under review

ம.தி.பானுகவி

From Tamil Wiki
பானுகவி

ம.தி.பானுகவி (1866-1926) தமிழறிஞர், சைவ அறிஞர், துறவி. இதழாளராகவும் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். திருவத்திபுரம் திருநாவுக்கரசு மடத்தின் தலைவராக இருந்தார். அருட்பா மருட்பா விவாதத்தில் இராமலிங்க வள்ளலார் தரப்பை ஆதரித்தார்.

பிறப்பு, கல்வி

1866 அட்சய ஆண்டில் கேரளத்தில் திருமலை என்ற ஊரில் சிவஞானம்- பார்வதி இணையருக்குப் பிறந்தார். பூக்கட்டி பண்டாரம் எனும் வகுப்பைச் சேர்ந்தவர். சிவஞானம் சைவ அறிஞர். இவர் காசிக்குச் சென்று குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி வராமையால் இறந்தவராக கருதப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. ஆகவே திரும்பி வந்தபோது ஊருக்குள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் செய்யாற்றங்கரையில் திருவத்திபுரம் (பழைய பெயர் திருவோத்தூர்) வந்து அங்கே கோயிலில் பணியாற்றினார்.

பானுகவி தந்தை காசி சென்றபின் சிலமாதங்கள் கழித்து பிறந்தவர். இளமையிலேயே தாயை இழந்தார். அத்தையால் வளர்க்கப்பட்டார். தன் பதினாறு வயதில் தந்தையை தேடிக் கிளம்பினார். பல ஊர்களிலும் அலைந்து திருவண்ணாமலை ஈசான மடத்தில் வந்து தங்கியிருந்தார். அங்கிருந்த மகாதேவ அடிகளிடம் சைவசித்தாந்தம் கற்றார். பத்தாண்டுகள் கழித்து திருவண்ணாமலை தீபத்திற்கு வந்திருந்தவர்கள் வழியாக மலையாளத்து பண்டாரம் ஒருவர் திருவத்திபுரத்தில் இருப்பதை அறிந்து அங்கே சென்று தந்தையைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தாறு.

திருவத்திபுரத்தில் அவர் தந்தை சிவஞானம் துறவுபூண்டு சிவஞான அடிகளாக மாறியிருந்தார். அவர் தங்கியிருந்த திருவத்திபுரம் திருவோத்தூர் திருநாவுக்கரசு சுவாமிகள் மடத்திலேயே பானுகவியும் தங்கினார். பானுகவிக்கு தந்தையே தமிழ் கற்பித்தார். பின்னர் சிதம்பரத்திற்கு அனுப்பி மேலும் தமிழ் கற்கச் செய்தார். பானுகவி திருவண்ணாமலை செல்வதற்கு முன்பு பொள்ளாச்சியில் சிவன்பிள்ளை என்பவரிடம் பிங்கலநிகண்டு கற்றிருந்தார். திருவத்திபுரத்திற்கு அண்மையில் இருந்த எச்சூரில் ஒரு சம்ஸ்கிருத பண்டிதரிடம் சம்ஸ்கிருதம் கற்றார். கேசவபிள்ளை என்பவரிடம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நான்மணிமாலை உள்ளிட்ட நூல்களையும் சைவசித்தாந்த கொள்கைகளையும் கற்றார்.

தனிவாழ்க்கை

பானுகவி தன் தந்தையிடம் தீட்சை வாங்கி துறவுபூண்டவர்.

இலக்கியப்பணி

1908-ல் தந்தை மறைவுக்குப்பின் சிலகாலம் திருவத்தியூரில் திருநாவுக்கரசு மடத்தில் சைவசித்தாந்தம் கற்பித்த ம.தி.பானுகவி பின்னர் சென்னைக்கு வந்து பிரபஞ்சமித்திரன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கே சூளை சோமசுந்தர நாயகர் ,நா.கதிரைவேற் பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியோருக்கு அணுக்கமானவரானார்.முதுமையில் மீண்டும் திருவத்தியூர் வந்து திருநாவுக்கரசு மடத்தில் தமிழ் கற்பித்தார். தமிழ்ப்பணிக்காக முத்தமிழ் ரத்னாகரம் என அழைக்கப்பட்டார்.

அருட்பா மருட்பா விவாதம்

ம.தி.பானுகவி தொடக்கத்தில் நட்பின் காரணமாகவும், சைவ மரபின்மேலுள்ள பற்றினாலும் கதிரைவேற்பிள்ளையை ஆதரித்தார். பின்னர் அத்தரப்பிலுள்ள சாதியநோக்கு மேல் ஒவ்வாமை கொண்டு விலகி இராமலிங்க வள்ளலாரை ஆதரித்து ’இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம்’ எனும் நூலை எழுதினார். (பார்க்க அருட்பா மருட்பா விவாதம்)

மறைவு

ம.தி.பானுகவி 1926 (குரோதன ஆண்டு பங்குனி 7) அன்று திருவத்திபுரத்தில் காலமானார். அவருடைய சமாதி திருநாவுக்கரசு மடத்தில் தந்தையின் சமாதி அருகிலேயே அமைக்கப்பட்டது.

நூல்கள்

செய்யுள்
  • சத்தித் திருப்புகழ்
  • இளமுலையம்மை பிள்ளைத்தமிழ்
  • திருவோத்தூர் இரட்டைமணிமாலை
  • திருமாற்பேறு புராணம்
  • திருவோத்தூர் நான்மணி மாலை
  • திருவோத்தூர் மும்மணிக் கோவை
  • இராமாயண நங்கைப்பாட்டு
உரைநடை
  • ஞானவச்சிர குடாரம்
  • வினாயக பராக்கிரமம்
  • சிவ
  • அனுமத் பராக்ரமம்[1]
  • நியாயவச்சிர குடாரம்
  • தோபா சாமி சரித்திரம்[2]
  • காமசாத்திரம்
  • பகவத்கீதை
  • சர்ப்ப சம்ரட்சணை
உரைகள்
  • கந்தபுராணம் கலாபூடண உரை
  • திருவிளையாடற்புராணம் அரும்பதக் குறிப்புரை
  • மகாராசா துறவு உரை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page