கலும்
  • மழைக்காலமும் குயிலோசையும் (கட்டுரை)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page