பிறர் மனைத் துயின்றமை விறலி கூறல்(பெருந்திணை)
பிறர் மனைத் துயின்றமை விறலி கூறல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று.தலைவன் பிறர் (பரத்தை) இல்லத்தில் தங்கியதை விறலி கூறுதல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பரத்தையர் சேரியில் தலைவன் தங்கியது உண்டு என விறலி (தலைவிக்கு) எடுத்துரைத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மற்றவர் சேரியில் மைந்தன் உரைந்தமை
இற்று என விறலி எடுத்துரைத்தன்று( கொளு 17.16)
வெண்பா
தண்தார் அணியவாம் தையலார் சேரியுள்
வண்டுஆர் வயல் ஊரன் வைகினமை - உண்டால்
அறியேன் அடியுறை ஆயிழையால் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு (340)
பொருள்: தலைவியாலே நான் நன்மைகள் பெற்றேன். கழனிகள் நிறைந்த ஊரினனான தலைவன், மாலையை அணிந்து ஒப்பனை செய்து கொண்டு இருக்கும் பரத்தையர் சேரியுள் தங்கிய செய்தி எனக்குத் தெரியும் என்பதைச் சொல்வேன். ஆனாலும் அது எனக்குத் தெரியாது.
தலைவியிடம் பொருள் பெற்றதால் உண்மையைக்(தலைவனின் பரத்தமைத் தொடர்பை) கூறவிரும்பும் விறலி, தலைவன் மீதுள்ள அச்சத்தால் அதை மறுத்தும் பேசுகிறாள்.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:38:50 IST